Skip to main content

அதள பாதாளத்துக்கு சென்ற அதிமுக வாக்கு வங்கி... 

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்காக அந்த தொகுதியில் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பணியாற்றியவர் செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் மு. ஞானமூர்த்தி. ஆகஸ்ட் 9ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர் நம்மிடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
 

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அரியலூர் மாவட்ட திமுக சார்பில் 10 நாட்களுக்கு மேல் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தோம். 
 

அங்கே அனைத்து சமுதாய மக்களின் பேராதரவு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு இருந்தது. 
 

உழைப்பையே நம்பி இருக்கும் அணைக்கட்டு தொகுதி மக்கள் ஆளும் கட்சியினரின் புதியப்புதிய அறிவிப்பு, பணபலத்திற்கு (ஓட்டுக்கு ரூபாய் 800 முதல் 1000 வரை வழங்கினார்கள்) கிராமப் புறங்களில் திசை மாறி அதிமுகவிற்கு ஓட்டளித்துள்ளனர். 

 

vellore parliamentary


அதிகாரத்தாலும், சாதிய பிரச்சாரத்தாலும் ஓட்டுகளை பெற முயன்ற ஆளும் கட்சிக்கு அவர்கள் எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. 
 

அணைக்கட்டுத் தொகுதியில் வன்னியர் சமுதாயமும், முதலியார் சமுதாயமும் கூடுதலாக இருந்தாலும் அவர்களின் வாக்குகள் கணிசமாக திமுகவிற்க்கு விழுந்துள்ளது. இந்த இரண்டு சமுதாய வாக்குகள் முழுமையாக அதிமுகவிற்கு கிடைத்திருந்தால் சுமார் 30,000 வாக்குகளுக்குமேல் வித்தியாசம் வந்திருக்கும். ஆனால் 9539வாக்குகள் மட்டுமே வித்தியாசம். 
 

வேலூர் மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலை விட 2 மடங்குக்கு மேல் வாக்குகளை பெற்று திமுக சாதனை படைத்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி பாதிக்கும் குறைவாக வாக்குகளை பெற்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 
 

வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி சாதாரணமானது கிடையாது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட அதிமுகவும், பிஜேபி சார்பாக நின்ற ஏ.சி.சண்முகமும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 7 லட்சம் (72.64%). மூன்றாம் இடம் பெற்ற திமுக 2 லட்சம் (21%) ஓட்டுக்களை மட்டுமே பெற்றது.


இப்போது 2019 தேர்தலிலோ, அதிமுக பிஜேபி கூட்டணியின் ஓட்டு சதவீதம் 72.64% லில் இருந்து 46.5% சதமாக குறைந்து, திமுக வாங்கிய ஓட்டு, 21% சதத்திலிருந்து 47.3% சதமாக உயர்ந்து, அதுவும் மாநிலத்திலும், மத்தியிலும் எதிர் கட்சியாக இருந்து இவ்வளவு ஓட்டுக்களை பெற்று வென்றுள்ளது.
 

திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளை பெற்றார். அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். 8141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். 
 

இந்த தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள் கடந்த தேர்தலை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது. 
 

அதாவது வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக அணியில் இடம் பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகளை பெற்றார். ஆனால் தற்போது வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்றுள்ளார். 
 

கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய இளஞ்செழியன் 21,650 வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து கடந்த தேர்தலில், 2,27,546 வாக்குகளை பெற்றிருந்தன. 
 

அதே நேரத்தில் கடந்த 2014ம் ஆண்டு வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளை பெற்றார். பாஜக, பாமக, தேமுதிக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகளை பெற்றார். 

 

mganamoorthy


 

தற்போது அதிமுக அணியில், கடந்த முறை 3வது அணியாக போட்டியிட்ட அத்தனை கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இந்த தேர்தலில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் இந்த இரண்டு கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 7,08,045 வாக்குகளை பெற்றது.
 

ஆனால் தற்போது நடைபெற்ற வேலூர் மக்களவை தேர்தலில் திமுக 4,85,340 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது திமுக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 2,57,794 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது. சுமார் 2 மடங்கு அளவுக்கு திமுகவின் வாக்கு வங்கி கூடியுள்ளது. 
 

மாநிலத்தில் அதிமுக ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு என்ற பெரும் அதிகார செல்வாக்கு, பணபலம் ஆகியவை இருந்தபோதிலும் அதிமுகவுக்கு இந்த அளவுதான் வாக்குகளை பெற முடிந்துள்ளது. இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கி அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. 
 

 

 

 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்