Skip to main content

"யாருக்கும் சீட் கேட்கமாட்டேன்"...எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை...களத்தில் இறங்கும் அமைச்சர்கள்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் நடந்த நாங்குநேரி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில், எனது உறவினர்கள் யாருக்கும் சீட் கேட்கமாட்டேன் என அகில இந்தியத் தலைமையிடம் சொல்லிவிட்டேன் என்றார் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வும் கன்னியாகுமரியின் இப்போதைய எம்.பி.யுமான வசந்தகுமார். ஆனால் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு சீட் வாங்குவதில் மும்முரம் காட்டினார்.

 

congress



இவரின் விருப்பத்தின் பேரிலேயே விருப்பமனு கொடுத்தார் குமரி அனந்தன். சிலபல காரணங்களால் நிற்க மறுத்தார் குமரி அனந்தன். அடுத்ததாக, தனது சகலையான ஆலங்குளம் காமராஜை சீட் சீனுக்கு கொண்டுவர, வசந்தகுமார் முயன்றும் முடியவில்லை. கடைசியாக தனது சம்பந்தி ரூபி மனோகரனை களத்தில் இறக்கிவிட்டார். எத்தனை "சி' என்றாலும் தயார் என்ற முடிவுடன் களத்தில் குதித்திருக்கிறார் ரூபி மனோகரன்.


ரூபி மனோகரனை காங்கிரஸ் மேலிடம் ஓ.கே. சொல்வதற்கு முன்னால் மற்றொரு ரகசிய டீல் ஒன்றும் நடந்திருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வான ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ், மாஜி எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன் மூலமாக சீட்டுக்கு காய் நகர்த்தி, 25 "சி' வரை செலவழிக்கத் தயார் என கே.எஸ்.அழகிரிக்கு அட்வான்ஸ் சிக்னல் போட்டிருக்கிறார். ஆனால் அமிர்தராஜின் உறவினர்களோ ஒன்றரை வருஷ எம்.எல்.ஏ. பதவிக்கு இம்புட்டு செலவழிப்பது வேஸ்ட் என்றதும், சிக்னல் இடம் மாறி ரூபி மனோகரன் பக்கம் வந்துள்ளது.

தேர்தல் பணிகளை காங்கிரஸ் ஆரம்பிக்கும் முன்பே தி.மு.க. ஜரூராக ஆரம்பித்துவிட்டது. கட்சியின் து.பொ.செ. ஐ.பெரியசாமியின் தலைமையில், கடந்த 29-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட தி.மு.க. பெருந்தலைகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "நாங்குநேரியில் நிற்பது காங்கிரஸ் வேட்பாளர் தானேன்னு அலட்சியமா இருந்துடாதீங்க. நம்ம தளபதியே நிற்பதா நினைச்சு வேலை பாருங்க. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியப் பிடிப்பதற்கு இந்த இடைத்தேர்தல்தான் அச்சாரம்''’என உற்சாகமூட்டியிருக்கிறார் ஐ.பி. தேர்தல் பணிக்குழுவில் கருப்பசாமி பாண்டியன் பெயர் விடுபட்டிருப்பதை சிலர் சுட்டிக்காட்டியதும் "கானா'வின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சி தரப்பிலோ நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாராயணன் களம் இறங்கியிருக்கிறார். பொருளாதார ரீதியில் நாராயணன் சுமார் ரகம் என்றாலும், இது எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை என்பதால் அமைச்சர்கள் பட்டாளத்தின் பணப்பாய்ச்சல் தாராளமாக இருக்கும். இதை சமாளிப்பதில்தான் காங்கிரஸ் ரூபி மனோகரனின் சாமர்த்தியம் இருக்கிறது.
 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.