Skip to main content

“3 மணிக்கு படுத்துட்டான்... 2 மணிக்கே தண்ணியடிச்சிட்டான்... பட்டைய உரிச்சிடுவன்...” - துரைமுருகன் அதிரடி 

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

ddd

 

"எனக்கு நீ ஓட்டுப் போடல, அதுக்காக நான் கோச்சிக்கல. எனக்குத் தெரியும், நீங்க எனக்கு ஓட்டுப் போட்டிங்க, போட்டுருப்பீங்க, போட வேணாம்னு சொன்னவன் பலர் எங்கக்கிட்டயே இருக்கான். தேர்தலன்னைக்கு 3 மணிக்குப் போய் படுத்துட்டான். 2 மணிக்கே தண்ணியடிச்சிட்டான். எதிர்கட்சிக்காரன்கிட்ட காசு வாங்கிட்டான். அது யார் யாருன்னு போலீஸை வச்சி கண்டுபிடிச்சிட்டேன். பட்டைய உரிச்சிடுவன் மகனுங்களா உங்கள. பஞ்சாயத்து தேர்தல் வருது, அப்போ தெரியும் யார் யாரை உரிக்கப் போறேன்னு. அதுவரைக்கும் விட்டுவைக்கறேன். தபால் வாக்குகள் இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு சீட் தரணும் அப்படிங்கறதில் தலையிடுவேன். வேலை செய்தால்தான் பதவி''

 

கடந்த வாரத்தில் வேலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், காட்பாடி மேற்கு ஒன்றிய, வாலாஜா மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டங்கள், பொன்னையில் நியாயவிலைக் கடை திறப்பு என அடுத்தடுத்து நடந்தது. அந்தக் கூட்டங்களில்தான் மேற்கண்டவாறு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.

 

இதுபற்றி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "மிகமிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின்போது கண்ணீர்விட்டவர், ‘தொகுதிக்கு எவ்வளவோ செய்தேனே' என புலம்பினார்.

 

தொகுதியில் பலமாக வன்னியர்கள் இருந்தாலும் அதே அளவுக்கு ஈக்வலாக உள்ள மற்ற சாதியினரின் கூட்டணி பெரியதாக எடுபட்டது. வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஓரம்கட்டுகிறார்கள் என நாயுடு சமுதாய மக்களும், வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ.வை ஓரம்கட்டுகிறார் என முதலியார்களும் எதிராக நின்றார்கள். அதேநேரத்தில் வன்னியர்களில் பெரும்பாலானவர்கள் 10.5 சதவித இடஒதுக்கீட்டால் அதிமுக ஆதரவு எடுத்தது தெரியவந்தது. எல்லாவற்றையும்தான் மனக்குமுறலாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும், சீனியரான அவருக்கு இன்னும் சில விஷயம் புரியவில்லை.

 

2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காட்பாடி தொகுதியில் மட்டும் அதிமுகவை விட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார் எம்.பி ஜெகத்ரட்சகன். அதே தொகுதியில் திமுகவின் பெருந்தலையான துரைமுருகன் தோல்வியின் விளிம்புக்குச் சென்றார் என்றால் அணுகுமுறைதான் காரணம். மாநில அரசியலில் கவனம் செலுத்தினாலும், உள்ளூர் தொண்டர்களை அணுசரிக்கணும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றணும். 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியா இருந்ததால அவரால பெருசா செய்ய முடியலை. அதிமுக ராமு, வாக்கு கேட்கும்போது எளிய மக்களிடம் நெருக்கமாக வாக்கு கேட்டது, மரியாதை தந்தது மக்களைக் கவர்ந்தது.

 

வேலூர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அவைத்தலைவர் முகமது சகி, "10 வருடமா திமுக தொண்டர்கள் வருமானமின்றி கட்சிக்கு செலவு செய்வதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அமைச்சர் பதிலே சொல்லலை. அவங்களுக்காக செலவும் செய்யலை. அவரது மகன் கதிர்ஆனந்த் எம்.பியாக இருக்கிறார். அவரும் செய்வதில்லை. அவரை மா.செ.வாக்கிடணும்னு மந்திரி விரும்புறாரு. கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல், காட்பாடியைவிட்டு வெளியே வராமல் இருந்தவருக்கு, வேலூர் எம்.பி. சீட் வாங்கித் தந்தார். வெற்றிபெற்றதும் தொகுதி வேலைகளைச் செய்வதை விட்டுவிட்டு கட்சி நிர்வாகத்தில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறார். கதிர் டார்ச்சர் தாங்க முடியாமல் துரைமுருகனால் பதவிக்கு வந்த திருப்பத்தூர் மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ., அமைச்சர் வேலுவின் ஆதரவாளராகிவிட்டார். துரை முருகனின் தம்பி துரை. சிங்காரம், துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வன்னிராஜா, மாநகர மண்டல தலைவராக இருந்த சுனில்குமார் போன்றவர்களால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், இப்போது நேரடியாக கதிர் ஆனந்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

போதாக் குறைக்கு கதிர்ஆனந்தின் பி.ஏ. எனச் சொல்லிக்கொள்பவர்கள், கட்சி நிர்வாகிகளை மிக மோசமாகப் பேசுகிறார்கள். இதுயெல்லாம் சேர்ந்துதான் அமைச்சருக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தது'' என்றார்கள்.

 

துரைமுருகன் ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது, "தேர்தல் களத்தில் நிறைய செலவு செய்தார். 10 நாளைக்கு முன்னாடியே ஓட்டுக்கு, பூத் செலவுக்கு தர வேண்டியதைத் தந்துட்டார். அதில் 60 சதவீதம் கூட மக்களுக்குப் போய் சேரல. சிங்கத்தை சுண்டெலி ஜெயிச்சிடுமான்னு எகத்தாளமா தேர்தல் வேலையே செய்யல. உண்மை எங்கே வெளியில வந்துடுமோன்னு பயந்துக்கிட்டு, அமைச்சருக்கு எதிரா நெகட்டிவ் இமேஜ் மக்கள் மத்தியில் இருக்குன்னு காட்ட முயற்சி செய்யறாங்க. கட்சியில் உழைப்பவர்களை அமைச்சர் ஓரம்கட்டுவதில்லை. கதிர்ஆனந்தை அமைச்சர் அடக்கித்தான் வச்சிருக்கார். அமைச்சரை வீழ்த்த நடக்கும் அரசியலும் அவருக்குத் தெரியும்'' என்றார்.

 

தன் தொகுதியில் கட்சியைப் பலப்படுத்துகிறேன் என காட்பாடி தொகுதிக்குள் வரும் காட்பாடி ஒன்றியம், வாலாஜா ஒன்றியம், சோளிங்கர் மேற்கு ஒன்றியத்தில் 10 ஊராட்சிக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என ஒன்றியத்தைப் பிரித்து ஒன்றியப் பொறுப்பாளர்களை நியமிக்க வைத்தார் பொதுச் செயலாளர் துரைமுருகன். கே.வி. குப்பம், குடியாத்தம் தொகுதியிலும் மாற்றங்கள் செய்ய, இதுவும் இப்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.