Skip to main content

“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..!” “நான் என்ன ஏமாளியா?” ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
admk

 

 

எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமை கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.

 

admk

 

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடியும் பன்னீரும் தனித்தனியாக அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்தபோது, நிரந்தர முதல்வரே வருக என எடப்பாடி ஆதரவாளர்களும், வருங்கால முதல்வரே என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டு கோஷ்டி பூசலை அம்பலப்படுத்தினர். அதற்கேற்ப உள்ளேயும் நாகரீகமான முறையில் பூசல் வெடித்தது. 28-ந் தேதி கூடும் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்ட இரு தரப்பும் முஷ்டியை உயர்த்துவதால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு திடீர் மவுசு கூடியுள்ளது.

 

admk

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடக்கும் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஓப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்குவது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமிதான், இம்முறையும் அவரேதான்.

 

‘எனக்கு பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. இருக்கும் என அம்மா(ஜெ.) சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், கட்சியில் சமீபகாலமாக எதிரொலிக்கும் பிரச்சனைகள் ரசிக்கும்படியாக இல்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நீங்கள் ரெண்டு பேருமே (இபிஎஸ், ஓபிஎஸ்.) அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் தி.மு.கவையும் துரோகிகளையும்(தினகரன்) வீழ்த்துவதற்கு பயன்தரும்’’ என்றிருக்கிறார்.

 

admk

 

இதனையடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், "முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்வடைந்திருக்கிறார்கள். தொண்டர்கள் சோர்வடைந்தால் அது கட்சியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி நல்லா இருந்தாதான் ஆட்சியை நாம் மீண்டும் பிடிக்க முடியும். ஆட்சியில் நாம் இருக்கிறோம். ஆனா, இதன் நன்மைகள் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லைங்கிற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் சரி பண்ணுங்கள்'' என்றார்.

 

admk

 

ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகரன், "அம்மாவின் ஆன்மா உண்மையில் ஓ.பி.எஸ்.ஸிடம்தான் இருக்கிறது. அவரது மனதை காயப்படுத்துபோல பல நிகழ்வுகள் நடக்கிறது. அவர் மனம் வருந்தினால் கட்சிக்கு நல்லதில்லை'' என்று முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் எடப்பாடியும் அவருக்கு ஆதரவு அமைச்சர்களும் நடந்து கொள்வதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் பேசிக் கொண்டேயிருக்க, அமைச்சர் உதயக்குமார் சட்டென்று குறுக்கிட்டு, பேச்சின் திசையை மாற்றினார்.

 

 

admk

 

"தேர்தலை எதிர்கொள்ள எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தலைமை அவசியம். அந்த தலைமை உருவானால்தான் ஆட்சியை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்கு முன்பு சின்னம்மா (சசிகலா) விடுதலையாகும்போது அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தால் நமக்கு வெற்றி நிச்சயம்'' என்று உதயக்குமார் சொல்ல, அதனை அமைச்சர் செல்லூர் ராஜு வழிமொழிய, கூட்டத்தில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

 

admk

 

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா எதிர்ப்பு நிலையை துவக்கத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறோம். இப்போ திடீர்னு அவரை மையப்படுத்திப் பேசினால் எப்படி? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை விலக்கி வைத்துவிட்டு, கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற கட்டமைப்புக்குள் நாம் இயங்கிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அவரை உள்ளே நுழைப்பது வீண் பேச்சு. கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்மந்த மில்லைன்னு எல்லோரும் சேர்ந்துதானே முடிவு செய்தோம். இப்போ, அதற்கு மாறாக பேசினால் என்னன்னு நினைக்கிறது? சசிகலா விஷயத்தில் கட்சியில் எடுத்த முடிவுப்படி இத்தனை நாள் பேசிய நான் என்ன ஏமாளியா?''’என்று கோபம் காட்டியிருக்கிறார்.

 

admk

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசிய அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும், "தேவையற்ற பேச்சுகள் இங்கு தேவையில்லை. இந்த தேர்தல் நமக்கு சவாலான தேர்தல். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தலில் நமக்கான வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற அந்தச் சூழலில், சில முடிவுகளை தீர்மானித்திருந்தோம். ஆனால், இன்றைய சூழல்களுக்கு அது தேவையில்லை. அதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லிவிட்டு தேர்தலை சந்திக்கலாம். ஒற்றுமையாக, ஒரு மனதாக விவாதிப்போம்’ என்று சொல்ல, முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கு சரிப்பட்டு வராது. தேர்தலுக்கு பிறகுதான் அதனை முடிவு செய்ய வேண்டும்'' என்று வைத்தியலிங்கம் சொல்லவும் சலசலப்புகள் உருவானது.

 

admk

 

சட்டென்று எழுந்த அமைச்சர் சி.வி. சண்முகம், "முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவான கட்சியாக அ.தி.மு.க.வை விமர்சிப்பார்கள். ஏற்கனவே, இப்படி ஒரு முத்திரை நம் கட்சிக்கு இருந்துச்சு. மீண்டும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வரக்கூடாது. இப்போதுகூட, ஆட்சியில் கிடைக்கும் எல்லா நல்லவைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கே கிடைக்கிற நிலை இருக்கிறது‘’ என்று எடப்பாடியின் சமூகத்தை மனதில் வைத்துப் பேச, எதிர்ப்பு கிளம்பியது. ஆதாரத்துடன் பேசுவதாகவும், கோபத்தை கிளறி, உண்மையைப் போட்டு உடைக்க வைத்துவிடாதீர்கள்'' எனக் காட்டம் காட்டியிருக்கிறார் சண்முகம்.

 

சலசலப்புகள் அடங்கியது. மீண்டும் பேசிய அவர், குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சிங்கிற விமர்சனம் நமக்கு நல்லதல்ல. முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டுத்தான் தேர்தலை சந்திக்கணும்னு மக்களோ தொண்டர்களோ கேட்கலை. அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும்ங்கிறது நம் கட்சியின் பலம். இதில் குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்துவது தேவையில்லாதது'' என்றார் ஆவேசமாக.

 

எல்லாவற்றையும் எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வந்த நேரத்தில், எழுந்த ஓபிஎஸ், "அதிகாரத்துக்கு அடித்து கொள்வது நம் கட்சியில் யாருக்கும் இல்லாத பழக்கம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையாக இருந்து நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் சகோதரர் பழனிசாமியிடம் சொல்லி வருகிறேன். அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆட்சியும் கட்சியும் வலிமையாக இருக்க எந்த தியாகம் செய்யவும் நான் தயார். என்னை சந்திப்பவர்களிடமும் இதைத்தான் சொல்லி வருகிறேன்.

 

admk

 

நாம் தீர்மானித்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைப்பதுதான் ரொம்ப முக்கியம். இதனை அமைப்பதில் நாம் ஏன் சுணக்கம் காட்ட வேண்டும்? கட்சிக்குள் முரண்பாடுகள் வந்தால் அதனை சரி செய்ய வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்ங்கிற யோசனை சொன்னவர் நீங்கள்தான். இப்போ, அதற்கு எதிராக இருக்கிறீர்கள். வழிகாட்டும் குழுவை அமைத்து அதன் வழியாக தேர்தலை சந்திப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார் ஒரே போடாக.

 

இதனை ஏற்க மறுத்த எடப்பாடி, "கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம். இதுதவிர, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளோடு விவாதித்துத்தான் எடுக்கிறோம். அப்படியிருக்க புதிதாக ஒரு குழு எதற்கு? தேவையற்ற மனக்கசப்புகளும் குழப்பங்களும்தான் வரும். 11 பேர் எனில் அனைத்து சமூகத்தினரையும் இதில் திருப்திப்படுத்திட முடியுமா? வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா? அதனால் வழி காட்டும் குழுங்கிறது தேவையில்லாதது” என்று சொல்ல, கொங்கு அமைச்சர்களும், எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்கும் மற்ற அமைச்சர்கள் சிலரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

 

இதனையடுத்து, செயற்குழு-பொதுக்குழுவினை கூட்டி இறுதி முடிவை எடுக்கலாம் என கே.பி.முனுசாமி சொல்ல, அதனையடுத்து வருகிற 28-ந்தேதி செயற்குழுவை கூட்டுவது என முடி வெடுத்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அறிவிப்பு செய்தனர். கூட்டமும் முடிவுக்கு வந்தது.

 

கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவு அமைச்சர்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, "அனைத்து அமைச்சர்களையும் சுதந்திரமாக இயங்க அனுமதித்தும் என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? என்னை விட்டு விடுங்கள். யார் தலைமையில் வேண்டுமானாலும் தேர்தலை சந்தியுங்கள். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வது நான். ஆனா, எனக்கு எதிராகத்தான் இருப்பார்களெனில், நானும் தடலாடி அரசியல் செய்துதான் ஆக வேண்டுமா?'' என்று வெடித்திருக்கிறார் எடப்பாடி. அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் சமூக அமைச்சர்களை தவிர்த்து மற்ற சமூகத்தின் அமைச்சர்கள், மா.செக்கள் அனைவரையும் தன் தலைமையில் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஏற்கனவே, இது குறித்து ஒரு ரவுண்ட் பேசி முடித்துள்ள ஓபிஎஸ், தற்போதைய ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் அவர்களிடம் விவாதித்துள்ளார். 28-ந்தேதிகூடும் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியும், அதனை தடுக்கும் வியூகத்தில் ஓபிஎஸ்சும் தத்தம் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். செயற்குழுவில் தனக்கான ஆதரவு குரல்களே அதிகம் எதிரொலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் எடப்பாடி, அதற்காக என்ன விலை கொடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறார்.

 

admk

 

அதனை முறியடிக்க, ஜூனியர் அமைச்சர்கள், மா.செ.க்கள், ஒ.செ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு, "எடப்பாடியின் ஹிட் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள்; உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை; அவரையா நீங்கள் ஆதரிக்க போகிறீர்கள்?'' என எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் பேசி வருகின்றனர். செயற்குழுவில் வலிமைகாட்ட ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வியூகம் அமைப்பதால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்தபடி இருப்பதால் வெல்லப்போவது யார்? என்கிற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது.

 

 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.