Skip to main content

நகைக் கொள்ளையன் முருகன் சரண்டரில் இருக்கும் மர்மம்...நடந்த பேரம்...அதிர்ச்சி தகவல்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ், கடந்த 10-ம்தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இவனிடம் நடத்திய விசாரணையில், லலிதாவில் கொள்ளையடித்த 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நருங்குழி நகர் பகுதியில் முருகன் தங்கியிருந்த வீட்டில் வைத்து பங்கு பிரித்துக்கொண்டது தெரிய வந்தது. அதே நேரம், இந்த கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த சுரேஷின் மாமன் முருகன், பெங்களூருவில் பதுங்கி யிருப்பதாக தகவல் வர, தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஆனால், அடுத்த நாள் காலை பெங்களூரு சிட்டி சிவில் 11-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் வேறொரு திருட்டு வழக்கில் முருகன் சரணடைந்தான்.

 

incident



பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சரணடைந்தவன், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலடைக்கப்பட்ட முருகனை பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸார், 9 கிலோ நகைக்கொள்ளை வழக்கில் 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்து இரவோடு இரவாக திருச்சி அழைத்து வந்தனர். லோக்கல் போலீஸாருக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் வந்த பெங்களூரு போலீசார், முருகன் காட்டிய இடத்தில் 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.

 

incident



இத்தகவல் அறிந்து பெரம்பலூர் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டார்கள். வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் விரட்டிச் சென்று காரை மடக்கினர். இனோவா காரின் டிக்கியில், கொள்ளையன் முருகனும், 12 கிலோ தங்க நகையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து அவர்களைப் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்த போலீஸார், பெரம்பலூர் எஸ்.பி. நிஷா பார்த்திபன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி. கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.


விசாரணையில், "திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததும் நாங்கள் தான்'' என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். மேலும், "பஞ்சாப் வங்கியில் 6 பேர் சேர்ந்து கொள்ளையடித்தோம். வங்கியில் நாங்கள் எதிர்பார்த்த நகை கிடைக்கவில்லை என்பதால் லலிதா ஜுவல்லரியை குறிவைத்தோம். லலிதா கொள்ளையில் நானும் கணேஷ் என்பவனும்தான் உள்ளே சென்றோம். அந்த வகையில் எனக்கு 12 கிலோ தங்கம், ஒரு கிலோ வைர நகைகளை எடுத்துக்கொண்டு, சுரேஷுக்கு ஆறு கிலோ தங்க நகை கொடுத்தேன். மீதம் இருந்த நகைகளை உடன் வந்த மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், சதீஷ்குமாருக்கு கொடுத்தேன்'' என்று சொல்லியிருக்கிறான். முருகன் கொடுத்த தகவலின்படி, மதுரை வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்கார தெருவைச்சேர்ந்த கணேசனை கைது செய்த போலீசார், 6 கிலோ நகைகளை கைப்பற்றினர்.


தமிழக போலீஸ் தொடர்ச்சியாக முருகனை விரட்டிய நிலையில் பெங்களூவில் சரணடைந்த அன்றே 6 நாள் கஸ்டடி கொடுக்கப்பட்டு அன்றைக்கு இரவே யாருக்கும் தெரியாமல் "பிரஸ்' வண்டியில் கர்நாடக போலீஸார் ரகசியமாக மொத்த நகையையும் அள்ளிச் சென்றது ஏன்? திருடப்பட்ட நகைகள் திருச்சி நகைகள் என்று தெரிந்தும் கர்நாடக போலீஸ் அதை யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்றது ஏன் என்கிற கேள்வி பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "பெங்களூருவில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை விசாரிக்க ஹரிசங்கர் என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கே முருகனை கஸ்டடி எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்த விசயம் எதுவும் தெரியவில்லை.

பெங்களூரு போலீசார் இதற்கு முன்பு, முருகனை 90 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது, ஒரு உயரதிகாரிக்கு 1 கிலோ நகை கொடுத்து சமாளித்துள்ளான். அதே போன்று தற்போது தமிழகத்தில் திருடிய நகைகளை கொண்டுபோய் பெங்களூரு போலீசுக்கு கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைத்துதான் சரண்டர், கஸ்டடி நாடகமாடியுள்ளான் என்கிறார்கள். தமிழக போலீஸ் பெங்களூருவில் முருகனை கஸ்டடி கேட்டு பெட்டிசன் கொடுக்கவிருக்கிறது. தமிழக போலீசிடம் முருகன் ஒப்படைக்கப்பட் டால், "இதுநாள் வரை நடந்த அத்தனை திருட்டுகளின் கதைகளும் வெளியே வரும். கொள்ளையடித்த பணத்தில் சினிமா படங்கள் எடுத்தது முதல், பெரிய பெரிய அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்தது எல்லாம் அம்பலமானால் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. பலரும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது என்று விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான முயற்சியில், முருகன் உயிருக்கு ஆபத்து நேரலாம்'' என்று கூறுகிறார்கள்.

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.