Skip to main content

கைலாசா எங்கே இருக்கு? காட்டிக்கொடுத்த வீடியோ! நித்தி அரெஸ்ட் எப்போது? 

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

ddd

 

கைலாசா நியாபகமிருக்கா? கரோனா காலத்தில் மறந்து போயிருந்ததை, லாக்டவுன் தளர்ந்து, விமான சர்வீஸ்கள் மெல்ல தொடங்கி, தடுப்பூசிகளும் வரும் நேரத்தில் கைலாசாவை மீண்டும் நினைவூட்டியிருக்கிறார் நித்யானந்தா. 

 

சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘கைலாசா நாட்டிற்கு வர விரும்புவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கைலாசாவிற்கென தனியாக 'விசா' எடுக்கத் தேவையில்லை. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவார 'விசா' எடுத்தால் போதும். கைலாசாவிற்கு வருவதற்காக முன்பதிவு செய்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்தால் அங்கிருந்து 'கருடா' எனப்படும் தனியார் விமான சர்வீஸ்கள் மூலம் அவர்கள் கைலாசாவிற்கு அழைத்துவரப்படுவார்கள். அப்படி வருபவர்கள் கைலாசாவில் மூன்று நாட்கள் தங்கலாம், சிவபெருமானை (நித்திதான்) நேரடியாகச் சந்திக்கலாம்’ என்று அறிவித்துள்ளார்.

 

பாலியல் வன்கொடுமை வழக்கில் நித்யானந்தா குற்றவாளி. அவரை இந்திய நீதிமன்றங்கள் விசாரணைக்கு அழைத்து வாரண்ட்டுகள் பிறப்பித்துள்ளன. ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடித்துக் கொண்டுவர ‘ரெட் கார்னர்' நோட்டீஸ் எனப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வேதேச போலீஸ் உதவியும் நாடப்பட்டுள்ளது.

 

அப்படிப்பட்டவர், ஆஸ்திரேலியாவிற்கு பக்கத்தில் "கைலாசா' என்ற நாட்டை உருவாக்கி விட்டதாகவும், ஐ.நா. சபையில் தனிநாடு அந்தஸ்து கோருவதாகவும் கூறுகிறார். அந்த நாட்டிற்கு வருவதற்கான வழியைச் சொல்லி, தனது தரிசனத்திற்காக பணமும் வசூல் செய்கிறார். இந்திய நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்படாதவர் போல நடந்துகொள்கிறார். எப்படி இது சாத்தியம்?

 

இது பற்றி நித்யானந்தாவிற்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம், "நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு 'நானும் ரவுடிதான்' என்பது போன்ற அலப்பறை. இதுபோல பல அறிவிப்புகளைப் பொய்யாக வெளியிடுவார். அவரை இந்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘ரெட் கார்னர்' நோட்டிஸும், சர்வேதச பிடிவாரண்டும் தன்னைப் பாதிக்காது என்று நித்தியானந்தா சொல்கிறார்.” என்று தெரிவித்தனர்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரன் மீது இந்திய அரசு வழக்குப் பதிவுசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்து, இன்டர்போல் போலீஸ் உதவியை நாடியது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "நடக்கிற கதை எதையாவது கதைக்கச் சொல்லுங்கள்'' என்றார் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன். அந்த மாவீரனுக்கான பிடிவாரண்ட்டுடன் தனக்கானதை மமதையுடன் ஒப்பிட்டுக் காட்டி ஏளனமாகச் சிரிப்பது நித்தியானந்தா வழக்கம் என்கிறார்கள் ஆசிரமவாசிகள். ‘பிரபாகரனிடம் படை இருந்தது. என்னிடம் பணம் இருக்கிறது’ என்பாராம்.

 

நித்தியானந்தா நேரடியாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவில்லை. நேபாள நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். அப்போதே தனது காலாவதியான இந்திய பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்துவிட்டார். பெலிக்ஸ் என்கிற கரீபியா நாட்டின் குடிமகன்தான் தற்போதுள்ள நித்தியானந்தா. அந்த நாட்டின் பாஸ்போர்ட்டில்தான் அவர் வெளிநாடுகளில் சுற்றித் திரிக்கிறார். இந்திய அரசு இன்டெர்போல், ரெட் கார்னெர் நோட்டீஸ்களைக் கொடுத்து தீவிரமாக தேடியபோது அவர் எந்த நாட்டிலும் தங்கவில்லை. கரீபிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆழ்கடலில், சர்வதேச கடல் எல்லைகளில் கப்பலில் சுற்றித் திரிந்தார். இப்போழுது கரையொதுங்கியிருக்கிறார். கொரோனா நடவடிக்கைகளால் அவரைத் தேடுவதை இந்திய அரசு நிறுத்திவிட்டதால் கைலாசா நாட்டிற்கு வாருங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

வீடியோவில் உள்ள தகவலின்படி பார்த்தால், இவர் தங்கியிருப்பது வணுவாட்டி என்கிற தீவில்தான் என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து 750 கிலோமீட்டர் தொலைவில், அமெரிக்காவின் நார்த் கலிஃபோர்னியாவிலிருந்து 540 கிலோமீட்டர் தொலைவில், நியூ கினியா என்கிற மேற்கிந்திய தீவுகளின் கிழக்குப்பகுதியில் புகழ்பெற்ற 'சாலமன் ஐலேண்ட்' என்கிற தீவின் தெற்குப்பகுதியில் இந்த வணுவாட்டி தீவுகள் அமைந்துள்ளன. 1980-ஆம் ஆண்டு பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வணுவாட்டி குடியரசு 4,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட தீவுக்கூட்டங்கள் ஆகும். இதில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.

 

வெறும் 6 சதவிகித விவசாய நிலங்களைக் கொண்ட இந்த நாட்டில், பொங்கும் எரிமலைகளும் கடும்புயல்களும் சகஜம். இந்த நாடு சுவிட்சர்லாந்தை (ஸ்விஸ்) போல வங்கிகளைக் கொண்டது. எந்த நாட்டில் இருந்தும் இந்த நாட்டு வங்ககளில் பணம் போடலாம். அதைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை வணுவாட்டியில் வைத்துள்ளார் நித்யானந்தா. அவரது ஆன்லைன் யோகா வகுப்புகளுக்கான கட்டணம் வணுவாட்டி வங்கி மூலம்தான் வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

 

மொத்தத்தில் 'கைலாசா' என்பது வணுவாட்டியைச் சுற்றியிருக்கும் மனித நடமாட்டம் இல்லாத, குடிக்க தண்ணீர்கூட இல்லாத தீவுகளில் ஒன்று என்பதை ‘எங்கப்பன் குதுருக்குள் இல்லை' என்பதைப் போல நித்தியே வெளிப்படுத்தி, மாட்டிக்கொண்டார் என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

 

அவராக மாட்டுவது இருக்கட்டும், மத்திய அரசு எப்போது அவர் கையில் விலங்கு மாட்டும் எனக் கேட்கிறார்கள் நித்தி ஆசிரமத்தில் பலவித கொடூரங்களை அனுபவித்தவர்கள்.

 

Next Story

ஐ.நா.வில் ஆட்டம் போட்ட நித்தி சிஷ்யைகள்; கசிந்த கைலாசா ரகசியம்!

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Nithiyantha kailasa UN ConferenNithiyantha kailasa UN Conference ce
கோப்புப் படம் 

 

ஐ.நா. அமைப்பு பெண்கள் மேம்பாடு தொடர்பாக நடத்திய மாநாடு ஒன்றில், ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளக் கூடிய கூட்டங்களில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் கலந்துகொண்டு, நித்தியானந்தா மீது மனித உரிமை மீறல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி நாடகமாடியுள்ளனர்.

 

தன் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் 2019-ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய நித்யானந்தா, ஆன்மிக வியாபாரத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் ஈக்வடார் கடற்கரைப் பகுதியில் சில தீவுக்கூட்டங்களை வாங்கி அதற்கு கைலாஸா எனப் பெயரிட்டு அங்கேயே தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

 

இந்தியாவை விட்டே தப்பியோடியிருந்தாலும் அவருக்கு மீண்டும் இந்தியா திரும்பவும் இங்கு மீண்டும் ஒரு ஆன்மிக(?) சாம்ராஜ்யத்தை நிறுவவும் ஆசையிருப்பதால் சமூக ஊடகங்கள் மூலம் கைலாஸா குறித்த செய்திகளைத் திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார். அவரது வலைத்தளம் உலகின் முதல் இந்து நாடு கைலாஸா எனவும் இங்கே இருபது லட்சம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கிறது. கைலாஸாவுக்கென தனி வங்கி, கொடி, பாஸ்போர்ட் ஆகியவை உள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும் உலகம் கைலாஸாவை இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

 

இந்த நிலையில்தான் பிப்ரவரி 22, 2023 அன்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஜெனிவாவிலுள்ள ஐ.நா. சபையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது நிறைவுற்ற சில தினங்களில் கைலாஸாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கைலாஸாவின் பிரதிநிதிகள் குறித்த படங்களும் செய்திகளும் வெளியாகத் தொடங்கின.

 

Nithiyantha kailasa UN Conference

 

“உலக அரங்கில் ஜொலிக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாஸா! ஐ.நா. மாநாட்டில் பெண்கள் தலைமைத்துவம் பற்றிய பேச்சில் பிரதிநிதித்துவம்! என்றொரு செய்தி நித்தியானந்தா தரப்பினரால் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பின் வெகுவாகப் பரப்பப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைவதற்கான குழுவின் 84-வது அமர்வில், ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் மா விஜயப்பிரியா நித்தியானந்தா, லாஸ் ஏஞ்சல்ஸ் கைலாஸாவின் தலைவர் மா முக்திதா ஆனந்தா, செயிண்ட் லூயிஸின் கைலாஸா தலைவர் மா சோனா காமத், யுனைடெட் கிங்டத்தின் கைலாஸாவுக்கான தலைவர் நித்ய ஆத்மதாயகி, ப்ரான்ஸின் கைலாஸாவுக்கான தலைவர் மா பிரியப்ரேமா நித்யானந்தா ஆகியோர் உள்ளிட்ட குழு பங்கேற்றது.

 

பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள், வன்முறைகள் பற்றிப் பேச பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் இந்துப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக கைலாஸாவின் பெண் உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர் என நீள்கிறது அந்தச் செய்தி. இந்தச் செய்தி, கைலாஸாவை ஒரு நாடாக ஐ.நா. அங்கீகரிக்கிறதா… கைலாஸா பிரதிநிதிகளுக்கு ஐ.நா.வில் அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால் பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் நித்தியானந்தாவின் டுபாக்கூர் வேலையை அம்பலப்படுத்தின. இந்தச் செய்தி குறித்து விளக்கமளித்திருந்த ஐ.நா. அதிகாரி, “கைலாஸா பிரதிநிதிகள், சமர்ப்பித்த விஷயங்கள் ஐ.நா. பேசிய பிரச்சினைகளிருந்து விலகியவை, அவற்றோடு தொடர்பற்றவை” என்றார். மேலும், “இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாஸா இடம்பெறவில்லை. அரசுசாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் என யாரும் பங்குபெறக்கூடிய பிப்ரவரி 22, 24-ல் ஐ.நா. நடத்திய இரண்டு பொதுக்கூட்டங்களிலேயே கைலாஸா பிரதிநிதிகள் பங்குபெற்றனர்” என்கிறார் இந்தப் பொதுக்கூட்டங்களை மேற்பார்வை செய்த விவியன் குவாக்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பலாம் என சொல்லப்பட்டபோது, ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட விஜயப்பிரியா நித்யானந்தா, கேள்வி கேட்பதுபோல் எழுந்து, “கைலாஸாவின் குடிமக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி அனைத்தும் இலவசம். தன்னிறைவான வளர்ச்சியுடன் திகழும் நாடு” என்று கூறியதுடன், “இந்து மதத்தின் பூர்விக மரபு, வாழ்க்கை முறைகளைப் புதுப்பிப்பதற்காக நித்தியானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். கைலாஸா மக்களும் அதேபோல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதை நிறுத்த தேசிய, சர்வதேச அளவில் என்ன செய்யலாம்?” என கேள்விகள் கேட்டுள்ளார்.


ஆக, யார் வேண்டுமானாலும் பங்குபெறக்கூடிய ஐ.நா.வின் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு அவற்றின், புகைப்படம், வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் கடைபரப்பி, கைலாஸா ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோலவும், கைலாஸாவுக்கு நாடுகள்தோறும் தூதர்கள் இருப்பதுபோலவும், நித்தியானந்தாவை இந்தியாவே துன்புறுத்துவது போலவும் சீன் போட்டுள்ளனர் நித்தியின் சிஷ்யைகள்.


இந்தியாவில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு பதிலளிக்கவியலாத நித்தியானந்தா, எட்டாத தொலைவிலிருக்கும் தைரியத்தில் தன் மீது மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா. கூட்டங்களில் தனது சீடர்களை வைத்து நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

 

- க.சுப்பிரமணியன்

 

Next Story

தொடர் சர்ச்சையில் பாஸ்கரானந்தா; பழங்கால முருகன் சிலை பறிமுதல்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Bhaskarananda in serial controversy; Seizure of ancient Murugan idol

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

 

3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். 

 

கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.