Skip to main content

‘நிவர்’ புயல் பெயர் ஏன்? எப்படி?... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020
nivar cyclone

 

 

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் பொறுமையாக ஐந்து கி.மீ. வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. சென்னைக்கு கிழக்கே 450 கி.மீ. மற்றும் புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து வருகிறது. இன்று மாலை ஐந்து மணிக்கு அதி தீவிர புயலாக நிவர் உருவாகிறது. தற்போதுவரை புதுச்சேரியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், புயல் கரையை நெருங்க நெருங்க அதனுடைய பாதை வட-மேற்கு நோக்கியும் மாறலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

நாளை கரையை கடக்கும் புயலுக்கு யார் நிவர் என பெயர் வைத்திருப்பார்கள். நாம் இதுவரை பார்த்த புயல்களுக்கு ஏன் இப்படி பெயர்கள் வைக்கிறார்கள் என்று பலருக்கு இந்த புயலுக்கு சூட்டப்படும் பெயர்கள் குறித்து பல கேள்விகள் எழுந்திருக்கலாம். அப்படி இந்த நிவர் என்று பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்...

 

நாளை கரையை கடக்கும் புயலுக்கு நிவர் பெயரை பரிந்துரை செய்தது ஈரான் நாடு. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்காக உருவாக்கப்பட்ட புது பெயர் பட்டியலில் மூன்றாவது பெயராக இது இருக்கிறது. இந்த வருடம் மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தை பெரிதும் சேதமாக்கிய அம்பான்(உம்பான்) புயலுக்கு பெயர் வைத்த நாடு தாய்லாந்து. கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்ட்ராவில் கரையை கடந்த நிஷாக்ரா புயலின் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிய கடலில் உருவாகி சோமாலியாவில் கரையை கடந்த கதி புயலுக்கு இந்தியாவின் பரிந்துரை செய்த பெயர் வைக்கப்பட்டது.

 

அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஒமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள்தான் இணைந்து புது புது பெயர்களை பரிந்துரை செய்கின்றன. உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ஒருசில அமைப்பு இணைந்து அவர்களுக்கான வழிமுறைகளில் இந்த பெயர்களை தேர்வு செய்கின்றன. ஒவ்வொரு நாடு சுமார் 13 பெயர்களை பரிந்துரை செய்கிறது. 

 

ஒரு நாடு 13 பெயர்களை பரிந்துரை செய்வதற்கு நிறைய நிபந்தனைகளும் உள்ளது. அது என்ன என்றால், குறிப்பிடும் பெயரில் அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை எல்லாம் கலக்காது பொதுவாக இருக்க வேண்டும். உலகரங்கில் இருக்கும் மக்கள் எவரின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இருக்கக்கூடாது. பெயரின் அளவு, அதிகபட்ச 8 எழுத்துகள்தான். அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் உச்சரிக்கும்படி இருக்க வேண்டும். அதேபோல வட இந்திய பெருங்கடலில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் பயன்படுத்தபட முடியாது. 

 

metrological

 

கதி, தேஜ், முரசு, ஆக், நீர் ஆகிய பெயர்களை இந்தியா, அடுத்து வர இருக்கும் புயல்களுக்கு பெயர் சூட்ட பரிந்துரை செய்திருக்கிறது. இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளின் பெயர்கள் ஆல்ஃபபெட்டிகல் ஆர்டரில் இருக்கும், அந்தந்த நாடு பரிந்துரை செய்யும் புயலுக்கான 13 பெயர்கள் பட்டியலில் வரிசையாக இருக்கும். மொத்தமாக 169 பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றிலிருந்து ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாட்டின் பரிந்துரைபடி அதில் இடம்பெற்றிருக்கும் பெயர்கள் பயன்படுத்தப்படும். 

 

தற்போது இருக்கும் பட்டியலின்படி நிவர் என்று ஈரான் பரிந்துரை செய்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்து அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரை செய்த புரேவி என்னும் பெயர் சூட்டப்படும். இதுபோல அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயலுக்கான பெயர் பட்டியல் உலக வானிலை ஆராய்ச்சி மையத்திடம் ரெடியாக உள்ளது. அடுத்து எங்கு புயல் ரெடியோ அதுக்கு பெயரும் ரெடி..

 

 

Next Story

‘மழையால் பாதித்த மக்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்’ போராட்டத்தில் விவசாயிகள் சங்கம்

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Farmers' Association in the struggle to 'build new houses for people affected by the flood
                                                            மாதிரி படம் 

 

புரவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில்  கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும் என்றும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

 

கரோனா பொது முடக்கத்தால் முற்றிலுமாக வேலை வாய்ப்பை இழந்து, வருமானமின்றி, வாழ் நாட்களை நகர்த்தவே படாதபாடு பட்டுக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு, நிவர் மற்றும் புரவி புயலால் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக முடங்கினர்.

 

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து விவசாய, மற்றும் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வீடு கட்டித் தரவேண்டும் என திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்தனர்.

 

போராட்டத்தில்  மத்திய மாநில அரசுக்கு  எதிராக  கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

 

 

Next Story

“கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தவுடன்  நிவாரணம் வழங்கப்படும்” - ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

"Relief fund will be provided after the completion of the survey work" - Collector Chandrasekara Sagamuri

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர், அரங்கூர், பட்டூர், கீழக்கல்பூண்டி ஆகிய பகுதிகளில் நிவர் மற்றும் புரவி புயலில் பாதிக்கப்பட்ட சோளம்,  பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அதனைத் தொடர்ந்து திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது திட்டக்குடி பேரூராட்சி  செயல் அலுவலர் மத்தியாஸிடம், பேருந்து நிலையத்தில் யாராவது தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தால் வண்டிகளையும் பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.  மேலும் பேருந்து நிலையத்துக்குள் தள்ளுவண்டிகள் வராத அளவில் வேலிகள் அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம், தள்ளு வண்டிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.


 

அதேபோல் வேப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரையூர், கண்டப்பங்குறிசி, அரசங்குடிம் நந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோளம், பருத்தி, உளுந்து, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் இதுவரையில் 40 ஆயிரம் எக்டேர் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து  கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்”  என்று கூறினார்.