Skip to main content

நான் தப்புப் பண்ணீட்டேங்க.. உடைந்து சிதறும் உறவுகள்!

Published on 18/06/2019 | Edited on 20/06/2019

"ஹலோ... நீங்க.. சரண்யாவோட வீட்டுக்காரர் கனகராஜ்தானே?''’’

""ஆமா''’’

“""நான் சரண்யா படிக்கிற காலேஜ்லருந்து பேசுறேன். சரண்யாவோட செல்போனை வாங்கி செக் பண்ணுங்க''’’

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பெண்குரல் தொடர்பைத் துண்டிக்க... இந்த தகவலைக் கேட்டதிலிருந்து கடந்துபோகும் ஒவ்வொரு நொடியும் கனகராஜுக்கு நரகவேதனையாக இருந்தது.

 

trichy

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த +2 வரை படித்த கனகராஜ் தன் கடும் உழைப்பால் சென்னையில் ஒரு ஹோட்டலும், சொந்த கிராமத்தில் பெற்றோருக்காக ஒரு ஹோட்டலும் நடத்திவருகிறார். நல்ல வருமானம் வந்தநிலையில்... நான்கு ஆண்டுகளுக்கு முன்... துறையூர் அருகே கீராம்பூரைச் சேர்ந்த சரண்யாவை கனகராஜுக்கு திருமணம் செய்துவைத்தனர். இரண்டரை வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. சரண்யாவை ராணிபோல கவனித்துக்கொண்டார்கள் கனகராஜின் பெற்றோர்.

ஒருநாள்... “""நான் பி.சி.ஏ. படிச்சிருக்கேன். மேல படிக்கணும்... வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு...''’என்று சரண்யா கெஞ்ச... மனைவி மீது இருந்த கட்டுக்கடங்காத பாசத்தில்... துறையூருக்கு படிக்க அனுப்பிவைத்தார் கனகராஜ்.

இந்நிலையில்தான்... யாரோ ஒரு பெண் கனகராஜைத் தொடர்புகொண்டு... இப்படியொரு தகவலைச் சொல்ல... மனைவி வீடு திரும்பியதும்... செல்போனை பறித்து ஆராய்ந்த கனகராஜுக்கு இதயம் நொறுங்கியது.

தன் மனைவி... யாரோ ஒருவனுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட எடுக்கக்கூடாத படங்களால் நிரம்பியிருந்தது. அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கனகராஜ்... மனைவியை அடிக்க...

""நான் தப்புப் பண்ணீட்டேங்க... அவன் பேரு செல்வம். எங்க ஊர்க்காரன். சின்னவயசுலருந்தே எங்களுக்குள்ள பழக்கம். அவனைத்தான் கல்யாணம் பண்ணணும்னு நினைச்சேன். அவன் வேற ஜாதிங்கிறதால அது முடியாமப் போச்சு. எனக்கு உங்களோட கல்யாணம் ஆயிருச்சு. அவனுக்கு வேற பொண்ணோட கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருக்கு. அவனை இப்ப திடீர்னு பார்த்ததும் பழைய பழக்கத்துல தப்புப் பண்ணீட்டேன். என்னை மன்னிச்சிடுங்க... இனிமே நான் இப்படி தப்புப் பண்ணமாட்டேன்''’எனச் சொல்லி அழ... மனைவி மீது இருந்த பாசத்தில்“""இனிமே ஒழுங்கா இரு''’என மன்னித்தார் கனகராஜ்.

அடுத்த சிலநாட்களில்... இரவுச் சாப்பாட்டிற்கான குழம்பில் மயக்க மாத்திரையை கலந்து பரிமாறிய சரண்யா... கணவனும், மாமனார்-மாமியாரும் அசந்து தூங்கியநேரம்... குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி... ஏற்கனவே திட்டமிட்டபடி செல்வத்துடன் துறையூர் பகுதியில் தலைமறைவானார்.

மனைவியையும், குழந்தையையும் நாலாபுறமும் தேடிப்பார்த்த கனகராஜ் இறுதியாக... ""என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத் தாருங்கள்''’என சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

செல்வத்தின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினார் இன்ஸ்பெக்டர் ராஜா. நான்கு நாட்கள் கடந்த நிலையில்...

""நானும், சரண்யாவும், உன் குழந்தையும் துறையூர்லதான் இருக்கோம். நீ உடனே கிளம்பி வா. சரண்யா உன்கூட வர்றேன்னு சொன்னா... கூட்டிட்டுப்போ. வரமாட்டேன்னு சொன்னா... அவளை என்கிட்ட விட்டுட்டு அப்படியே போயிடு''’என செல்வம் செல்போன் மூலம் சொல்ல...

உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு துறையூர் பஸ் நிலையத்திற்குச் சென்றார் கனகராஜ். செல்வத்துடன் இருந்த தன் மனைவி சரண்யாவை கடுமையாக தாக்கினார். செல்வத்தின் உறவினர்கள் செல்வத்தை அடித்து உதைத்தனர். இந்த களேபரத்தில் மக்கள் கூடிவிட... துறையூர் போலீஸார்... இருதரப்பினரையும் அள்ளிக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றனர். விஷயமறிந்த சிறுகனூர் போலீஸார், அவர்களை இங்கு கொண்டுவந்து விசாரித்தனர்.

""நான் என் மனைவி மேல ரொம்ப பாசம் வச்சிருந்தேன். அவ படிக்கணும்னு சொன்னதும் ஒரு லட்ச ரூபா செலவு பண்ணி படிக்கவச்சேன். ஆனா அவளை இந்த செல்வம் கூட்டிக்கிட்டுப்போய் எனக்கு துரோகம் பண்ணீட்டான். அவன் மேலயும், என் மனைவி மேலயும் நடவடிக்கை எடுங்க. என் குழந்தையை என்கிட்ட வாங்கிக் கொடுங்க''’என கனகராஜ் புகார் சொன்னார்.

""இவங்க ரெண்டுபேர் மீதும் கேஸ் போட முடியாது. வயதுக்கு வந்த இரண்டுபேர் விருப்பப்பட்டு ஒண்ணா இருக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படி இருக்கு. நான் எதுவும் பண்ணமுடியாது. சரண்யாவும், செல்வமும் என்ன சொல்றாங்களோ... அதைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும்''’’ என இன்ஸ்பெக்டர் ராஜா சொல்லிவிட்டு... செல்வத்தையும், சரண்யாவையும் பார்த்தார்.

""எனக்கு கனகராஜும் வேண்டாம்... அவன் மூலமா பிறந்த குழந்தையும் வேண்டாம். செல்வத்தோட போறேன்''’என்று சொல்லி அதன்படி எழுதிக் கொடுத்துவிட்டு செல்வத்துடன் ஸ்டேஷனை விட்டுக் கிளம்பினார் சரண்யா.

ஸ்டேஷனுக்கு வெளியே செல்வத்தின் மனைவியும், ரெண்டு குழந்தைகளும், செல்வத்தின் பெற்றோரும் நிலைகலங்கி நின்றிருந்தனர். ஆனால் கண்ணை மறைத்த காமம் அவர்களின் கண்ணீரை பெரிதாக நினைக்கவில்லை. சரண்யாவுடன் போய்க்கொண்டிருந்தான் செல்வம்.

""இனி இவன் எங்க புள்ளையே இல்ல. எங்க புள்ள செத்துட்டான். இனிமே எங்களுக்கும், எங்க சொத்துக்கும் வாரிசு... எங்க மருமகள்தான்''’எனச் சொல்லிவிட்டு அவர்களும் கிளம்பினார்கள்.

தன் குழந்தையை தோளில் சுமந்தபடி கனகராஜ் ஸ்டேஷனைவிட்டு வெளியே வர...

""டேய்... அந்தப் புள்ளய அவகிட்டயே குடுத்திரு... உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்''’என உறவினர்கள் சொல்ல...

தோளில் கிடந்த குழந்தையை மேலும் இறுகப் பற்றிக்கொண்டு... “""இது எனக்குப் பிறந்த குழந்தை. என் ரத்தம். எனக்கு இனிமே கல்யாணமே வேணாம். என் மகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிறதுதான் எனக்கு முக்கியம்...''’என உறுதியாகச் சொல்லிவிட்டு நடந்தார் கனகராஜ்.

நாட்டாமைகளின் தீர்ப்புகளில். நியாயம்... சுயவிருப்பம்... என்பதைத் தாண்டி குடும்ப, சமூக, பாரம்பரிய, கலாச்சார கட்டமைப்புகள் பாதிக்காதபடி இருக்கும்.

ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளில் தனிமனித சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒருவகையில் சிறப்பானது என்றாலும்கூட... அதன் நல்ல நோக்கத்தை தங்களின் தீய நோக்கத்திற்கு தோதாக பயன்படுத்திக்கொள்கிற சிலரால்... நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம் விமர்சனத்திற்கு ஆளாகிறது.

சட்டத்தின் மூலம் கிடைக்கிற சில சலுகைகள்... நாம் ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்கிற "ஒருவனுக்கு ஒருத்தி'’என்கிற பிம்பத்தை உடைத்துக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் நாளை... இல்லற நம்பிக்கை என்பதே நிலையற்றதாகிவிடுமோ... என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.