Skip to main content

“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
ddd

 

 

நவம்பர் 27 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கொண்டாடியுள்ளனர். திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிதத்னர். 27ஆம் தேதி காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தியப் பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

 

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் பேசினோம்.

 

உதயநிதியின் அரசியல் நுழைவை எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சனம் செய்கிறார்களே?

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நுழைவை அரசியல் விமர்சகர்கள், எதிர்கட்சியினர், பார்வையாளர்கள் என பலரும் பல விதமாக விமர்சித்தனர், துவக்கத்தில். ஏதோ பொழுதுபோக்குக்காக வந்தது போல்  சிலர் கிண்டல் செய்ததும் உண்டு. ஆனால், அவர் அரசியலை ரசித்து, உணர்ந்து, ஈடுபாட்டுடன்  தான் பயணித்தார், பயணிக்கிறார். அந்த ஈடுபாடு சமீபத்திய "விடியலை நோக்கி" என்ற பிரச்சார பரப்புரை பயணத்தில் தெளிவாக வெளிப்பட்டது, எதிரிகளுக்குப் புலப்பட்டது. 

 

உதயநிதி தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது, அரசியலுக்கு வரவில்லை. தி.மு.கழகம் இரண்டாவது முறை எதிர்கட்சியாக இருக்கும்போது தான் வந்தார். மத்தியில் மோடி பிரதமராக இருக்கும்போது தான் அரசியலுக்கு வந்தார். தமிழகத்தில் மோடியின் செல்லப்பிள்ளை எடப்பாடி ஆட்சியின் போது தான் அரசியலுக்கு வந்தார். எதிர்கட்சியாக, இரண்டு அரசுகளின் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று தெரிந்து தான் வந்தார்.

 

வாரிசு அரசியல் என்றும் எந்த கொள்கைக்காக அவர் போராடி இருக்கிறார் என்றும் விமர்சனமும் வைக்கப்படுகிறதே? 

போராட்டங்களில் கலந்துகொண்டுதான் அரசியலுக்கு வந்தார், தொடர்ந்து கலந்து கொண்டும் வருகிறார். ஆனாலும், வாரிசு அரசியல் என்ற ஓட்டை விமரசனத்தை கடுமையாக சிலர் வைத்தார்கள். அவர்களுக்கு அப்போதே தெரிந்திருக்கிறது, இவர் கடுமையாக உழைப்பார் என்று. அது அடுத்த ஆண்டே நிரூபணமாயிற்று, நாடாளுமன்ற தேர்தல் போது.

 

உதயநிதி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதே அவரது அரசியல் ஈடுபாடும், கொள்கை பிடிப்பும், கடின உழைப்பும் வெளிப்பட்டது. ஆனால், தேர்தல் பரபரப்பில் அதனை பலரும் கவனிக்கவில்லை. அவர்களை இப்போதைய 'விடியலை நோக்கி' பயணம் கவனிக்க வைத்திருக்கிறது. 

 

நாடாளுமன்ற தேர்தல் போது, அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சார பயணம் அவரது அயராத உழைப்பை வெளிப்படுத்தியது. பிரச்சாரப் பயணத்தில் அவரது பேச்சு யதார்த்தமாக அமைந்து மக்களை கவர்ந்தது, அதே சமயம் கொள்கையில் இருந்து விலகாமல் இருந்தது. அரசின் அவலங்களை பட்டியலிட்டவர்,  மறக்காமல் எல்லா இடத்திலும் ஒரு விஷயத்தை தன் பேச்சில் குறிப்பிட்டார். அது, "நீட் தேர்வு".

 

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீட் தேர்வு போன்ற கொள்கை விஷயத்தை பேசுவது எளிதல்ல. ஆனால், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை பேசினார். நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட "மாணவி அனிதா" குறித்து பேசும்போது உணர்வு மயமானார். அது அவரது "எதிர்கால சிந்தனையையும், மனித நேயத்தையும்'' வெளிப்படுத்தியது. தேர்தல் வெற்றி, அவரது பிரச்சார பயணத்திற்கு பெரும் அங்கீகாரமாக அமைந்தது.

 

ddd

 

கட்சியில் பொறுப்புகளை பெற்ற பிறகு உதயநிதியின் செயல்பாடுகள் உடன்பிறப்புகளுக்கு திருப்பி அளிக்கிறதா? 

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உடன் இளைஞரணி உறுப்பினர் சேர்த்தலில் தீவிரம் காட்டி, பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களை திமுகவில் இணைத்தார். 

 

"கலைஞர் கடிதங்களை" படிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர்கள் உதயநிதியின் ட்விட்டர் பதிவுகளை கண்டு எல்லையில்லா ஆனந்தம் கொண்டார்கள். தலைவர் கலைஞரின் கிண்டலும், கேலியும் பொங்கி வழிகிறது அவரது ட்விட்களில். பேட்டிகளிலும், பேச்சுகளிலும் பின்னி எடுக்கிறார். "உதயநிதி சாக்லேட் பாய்", என விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார். " ஜெயக்குமார் ப்ளேபாய்", என பதிலளிக்க அண்ணன் ஜெயக்குமார் கப்சிப்.

 

ddd

 

திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டாரே? 

கடந்த காலங்களில் உதயநிதியை அலட்சியமாக பார்த்த எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது. தேர்தல் பரப்புரை துவங்கியவரை கண்டு திணறுகிறார்கள். அவரது 'விடியலை நோக்கி' பயணத்தை முடக்குவதே ஸ்பெஷல் டி.ஜி.பியின் பணியாகிப் போனது. எடப்பாடி தினம், தினம் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவர் அசரவில்லை, பயணத்தை தொடர்கிறார், மக்களை சந்திக்கிறார், சந்திப்பார்.

 

ddd

 

'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் உதயநிதி ஏற்று நடித்த கேரக்டர், சாப்ட் நேச்சர் கொண்ட சரவணன். தங்களை 'பார்த்தா' சந்தானமாக நினைத்து நக்கலடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணனில்லை, சமூக அவலங்களை கண்டு கொதிக்கிற கலைஞரின் பராசக்தி "குணசேகரன்" என முத்திரை பதித்து விட்டார். 

 

தன் பிறந்தநாளுக்கும் 'கருப்பு சட்டை' உடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தெறிக்கிறது! இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை இளைய சூரியனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.