Skip to main content

நமக்கு நல்ல சிக்னல் கிடைச்சிருக்கு..! அமைச்சர்களிடம் எச்சரிக்கை தொனியில் பேசிய எடப்பாடி!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இடைக்கால பட்ஜெட் இம்மாதம் 22-ந்தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அளிக்க திட்டமிட்டு, என்ன மாதிரியான சலுகைகளை அறிவிக்கலாம் என பொருளாதார நிபுணர்களுடன் விவாதித்து முடித்திருக்கிறார் எடப்பாடி.

 

குறிப்பாக, "இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பெண்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கையை தேர்தல் களத்தில் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், இலவசங்கள், தள்ளுபடிகள் என சில பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி'' என்கின்றனர் பேரவை செயலக அலுவலர்கள்.

 

இதுகுறித்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக கேபினெட் கூட்டத்தை 13-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடத்திய எடப்பாடி, தமிழக தொழில்துறை மூலம் நிறைவேற்ற வேண்டிய சில திட்டங்களுக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். கேபினெட்டின் ஒப்புதல் பெறுவதையும் கடந்து, அந்த கூட்டத்தில், தேர்தல் அரசியல் மற்றும் கட்சி அரசியல் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த விவகாரம் கட்சியின் சீனியர்கள் மட்டத்தில் எதிரொலிக்கும் நிலையில், அது குறித்து நாம் விசாரித்தபோது, "கேபினெட் கூட்டம் முடிந்ததும் அதிகாரிகளை வெளியே அனுப்பிவைத்து விட்டு தேர்தலை சந்திப்பது பற்றி அமைச்சர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி. அப்போது, உளவுத்துறை எனக்கு கொடுத்துள்ள சர்வே ரிப்போர்ட்டில், எந்த ஒரு கட்சிக்கும் 100 சதவீத ஆதரவு அலை வீசவில்லை. சர்வே எடுக்கும் போது ஒரு விதமாகவும், தனிப்பட்ட முறையில் பேசும்போது ஒரு விதமாகவும் கருத்துகளை வாக்காளர்கள் பதிவு செய்கிறார்கள். அதனால் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு தேர்தல் பணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது'' என உளவுத்துறை சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார் எடப்பாடி.

 

மேலும், ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள பிரச்சனைகள், வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் விவகாரங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் என பல விசயங்களை உளவுத்துறை தனது ரிப்போர்ட்டில் கொடுத்திருப்பதையும் பகிர்ந்து கொண்ட எடப்பாடி, அம்மா (ஜெ.) இருக்கும் போது தேர்தலில் எப்படி கவனம் செலுத்துவோமோ அதே தீவிரத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுத்தது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஆகியவை நமக்கு நல்ல சிக்னலை தந்திருக்கிறது. புதுசா நாம் சொல்லப்போகும் அறிவிப்புகளும் நமக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். அதனால், அமைச்சர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டிவிட்டு தேர்தல் பணி செய்யுங்கள். மீண்டும் ஒரு குடும்பத்தின் அதிகார வளையத்துக்குள் நாம் சிக்கிவிடக் கூடாது எனச் சொல்லியுள்ளார் .

 

அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., "நாம் என்ன பேசுகிறோம்னு தெரியாமலே சில அமைச்சர்கள் பேசிவிடுகிறார்கள். அது சரியில்லை. சட்ட அமைச்சர் (சி.வி.சண்முகம்) சமீபத்தில் பேசியவை குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்வதாக இருக்கிறது. ஒருமையில் பேசுவதும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதுமான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்'' எனச் சொல்ல, சீனியர் அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்சின் கருத்தை ஆமோதித்ததோடு, "சட்ட அமைச்சர் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது வார்த்தைகள் ரொம்பவும் ஓவர்'' என ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

 

ddd

 

"நேற்றே அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன்'' எனச் சொன்ன சி.வி.சண்முகம், "குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி நான் பேசவில்லை. என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் அவரை (டிடிவி தினகரன்) மையப்படுத்தி மட்டும்தான்'' எனச் சொல்லியிருக்கிறார்.

 

அப்போது, "இனி பேட்டி கொடுக்கும் போதோ, நிகழ்ச்சிகளில் பேசும் போதோ அமைச்சர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் ஒருமையில் பேசாதீர்கள். அநாகரீகமாக சின்னதாக நாம் நடந்துகொண்டால் கூட அதுதான் பெரிதாகக் காட்டப்படும். அநாகரீகமாக நாம் நடந்து கொள்வதைத்தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குப் பலியாகிவிடாதீர்கள்'' என எச்சரிக்கை தொனியில் பேசியுள்ளார் எடப்பாடி" என்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு நடந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.

 

cnc

 

இந்த விவாதம் முடிந்ததும் ஒவ்வொரு அமைச்சரும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறி தங்களின் துறை அலுவலகத்திற்குத் திரும்பினர். சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மூவரும் காரிடாரில் பேசிக்கொண்டே நடந்தனர். அப்போது, "நிதானமிழந்து நான் பேசுவதாக தினகரன் சொல்கிறார். நிதானமிழந்துங்கிற வார்த்தை, கேட்க டீசண்டாக இருக்கலாம். ஆனா, அது என்னை கேவலப்படுத்துற வார்த்தைதானே? அதான், அப்படி பேசினேன்'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

 

சண்முகத்தின் பேச்சு அ.ம.மு.கவில் மட்டுமின்றி, அதிமுகவில் சாதி ரீதியாகவும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. அதாவது, இரு பெரும் சமூகத்திற்கிடையே மோதலை உருவாக்க ஆட்சியாளர்கள் தரப்பில் சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு சண்முகத்தைப் பயன்படுத்துகின்றனர் என்கிற குரல் அதிமுகவிலுள்ள வன்னியர் சமூகத் தலைவர்களிடம் எதிரொலிக்கிறது.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.