Skip to main content

ஆடைகளை களைத்து நித்தியானந்த மடத்தில் டார்ச்சர்! பெற்றோர்களும் உடந்தை!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Torture in Nithiyanatham aasiramam issue

 

சமாதி நிலையில் இருக்கின்ற சாமியார் நித்தியானந்தா குருபூர்ணிமா அன்று பக்தர்களுடன் நேரடியாக உரையாடி ஆசிர்வதிக்க உள்ளார் என்றது கைலாசா இணையதளம். ஆனால், பெங்களூரு பிடதியில் அவரது ஆசிரமத்திலுள்ள பக்தர்களுக்கு நித்தியானந்தா பெயரில் கொடூர டார்ச்சரை அரங்கேற்றி வருகின்றனர் அங்குள்ள நிர்வாகிகள்.

 

நித்தி எங்கே, எப்படி இருக்கிறார் என்ற மர்மம் தொடரும் நிலையில், அவரது ஆசிரமங்களில் போதிய வருவாய் இல்லை. இதனால் 300 உறுப்பினர்களைக் கொண்ட பிடதி ஆசிரமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆசிரமத்திற்கு வரும் மிச்ச சொச்ச பணத்தை பங்கு போடுவதில், ஆசிரமத்திலுள்ள இரு நிர்வாகிகளுக்கிடையே அடிக்கடி நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டையும், இனியும் தம்மால் பட்டினியாக வாழ முடியாது என, ஆசிரமத்தில் 10 ஆண்டுகளாக சேவை செய்து வரும் நபர் அங்கிருந்து தப்பிக்க எத்தனித்த நிலையில், குடுமிப்பிடிக்காரர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து அவரை அடித்து உதைத்ததும் ஆடியோவாக தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

நித்தியுடன் குஜராத்தில் கைது செய்யப்பட்ட சென்னைப் பெண் ஹரிணி எனும் பிரணா பிரியானந்தா குஜராத்திலுள்ள ஆசிரமத்தை நிர்வகித்து வந்திருக்கின்றார். கைதிற்குப் பிறகு கிடைத்த ஜாமீனில் மார்ச் மாத வாக்கில் தனது ஜாகையை பிடதி ஆசிரமத்திற்கு மாற்றி வந்தார். இங்கு ஆசிரமத்தை நீண்டகாலமாக நிர்வகித்து வருவது அசலானாந்தா எனும் பெண். கொத்துச் சாவி யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் இரு வருக்கும் நீயா- நானா போட்டி.

 

ஆசிரமச் செலவுகளுக்காக கைலாசாவிலிருந்து மாதந்தோறும் பிடதிக்கு வரும் தொகை நிறுத்தப்பட்ட நிலையில், பிடதியிலுள்ள உறுப்பினர்களான பக்தர்களை காசி, ராஜபாளையம் மற்றும் திருவண்ணாமலையிலுள்ள நித்தியின் கிளை ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஏப்ரல் முதல் வாரத்திலேயே பிடதியிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 70 ஆனது. அவர்களுக்கும் அன்றாட உணவுக்கு கையேந்தும் நிலை வந்தது.

 

வழிபாட்டிற்காக ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பணமே இங்குள்ளவர்களின் பசியைத் தீர்த்து வந்துள்ளது. நித்திசாமி அவ்வளவுதான். இருப்பதை நாம் எடுத்து வைத்துக்கொண்டால் எங்காவது போய்விடலாம் என்கின்ற எண்ணத்தில், "சுவாமி சமாதி நிலையில் இருக்கின்றார். அவரை வெளிக்கொணர உங்களின் பிரார்த்தனை மட்டும் போதாது ஆசிரமத்தில் உள்ளவர்கள் அனைவரும் 'நீராகாரம்' (பட்டினி) எனும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்'' என நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதாவது, ஆசிரம பக்தர்கள் பட்டினி கிடந்தால் நித்தி எழுந்துவிடுவார் என நம்பவைக்கப்பட்டுள்ளது.

 

நிராகாரத்தால் மிச்சமான பணத்தை திருடிக்கொண்டு ஹரிணி எனும் பிரணா பிரியானந்தா எஸ்கேப் ஆகியுள்ளார். இது தாமதமாக அசலானந்தாவிற்கு தெரியவர குண்டர்கள் உதவியுடன் பெங்களூரு பஸ் நிலையத்திலிருந்து ஹரிணி தூக்கி வரப்பட்டார். வந்தவருக்கு அடி உதையுடன் அவருடைய தனிப்பட்ட வீடியோவும் காண்பிக்கப்பட கப்சிப் ஆனார்'' என்கிறார் பிடதி ஆசிரமத்தைக் கண்காணித்து வரும் உளவு அதிகாரி ஒருவர்.

 

பிடதி ஆசிரமத்தில் பணியாற்றி, தற்பொழுது ராஜபாளையத்தில் இருக்கும் பக்தரோ, "ஆசிரமத்தில் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தம்பதி தங்களது 18 வயது மதிக்கத்தக்க மகனுடன் நித்தியை நம்பி ஆசிரமத்தில் இணைய, காசி ஆசிரமத்தில் மணியும், திருவண்ணாமலையில் கவிதாவும் பணிவிடை செய்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்குமுன் அந்த இளைஞர் பிடதி அனுப்பப்பட்டார். 18 வயதாகும் இளைஞர் உள்ளிட்ட பிடதி ஆசிரம உறுப்பினர்களுக்கு 'நீராகாரம்' எனும் பட்டினிப் பிரார்த்தனை வலுக்கட்டாயமாகப் போதிக்கப்பட்டது. இத்தனை காலம் நன்றாக சாப்பிட்டு வளர்ந்த பையனுக்கு இது ஒத்துப் போகலை. கடந்த பத்து நாட்களுக்கு முன் இவரும், இவரின் நண்பர் ஒருவரும் ஆசிரமத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில் தான் அசலானந்தாவிடம் சிக்கியுள்ளனர்.

 

ஆசிரமக் குண்டர்களை வைத்து அந்த இளைஞரை நிர்வாணமாக்கி, மாட்டுக்குக் கட்டும் மூக்கணாங்கயிறு கொண்டு இரத்தம் வர அடித்துத் துவைத்துள்ளனர். உடலெங்கும் காயத்துடன்தான் அங்கேயே இருக்கின்றார். அவன் சித்ரவதைக்குள்ளாகும்போது அங்கிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பதிவு செய்தது தான் இந்த ஆடியோ. தனக்குத் தெரிந்த 3 ஆசிரம மின்னஞ்சல்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஏற்கனவே ஆசிரமத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கிடைத்துள்ளது. அவர் மூலமாகத்தான் இப்பொழுது வெளியாகியுள்ளது" என்கிறார் அவர்.

 

அந்த இளைஞரின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில், "ஆசிரமத்தில் ஒழுக்கம் தான் முக்கியம். ஆசிரம விதிகளை யார் மீறினாலும் தண்டனையே. அவனுக்கு கிடைத்தது தண்டனை அல்ல... பாவமன்னிப்பு'' என அதிரவைத்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கைலாசாவின் பிரதமர் ரஞ்சிதா; நித்தியிடம் இருந்து கைமாறும் பவர்!

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Ranjitha Prime Minister of Kailash

 

சமீபத்தில் வேலை தேடுவதற்கான தளமும் செயலியுமான ‘லிங்க்டு இன்’ பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் இருக்க, அதன் கீழே கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இயக்குநர் இமயம் என தமிழர்களால் பாராட்டப்படும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் அறிமுகமான ரஞ்சிதா, 20 படங்களுக்குப் பின் தன் கேரியரில் ஒரு தொய்வைச் சந்தித்தார். இந்த தொய்வு காலகட்டத்தில்தான் நித்தியானந்தாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழின் மற்றொரு இயக்குநரான மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது ரஞ்சிதாவுக்கு. சினிமாவா, ஆன்மிகமா என்ற நிலை வந்தபோது, நித்தியானந்தா அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் படவாய்ப்புகளை முற்றிலுமாக உதறித் தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யையாக மாறினார்.

 

காலம் நித்தியானந்தாவை உயரத்திலிருந்து பாதாளத்துக்குத் தள்ளி, நாடுவிட்டு நாடு ஓட வேண்டிய சூழல் உண்டான போது, கூடவே அவரது பிரதான சிஷ்யையாக ரஞ்சிதாவும் ஓட வேண்டியதானது. அப்போதெல்லாம் தான் இழந்த வாய்ப்புகளையும் உயரங்களையும் பற்றி குற்றம் சாட்டும் தொனியில் மீண்டும் மீண்டும் நித்தியானந்தாவிடம் பேசுவதை ரஞ்சிதா வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பரிசாகத்தான் கைலாசாவின் பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு அளித்திருக்கிறார் நித்தி.

 

Ranjitha Prime Minister of Kailash

 

லிங்க்டு இன் புரொஃபைலைத் தவிர வேறெந்த செய்தியும் ரஞ்சிதா குறித்து ஊடகங்களில் காணப்படாத நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யரும் தனது பழைய தர்மத்திலிருந்து ஒதுங்கி வாழும் ஒருவரைத் தொடர்புகொண்டு ரஞ்சிதா அலைஸ் நித்தியானந்தாமயி சுவாமி குறித்த விவரங்களைக் கேட்டோம்.

 

"நித்தியானந்தாவின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பு ரஞ்சிதாவிடம்தான் இருக்கிறது. டெக்னிக்கலாக கண்ட்ரோல் அவரிடம் வந்துவிட்டது. அங்கே உள்ளே இருப்பவர்களிடமிருந்து இப்போது வரும் தகவல் இதுதான். இதில் பழைய ஆட்களுக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும் நித்திக்கு அடுத்த இடத்தை அடைந்திருப்பது ரஞ்சிதாவுக்கு ஆதாயம்தான்'' என்கிறார்.

 

 

Next Story

ஐ.நா.வில் ஆட்டம் போட்ட நித்தி சிஷ்யைகள்; கசிந்த கைலாசா ரகசியம்!

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Nithiyantha kailasa UN ConferenNithiyantha kailasa UN Conference ce
கோப்புப் படம் 

 

ஐ.நா. அமைப்பு பெண்கள் மேம்பாடு தொடர்பாக நடத்திய மாநாடு ஒன்றில், ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளக் கூடிய கூட்டங்களில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் கலந்துகொண்டு, நித்தியானந்தா மீது மனித உரிமை மீறல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி நாடகமாடியுள்ளனர்.

 

தன் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் 2019-ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய நித்யானந்தா, ஆன்மிக வியாபாரத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் ஈக்வடார் கடற்கரைப் பகுதியில் சில தீவுக்கூட்டங்களை வாங்கி அதற்கு கைலாஸா எனப் பெயரிட்டு அங்கேயே தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

 

இந்தியாவை விட்டே தப்பியோடியிருந்தாலும் அவருக்கு மீண்டும் இந்தியா திரும்பவும் இங்கு மீண்டும் ஒரு ஆன்மிக(?) சாம்ராஜ்யத்தை நிறுவவும் ஆசையிருப்பதால் சமூக ஊடகங்கள் மூலம் கைலாஸா குறித்த செய்திகளைத் திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார். அவரது வலைத்தளம் உலகின் முதல் இந்து நாடு கைலாஸா எனவும் இங்கே இருபது லட்சம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கிறது. கைலாஸாவுக்கென தனி வங்கி, கொடி, பாஸ்போர்ட் ஆகியவை உள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும் உலகம் கைலாஸாவை இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

 

இந்த நிலையில்தான் பிப்ரவரி 22, 2023 அன்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஜெனிவாவிலுள்ள ஐ.நா. சபையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது நிறைவுற்ற சில தினங்களில் கைலாஸாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கைலாஸாவின் பிரதிநிதிகள் குறித்த படங்களும் செய்திகளும் வெளியாகத் தொடங்கின.

 

Nithiyantha kailasa UN Conference

 

“உலக அரங்கில் ஜொலிக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாஸா! ஐ.நா. மாநாட்டில் பெண்கள் தலைமைத்துவம் பற்றிய பேச்சில் பிரதிநிதித்துவம்! என்றொரு செய்தி நித்தியானந்தா தரப்பினரால் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பின் வெகுவாகப் பரப்பப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைவதற்கான குழுவின் 84-வது அமர்வில், ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் மா விஜயப்பிரியா நித்தியானந்தா, லாஸ் ஏஞ்சல்ஸ் கைலாஸாவின் தலைவர் மா முக்திதா ஆனந்தா, செயிண்ட் லூயிஸின் கைலாஸா தலைவர் மா சோனா காமத், யுனைடெட் கிங்டத்தின் கைலாஸாவுக்கான தலைவர் நித்ய ஆத்மதாயகி, ப்ரான்ஸின் கைலாஸாவுக்கான தலைவர் மா பிரியப்ரேமா நித்யானந்தா ஆகியோர் உள்ளிட்ட குழு பங்கேற்றது.

 

பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள், வன்முறைகள் பற்றிப் பேச பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் இந்துப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக கைலாஸாவின் பெண் உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர் என நீள்கிறது அந்தச் செய்தி. இந்தச் செய்தி, கைலாஸாவை ஒரு நாடாக ஐ.நா. அங்கீகரிக்கிறதா… கைலாஸா பிரதிநிதிகளுக்கு ஐ.நா.வில் அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால் பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் நித்தியானந்தாவின் டுபாக்கூர் வேலையை அம்பலப்படுத்தின. இந்தச் செய்தி குறித்து விளக்கமளித்திருந்த ஐ.நா. அதிகாரி, “கைலாஸா பிரதிநிதிகள், சமர்ப்பித்த விஷயங்கள் ஐ.நா. பேசிய பிரச்சினைகளிருந்து விலகியவை, அவற்றோடு தொடர்பற்றவை” என்றார். மேலும், “இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாஸா இடம்பெறவில்லை. அரசுசாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் என யாரும் பங்குபெறக்கூடிய பிப்ரவரி 22, 24-ல் ஐ.நா. நடத்திய இரண்டு பொதுக்கூட்டங்களிலேயே கைலாஸா பிரதிநிதிகள் பங்குபெற்றனர்” என்கிறார் இந்தப் பொதுக்கூட்டங்களை மேற்பார்வை செய்த விவியன் குவாக்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பலாம் என சொல்லப்பட்டபோது, ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட விஜயப்பிரியா நித்யானந்தா, கேள்வி கேட்பதுபோல் எழுந்து, “கைலாஸாவின் குடிமக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி அனைத்தும் இலவசம். தன்னிறைவான வளர்ச்சியுடன் திகழும் நாடு” என்று கூறியதுடன், “இந்து மதத்தின் பூர்விக மரபு, வாழ்க்கை முறைகளைப் புதுப்பிப்பதற்காக நித்தியானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். கைலாஸா மக்களும் அதேபோல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதை நிறுத்த தேசிய, சர்வதேச அளவில் என்ன செய்யலாம்?” என கேள்விகள் கேட்டுள்ளார்.


ஆக, யார் வேண்டுமானாலும் பங்குபெறக்கூடிய ஐ.நா.வின் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு அவற்றின், புகைப்படம், வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் கடைபரப்பி, கைலாஸா ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோலவும், கைலாஸாவுக்கு நாடுகள்தோறும் தூதர்கள் இருப்பதுபோலவும், நித்தியானந்தாவை இந்தியாவே துன்புறுத்துவது போலவும் சீன் போட்டுள்ளனர் நித்தியின் சிஷ்யைகள்.


இந்தியாவில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு பதிலளிக்கவியலாத நித்தியானந்தா, எட்டாத தொலைவிலிருக்கும் தைரியத்தில் தன் மீது மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா. கூட்டங்களில் தனது சீடர்களை வைத்து நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

 

- க.சுப்பிரமணியன்