Skip to main content

‘அவங்களே திருந்திருவாங்க; கண்டுக்காதீங்க!’ - அமைச்சரின் தலையீட்டை போட்டுடைத்த ஆட்சியர்!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

Virudhunagar Achankulam crackers accident collector and minister

 

‘மாவட்ட ஆட்சியர்களை ஆட்சியாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை..’ என்று பொதுவாக விமர்சனம் எழும் நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தலையீடு குறித்து, வெளிப்படையாகவே பேசினார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன். அதனால் ஏற்பட்ட பரபரப்பில், மைக் ஆஃப் செய்யப்பட்டு, செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டு, ஆய்வுக்கூட்டத்தை ‘ரகசியமாக’ நடத்தியதாக,  சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  

 

கடந்த 12-ஆம் தேதி, அச்சங்குளம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, 21 பேர் பலியாகி, 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஆட்சியர் கண்ணன் இப்படி பேசினார்; “கடைசியா நடந்த விபத்துலகூட பார்த்தீங்கன்னா.. சின்ன சின்ன வயலன்ஸ் இருந்தா வார்ன் பண்ணிட்டு வந்திருவோம். டெய்லி பிடிச்சோம். பட்டாசுத் தொழில் கொஞ்சம் சிரமத்துல இருக்கிறதுனால பார்த்துக்கிட்டு இருக்கோம். அமைச்சர் நீங்க திரும்பத் திரும்ப சொல்றீங்க.. ‘வயலன்ஸ் எல்லாம் வந்து அவங்களுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்க.. அவங்களே திருந்திருவாங்க.. நெருக்கிப் பிடிக்காதீங்க’ன்னு.. நீங்க சொல்றதுனாலதான், நாங்களும் பெருசா எதுவும் பண்ணல.” என்று விளக்கம் தந்தார். 

 

தன்னுடைய பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர், “அமைச்சர் சொல்லுறத கேட்கிறதுக்கா கண்ணன் சார் கலெக்டரா இருக்காரு? என்னமோ, ராஜேந்திரபாலாஜி மந்திரியானதுக்கு அப்புறம்தான் பட்டாசு விபத்துகள் நடக்கிற மாதிரி பேசிருக்காரு. என்கிட்ட புள்ளிவிபரம் இருக்கு. ராஜேந்திரபாலாஜி அமைச்சரானதுக்கு முன்னால உள்ள பத்து (2000 – 2010) வருஷத்துல, 162 விபத்து நடந்திருக்கு. 201 பேர் செத்திருக்காங்க. அப்பல்லாம், எந்த மந்திரி தலையிட்டு, அதிகாரிகள் ஆய்வு நடத்தாம இருந்தாங்க? ஆய்வுங்கிறது சும்மா கண்துடைப்புக்குத்தான். ஆய்வுன்னு சொல்லி லஞ்சம் லஞ்சமா வாங்கிக் குவிக்கிறதுதான் அதிகாரிகளோட வேலையே. எங்கே விபத்து நடக்கும்? எத்தனை பேரு சாவாங்க? அதை வச்சு எவ்வளவு பணம் பிடுங்கலாம்? திரும்பவும் அந்த ஃபேக்டரிய ஓட்டுறதுக்கு எம்புட்டு லஞ்சம் வாங்கலாம்? இந்தக் கணக்கு மட்டும்தான் அதிகாரிங்க மண்டைக்குள்ள ஓடும்.

 

இன்னொரு விஷயம். உலக மகா நீதிமானே வந்து பட்டாசு ஆலை நடத்தினாலும், விதிமீறல் இல்லாம நடத்த முடியாது. அந்த அளவுக்கு சிக்கலான தொழில் இது. தடை பண்ணனும்னு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போயி, நொம்பலப்பட்டு இருக்கோம். கிட்டத்தட்ட பட்டாசுத் தொழிலே அழியிற நிலைமைக்கு வந்திருச்சு. ஆனாலும், அதிகாரிங்க ஆய்வுன்னு சொல்லி,  நோட்டீஸ் விட்டு பணம் பறிக்கிற வேலையை விடல. இப்படி ஒரு நிலைமையில நாங்க இருக்கிறப்ப, கலெக்டர்கிட்ட அமைச்சர் ‘பட்டாசு ஆலை நடத்துறவங்க பாவம் சார்.. ரூல்ஸ்ன்னு கறார் பண்ணி அவங்கள தொந்தரவு பண்ணாதீங்க. நடவடிக்கைக்குப் பதிலா, என்னென்ன விதிமீறல்ங்கிறத சுட்டிக்காட்டி, அதைச் சரிபண்ணச் சொல்லுங்க’ன்னு எங்க சார்பா கேட்டுக்கிட்டாரு. இந்தத் தப்பை எங்களுக்காகத்தான் அமைச்சர் பண்ணுனாரு. 

 

இன்னொரு விஷயமும் இருக்கு. பெரிய ஃபேக்டரிகள்ல பெரும்பாலும் விபத்து நடக்கிறது இல்ல. ஏன்னா, அவங்களுக்குத் தெரியும். இதெல்லாம் வேகவேகமா அவசர அவசரமா பண்ணுற தொழில் இல்லைன்னு. கூடிய மட்டிலும் விதிகளை மீறுவதில்லை. சின்ன ஃபேக்டரிகாரங்க, குறிப்பா கள்ளத்தனமா வீடுகள்ல பட்டாசு தயாரிச்சிட்டு, இப்ப கொஞ்சம் முன்னுக்கு வந்து,  குத்தகைக்கு எடுத்து, ஃபேக்டரி நடத்துறவங்க பேராசை பிடிச்சவங்களா இருக்காங்க. குறுகிய காலத்துல நெறய சம்பாதிக்கணும்னு, விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அதிகமா உற்பத்தி பண்ணுறதுலயே குறியா இருக்கிறாங்க. 21 பேர் பலியான அச்சங்குளம் விபத்துகூட, அந்தமாதிரி நடந்ததுதான். 

 

லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களை ஓட்டு வங்கியா அரசியல்வாதிகள் பார்க்கிறாங்க. பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்போம்னு தேர்தல் நேரத்துல ஆளாளுக்கு கிளம்புறாங்க. எடப்பாடி பழனிசாமியும், ராஜேந்திரபாலாஜியும்கூட பட்டாசுத் தொழிலின் பாதுகாவலர்களாக தங்களை விளம்பரப்படுத்துறாங்க. பசுமைப் பட்டாசுன்னு சொல்லி சென்ட்ரல் கவர்மெண்டும்  ரொம்பவே குழப்புது. 

 

பட்டாசுத் தொழிலாளர்கள் சாகணும்னா வேலைக்கு வர்றாங்க? ஆபத்தான தொழில்னு தெரிஞ்சே ரிஸ்க் எடுக்கிறாங்க. பட்டாசு ஆலை நடத்துறவங்களும், விபத்து நடக்கணும்னு தெரிஞ்சே எதுவும் பண்ணுறதில்ல. ஏன்னா, ஒரு ஃபேக்டரில விபத்து நடந்துச்சுன்னா அந்த உரிமையாளருக்கு வாழ்க்கையே இல்லாம போயிரும்.  ஆனாலும், தொழிலாளர்களின் கை மீறி விபத்துகள் நடந்து, அநியாயத்துக்கு உயிர்களும் பறிபோகுது.” என்று நொந்துகொண்டார்.

 

Virudhunagar Achankulam crackers accident collector and minister

 

நாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் பேசினோம். “அமைச்சர் தவறுகளுக்குத் துணை போறவர் கிடையாது. சிறு தவறுகளைக் கண்டுக்காதீங்கன்னு  ஒரு  ‘ரெக்வஸ்ட்’ வைப்பாரு. சின்ன தவறுகளா இருந்தா கொஞ்சம் பாருங்க சார்ன்னு சொல்லுவாரு. உதாரணத்துக்கு,  மஸ்டர் ரோல் இல்லைன்னா எழுதி வைங்க. இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்கு சஸ்பெண்ட் பண்ணாதீங்க. அன்னைக்கு அவங்களுக்கு வேலை கெட்டுப் போயிரும்பாரு. 50 பேரைக் கூட்டிட்டுப் போற வண்டியில 60 பேரைக் கூட்டிட்டுப் போகும்போது நிப்பாட்டினா, விடுங்க சார்.. கூட்டிட்டுப் போகட்டும்பாரு. மற்றபடி, அரசு அதிகாரிகள் எடுக்கிற நடவடிக்கையில அவங்க தலையிட முடியாது. போன வாரம் ஒரு கம்பெனில மூணு பசங்கள வச்சிருந்தாங்க. அதெல்லாம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். அடிப்படைத் தவறுகள் எது இருந்தாலும் நாங்க கடுமையாத்தான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். இதுல எந்த காம்ப்ரமைஸும்  பண்ணுறது கிடையாது. எத்தனை ஃபேக்டரிய சஸ்பெண்ட் பண்ணிருக்கோம்னு ஒரு டேட்டா எல்லாம் கொடுத்துட்டோமே. இது யாரு கிளப்பிவிட்டதுன்னு தெரியல. எந்த ஒரு மீட்டிங்கிலும், பத்திரிக்கையாளர்களைக் கவர் பண்ணிட்டு வெளியே போங்கன்னு ரெக்வெஸ்ட் பண்ணுறது வழக்கம்தான். முதல் 5 நிமிஷம் கவர் பண்ணிக்கோங்க. அப்புறம் மீட்டிங் முடிஞ்சதும், நடந்தது என்னங்கிறத, உங்களக் கூப்பிட்டு சொல்றோம்னு சொல்வோம். இதுக்கு ஏன் கோவிச்சிக்கிட்டாங்கன்னு தெரியல? மற்றபடி ஒண்ணும் இல்ல சார்.. இது வழக்கமான நடைமுறைதான்.” என்றார் கூலாக.   

 

Virudhunagar Achankulam crackers accident collector and minister


தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியோ, “அரசு நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. பட்டாசுத் தொழிலுக்கும், பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் என்னால் முடிந்த வரையிலும் நல்லது மட்டுமே செய்து வருகிறேன். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக, 8 பேர் கொண்ட மத்திய குழு, அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய உள்ளது. அச்சங்குளம் பட்டாசு வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த 12 வயது சிறுமி நந்தினிக்குத் தமிழக அரசு அளித்த ரூ.6 லட்சம் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையை என் சொந்தக் குழந்தையாகவே பாவித்து அனைத்து உதவிகளும் செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அவளுடைய படிப்புச் செலவுக்கு, என்னுடைய பங்களிப்பாக ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நான் பாரபட்சமின்றி உதவுவேன். இனிமேல், இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.” என்றார். 

 

சம்பிரதாயமாகவே சகலமும் நடப்பதால், விபத்துகளும் உயிர்ப் பலிகளும் விதிமீறலால் தொடர்கின்றனவே! 

 

 

Next Story

“எடப்பாடி அண்ணன் எப்பவும் அழகா சிரிப்பாரு” - விஜயபிரபாகரன் ஐஸ் மழை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Edappadi Annan will always have a beautiful smile Vijaya Prabhakaran Ice rain

சிவகாசியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருதுநகர் பாரளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (28.03.2024) நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றியனார். இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசுகையில், “இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம். எங்க அப்பா கேப்டன் விஜயகாந்த் விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம்.. எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுப்போச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

அப்போ இது யாரோட ஆசை,  கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு. ஆண்டவர் சொல்லிருக்காரு போல. நிறைய பேர் சொன்னாங்க. விஜயபிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு?. பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு. ராமானுஜபுரத்துலதான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி, பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்கதான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப்  பெருமையா நினைக்கிறேன்.

விஜயகாந்த் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றுருக்காருன்னு. என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படனும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது, அ.தி.மு.க. எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல. ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான், கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதேமாதிரி அ.தி.மு.க.வுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க.

எனக்கு உள்ள வரும் போது தே.மு.தி.க., அ.தி.மு.க. எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதுனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன். இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள்தான் ஜாஸ்தி. இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018இல் விஜயகாந்த் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல, அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளாரா உங்க முன்னாடி பேசும் போது, ரொம்ப சந்தோஷம் அடையறேன்.

இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்ன்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை, தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு. அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதுனால அந்த வார்த்தை தெரியும், சிவகாசிதான் சின்ன ஜப்பான்ன்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா. அவ்ளோ திறமைசாலிகள், வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு சைனா  ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு, நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு, உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வுகாண முடியும். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியின் முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் விஜயகாந்த் மகனா, எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” எனப் பேசி சைகைகளால் முரசு கொட்டினார் விஜயபிரபாகரன். 

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.