Skip to main content

“என் மீது விழுந்த அடிகளை தாங்கி உயிரை காப்பாற்றியவர் ஆசிரியர்” - பிறந்தநாள் விழாவில் நெகிழ்ந்து போன முதல்வர்

Published on 03/12/2022 | Edited on 05/12/2022


சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கும் ஆசிரியருக்குமான உறவு குறித்து மிக உணர்ச்சிகரமாக உரையாற்றினார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, " இன்றைக்கு ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த அனைத்து கொண்டாட்டங்களுக்கும் அவர் தகுதியான நபர். இந்த தமிழ்ச் சமூகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு என்பது ஒரு சில மணி நேரத்தில் கூறி முடிக்கக்கூடியது அல்ல.

 

ரப

 

தமிழகத்தில் நடைபெற்ற பல இக்கட்டான நிகழ்வுகளில் பங்கெடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இந்த கருப்பு சட்டைக்காரர். குறிப்பாக எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து. குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு நான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே எங்கள் மீது தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக என்னைக் குண்டாந்தடிகள் கொண்டு தாக்கினார்கள். அடிகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

 

அது மிகக் கடுமையான தாக்குதல்களாக இருந்தது. இப்போது இருப்பதைப் போல் கூட அப்போது நான் இருக்கமாட்டேன். மிக ஒல்லியாக மெலிந்த தேகமாகவே இருந்தேன். அவர்களின் தாக்குதலைத் தாங்கும் அளவுக்குக் கூட அப்போது என்னிடம் உடல் பளு இருக்காது. அந்த நேரத்தில் சிறையில் என் மீது விழுந்த அடிகளைத் தாங்கிக்கொண்டவர் ஒருவர் சிட்டிபாபு. மற்றொருவர் நம்முடைய ஆசிரியர். என் மீது விழுந்த அடிகளை தான் வாங்கிக்கொண்டு என் உயிரைக் காப்பாற்றியவர் அவர். தற்போது கூட எங்களின் அரசியல் எதிரிகள் எங்களைத் தாக்கும்போது எங்களுக்கு முன் அதனைத் தடுத்து நிறுத்தி எங்களைக் காக்கும் கேடயமாக இருப்பவர் ஆசிரியர் அவர்கள். இதனை திமுகவைச் சேர்ந்த அனைவரும் அறிவர். அதிலே இருவேறு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

 

தினந்தோறும் அவர் விடுகின்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எடுக்கின்ற முடிவுகளைத் தீர்மானிக்கின்றோம். ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே அவர் இத்தனை ஆண்டுக்காலம் இருந்து வந்துள்ளார். பத்து வயதில் கூட்டத்திலே பேச ஆரம்பித்த அவர் அண்ணாவால் மேடையிலேயே பாராட்டைப் பெற்றவர். அத்தகைய பேச்சாற்றல் கொண்டவர். அவரை தனித் தனியாகப் புகழ வேண்டும் என்று சொன்னால் இந்த நாள் மட்டும் பத்தாது. பேசிக்கொண்டே போனால் அடுத்த நாளே வந்துவிடும். அந்த அளவுக்குத் தனிச்சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டவர்.

 

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட அவரை நாங்கள் வாழ்த்துவது என்பது ஏதோ அவருக்கு நாங்கள் சேர்க்கின்ற புகழோ அல்ல. அவரை வாழ்த்துவதே எங்களுக்கு நாங்கள் தீட்டிக்கொள்கின்ற புகழாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த தமிழ்ச் சமூகத்திற்கு அளவில்லாத உழைப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பெரியாரின் பேரன்பைப் பெற்றவராக அவர் இறக்கும் வரையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது மிகக் கடினமான காரியம். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அதையும் அவர் சாதித்துள்ளார். எனவே இவர் இன்று 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல, நூறாவது பிறந்த நாளையும் இவர் கொண்டாட வேண்டும் அதனை இந்த தமிழ்ச் சமூகம் பார்க்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கூறி மகிழ்கிறேன்" என்றார்.

 

 

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.