Skip to main content

சசிகலாவை பார்த்து பேசும் 2 பேர்! - யாரையும் நெருங்க விடுவதில்லை என பகீர் புகார்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

ddd

 

சசிகலா வெளியே வந்தால் அவரைச் சந்திக்க 10 அ.தி.மு.க. அமைச்சர்கள் வருவார்கள், அவரது சொந்த பந்தங்களுடன் 50க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.க்கள் தொடர்பில் இருக்கிறார்கள், அ.தி.மு.க. கட்சி உடையும், எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டார் என சசிகலா வந்தால் நடக்கும் விவரங்கள் பற்றி அவரது சொந்தபந்தங்கள் ஏகப்பட்ட பில்டப்களைக் கொடுத்து வந்தார்கள். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அவரது சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த 6 அமைச்சர்களில் ஒருவர்கூட சசிகலா இருக்கும் பக்கம் வெளிப்படையாக இதுவரை வரவில்லை. கருணாஸ், தனியரசு போன்ற சசிகலாவால் உருவாக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கூட சசிகலாவை வெளிப்படையாக சந்திக்கவில்லை.

 

இந்நிலையில் பா.ஜ.க. ஆதரவுடன் சசிகலா இயங்குகிறார் என சொல்லப்பட்ட விவரங்களும் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் சசிகலா தரப்பைப் பற்றி எழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா இதுவரை மவுனமாக இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என அவரது சொந்தபந்தங்களிடம் விசாரித்தபோது அவர்கள் இன்னொரு கதையைச் சொல்கிறார்கள்.

 

சசிகலாவை இப்பொழுது பார்த்துப் பேசுவது இளவரசியின் மகன் விவேக்கும், டிடிவி தினகரனின் நெருங்கிய உறவினரான டாக்டர் வெங்கடேஷும்தான். இதில் விவேக்கின் மாமனார் கட்டை பாஸ்கர், செம்மர கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கிறார். ஆந்திரா சிறையில் இருக்கும் அவர் மீது ஆந்திர அரசு குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது. சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் என ஆந்திர அரசால் குற்றம்சாட்டப்படும் கட்டை பாஸ்கர் மூலம் விவேக் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். தமிழக அரசு இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடைமையாக்கியதுபோல் விவேக்கிற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்கிற தகவல் அதிர்ச்சி செய்தியாக சசிகலாவின் வீட்டிற்குள் உலா வருகிறது.

 

விவேக்கின் மாமனாரான கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் விவேக்கின் சகோதரிகளான கிருஷ்ணப்பிரியாவும் ஷகிலாவும் கொடுத்த ரகசிய தகவல்கள்தான். இவர்களுக்கும் விவேக்கின் மனைவிக்கும் இடையே நடக்கும் குடும்பச் சண்டையில்தான் இது நடந்தது என அரசல் புரசலாக கட்டை பாஸ்கரின் கைதின்போதே செய்திகள் வெளியானது. மூன்று மாதங்களுக்கு முன்பு விவேக் மும்பையைச் சார்ந்த, கட்டை பாஸ்கருக்கு நெருக்கமான, கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து 50 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணமும் விவேக் வேறு வகையில் சம்பாதித்த பணத்தையெல்லாம் துபாயில் முதலீடு செய்திருக்கிறார். இதைத் தேடி ஆந்திர அரசு பயணிக்கிறது. இவையெல்லாம் மத்திய பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் திருவிளையாடல்கள்தான் என சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.

 

இதற்கிடையே சசிகலாவுடன் நேரடியாக மோதும் எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரன் தொடர்பு வைத்துள்ளார் என செய்திகள் சசிகலாவின் காதை வந்தடைந்திருக்கின்றன. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு கடுமையான மவுனத்தை கடைப்பிடிக்கிறார். சசிகலாவிற்கு சிகிச்சை அளித்த பெங்களூரு மருத்துவர்கள் சென்னைக்குப் போய் 10 நாட்கள் உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், உங்கள் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ கரோனா பரவிவிடக் கூடாது என அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள சசிகலாவிற்கு உள்ள ஒரே வெளியுலக தொடர்பு டாக்டர் வெங்கடேஷ்தான்.

 

sasikala

 

தினகரனின் உறவினரான இவர், மற்ற சொந்தபந்தங்கள் யாரையும் சசிகலாவை நெருங்க விடுவதில்லை. இவர் சொல்வதை மட்டுமே சசிகலா கேட்கிறார். அது அரசியல் கணக்குகளைத் தவறாக்கிவிடுகிறது. விவேக்கின் மாமனார் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கிருஷ்ணப்பிரியா சசிகலாவிடம் சொல்ல முயன்றபோது, ஏற்கனவே வருமான வரித்துறையிடம் கிருஷ்ணப்பிரியாவின் செல்ஃபோனில் இருந்த விவரங்கள் மூலமாகத்தான் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்தது என்கிற கோபத்தில் கிருஷ்ணப்பிரியாவுடன் பேசாமல் இருக்கும் சசிகலாவை, வெங்கடேஷ் சந்திக்க விடாமல் தடுத்தார்.

 

அதேபோல் திவாகரன் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதைப் பற்றி விளக்கம் அளிக்க திவாகரனை டாக்டர் வெங்கடேஷ் அனுமதிக்கவில்லை என்கிறது சசிகலாவின் சொந்தபந்தங்கள். ஆனால் வெங்கடேஷ் தரப்போ இதை மறுக்கிறது. சசிகலாவுக்கு கரோனா பாதிப்பால் ஜெ.வைப் போல் ஏதாவது ஆகிவிடப்போகிறது என்கிற பயத்தில்தான் சசிகலா தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். திவாகரன் பற்றி செய்திகள் வந்ததும் சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அக்காவும் தம்பியும் பழைய கதைகளைப் பேசி மணிக்கணக்கில் அழுது தீர்த்திருக்கிறார்கள் என விளக்கம் சொல்கிறது டாக்டர் வெங்கடேஷ் தரப்பு.

 

இந்நிலையில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு ஒற்றுமையுடன் களம்காண வேண்டும் என சொல்லி வந்த பா.ஜ.க.வின் குரலிலும் மாற்றம் தெரிகிறது. தினகரனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பேசி வந்த பா.ஜ.க. தரப்பினரிடம், தேர்தலில் வெற்றி பெற்றால் எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என தினகரன் கோரிக்கை வைத்ததாகவும், அதனால் தினகரனையும் சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள முடியாது, அவர்கள் இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாம், அதில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்திவிட்டார். சென்னைக்கு வந்த பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலா எதிர்ப்பு நிலையை எடுக்க, பிரதமர் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

 

இதற்குப் பதிலளிக்கும் சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், சசிகலா வருகிற 19ஆம் தேதி ஜெயலலிதாவின் நட்சத்திரப் பிறந்தநாளையொட்டி திதி ஒன்றைக் கொடுக்கிறார். அதன் பிறகு அவர் சொந்த பந்தங்களிடம் விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார். அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். ஜெ.வின் பிறந்த நாளன்று ஜெ.வின் சமாதிக்குப் போவதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சசிகலாவின் செல்வாக்கில் எந்த மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து எம்எல்ஏக்கள் போட்டியிட தேவையான, கட்சி சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்கான பி. படிவத்தில் கையெழுத்துப்போடும் அதிகாரம் பெற்றுள்ள ஓ.பி.எஸ்., இன்றளவும் சசிகலாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். வரும் வாரங்களில் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்படும் என்கிறார்கள்.

 

sasikala

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு நாலரை லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. அது தொடர்ந்து கடன் பெறும் தகுதியை இழந்துவிட்டது. அதற்காக ஒரு சிறப்பு அனுமதியை நரேந்திர மோடி ரிசர்வ் வங்கி மூலம் பெற்றுத்தர உதவி செய்துள்ளார். அந்த உதவி மூலம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, வருகிற 25ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச இருக்கிறார். 25ஆம் தேதிக்குள் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோர் மத்தியில் ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டும். இல்லையென்றால் சசிகலா, அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அதற்குள் அ.தி.மு.க.வில் தனக்கு இருக்கும் செல்வாக்கை சசிகலா நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் ஜெ - சசி படத்துடன் அ.ம.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும். அதுதான், 6 ஆண்டுகளுக்குத் தேர்தல் களம் காண முடியாத சசிகலாவின் நிலையாக அமையும்.

 

தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பலர் சசிகலா பக்கம் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அது டூ லேட் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். இப்படி எண்ணற்ற சோதனைகள் சூழ, அதிக கவலையுடன், கரோனாவால் பாதிக்கப்பட்ட உடலுடன் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா என்கிறார்கள் அவரது சொந்த பந்தங்கள்.

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.