Skip to main content

அதிமுகவுக்கு சவப்பெட்டி செய்து ஆணி அடித்த எடப்பாடி பழனிசாமி, பொன்விழா கொண்டாட என்ன இருக்கிறது..!! - அரசியல் விமர்சகர் காந்தராஜ்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

கதர

 

 

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை, அம்மா ஆட்சி விரைவில் அமையும்" என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்ற பொருள்படும்படி கல்வெட்டைத் திறப்பது, அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என தனி ரூட்டில் சென்றுகொண்டிருக்கிறார். அதிமுகவில் நடப்பது என்ன, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளை மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? 

 

ஓ.. எனக் கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை எப்படி உருவாக்கினார். மக்கள் செல்வாக்கில் அதிமுகவை முதலிடத்திற்கு கொண்டு சென்றார். மக்கள் கூட்டம் என்று கூட சொல்லக் கூடாது. மக்கள் வெள்ளத்தை அதிமுகவுக்கு கொண்டு வந்தார். ஆனால் இந்த இயக்கம் தற்போது எப்படி இருக்கிறது. ஜெயலலிதா அதிமுகவை பாதி அழித்தார், எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டி வாங்கி தற்போது ஆணி அடித்துள்ளார். பொன்விழாவில் என்ன இருந்தது, ஒன்றுமில்லை. பொன் மட்டும்தான் அவர்களிடம் இருக்கிறது, விழாவைக் காணோம். 

 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அதிமுகவுக்கு எதிர்காலம் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். இனி எப்படி அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கப்போகிறது. அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரிந்தவரை ஏதாவது இருக்கிறதா என்றால், அப்படி எதுவும் இல்லை. தமிழகத்தில் நடைபெறுகின்ற எந்தப் பிரச்சனைகளுக்காவது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளாரா? நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நேராக அண்ணாமலையிடம்தானே செல்கிறீர்கள். அண்ணாமலை நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறாரா என்ன? இப்போதுதானே 4 பேர் அந்தக் கட்சியிலிருந்து சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்.  செந்தில் பாலாஜி மீது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதானே கூற வேண்டும், வழக்கு தொடுக்க வேண்டும். ஆனால் அண்ணாமலைதானே அனைத்திற்கும் பதில் சொல்கிறார், கருத்து தெரிவிக்கிறார். நிலைமை அப்படியிருந்தால் அதிமுகவுக்கு எங்கே எதிர்காலம் இருக்கப் போகிறது என்பதே என்னைப் போன்றோரின் கேள்வியாக இருக்கிறது. 

 

அதிமுகவை இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒழித்துக்கட்டிவிட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து நீண்டநாட்களாக பாஜக சாயலில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவின் எம்.பி. ரவீந்திரநாத் லெட்டர் பேடில் யார் படம் இருக்கிறது, எம்ஜிஆர், ஜெயலலிதா படமா இருக்கிறது, மோடி படம் இருக்கிறது, இவர்கள்தான் அதிமுகவை வாழவைப்பவர்களா? அதிமுகவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இல்லாத அதிமுகவுக்கு என்ன பொன்விழா வேண்டி கிடக்கிறது. நான்கு மாதத்திற்கு முன்புவரை இவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் என்ன வெற்றி பெற்றார்கள், மிக கேவலமான தோல்வியைப் பெற்றுள்ளார்கள். 60 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள், அந்த எம்எல்ஏக்கள் பின்னணியில் தற்போது மக்கள் இருக்கிறார்களா? வென்ற அனைத்து எம்எல்ஏக்களும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வெற்றிபெற்றார்களா? கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் என்று குறிப்பிட்ட பகுதியில் வென்றவர்கள்தானே இவர்கள் அனைவரும். பிறகு எப்படி அதிமுகவுக்கு இன்றளவும் செல்வாக்கு இருப்பதாக நம்புவது? 

 

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு எப்போதோ சவப்பெட்டி செய்து ஆணி அடித்துவிட்டார். இந்த ஜெயக்குமார் போன்றவர்கள் பார்த்துப் பேச வேண்டும். தங்களுக்கென்று கொள்கை இருக்கு, நாங்கள் என்ன குழந்தைகளா என்று கேள்வி கேட்பது அமித்ஷாவுக்கு தெரிந்தால் ஜெயக்குமார் அவ்வளவுதான். திமுக ரெய்டை கூட சமாளித்துவிடலாம், ஆனால் இவர்கள் கையில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என பல அயிட்டங்களை வைத்துள்ளார்கள், எனவே ஜெயக்குமார் கட்சிக்கு விரோதமாக, பாஜகவுக்கு எதிராக பேசக்கூடாது, அவர் நல்லதுக்காக! சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரும் அதிமுக தலைவர்கள் இல்லை. இவர்கள் அனைவருக்கும் தலைவர் அமித்ஷா, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி இங்கு நடப்பார்கள். முதலில் பன்னீர்செல்வத்தை பயன்படுத்திப் பார்த்தார்கள், பிறகு எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தினார்கள். ஆனாலும் ஒன்றும் தேறவில்லை என்பதால் தற்போது சசிகலாவை பயன்படுத்தி பாஜகவுக்கு லாபம் கிடைக்குமா என்று கணக்கு போடுகிறார்கள். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.