Skip to main content

பாலியல் டார்ச்சர்! தற்கொலைக்கு தள்ளப்படும் பெண் மருத்துவர்கள்!!!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020
dddd

 

பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் பரிசோதித்து அதற்கான சான்றிதழ் அளிப்பவர்களே அரசு பெண் மருத்துவர்கள்தான். அப்படிப்பட்ட பெண் மருத்துவர்களே, உயரதிகாரிகளின் பாலியல் டார்ச்சருக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அதிர்ச்சி புகார்கள் நக்கீரனுக்கு வர விசாரணையில் இறங்கினோம்.

 

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர் பெண் மருத்துவர் ஃபெமிலா. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக உயரதிகாரிகளின் டார்ச்சர்களுக்கு ஆளாகியிருக்கிறார். கடந்த, 2013-ல் நெல்லை மாவட்டம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்த ஃபெமிலாவுக்கு வடக்கன்குளம் பி.எம்.ஓ (Block Medical Officer) எனப்படும் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் மனரீதியாக நெருக்கடிகளை கொடுத்தார் என்பதுதான் இவரது குற்றச்சாட்டின் ஆரம்பம்.

 

இதுகுறித்து, ஃபெமிலா நம்மிடம், ""அப்போதைய, பி.எம்.ஓ கோலப்பன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை மக்களுக்காக பயன்படுத்தப்படும் மருந்துமாத்திரைகளை எடுத்துச்சென்று தனது சொந்த கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளிடம் விற்றுவிடுவார். அதேபோல், அவருடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இ.சி.ஜி, எக்ஸ்-ரே எல்லாம் இங்கு வரச் சொல்லித்தான் எடுப்பார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

 

இதனையெல்லாம், நான் கண்டுகொள்ளாமல் இருக்க எனக்கு பாலியல் ரீதியாக வலைவீச ஆரம்பித்தார். நான், ஒப்புக்கொள்ளாததால் ஃபோனில் அடிக்கடி இரட்டை அர்த்தங்களுடன் பேசி டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்றும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் எதையும் சாதிக்கலாம் என என்னிடம் தூது அனுப்பினார்.

 

அதனால், அப்போதைய டிடியிடம் (துணை இயக்குனர்) கூறினேன். அவர், கொஞ்சம்கூட அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இதனால், கலெக்டர் மீட்டிங்கில் கலெக்டரிடம் கூறினேன். அன்றைக்கு இரவே நான் டூட்டியில் இருக்கும்போது வெட்டும் பெருமாள் எனும் ரவுடியை வைத்து என்னை கொலை செய்ய முயற்சித்தார் கோலப்பன். இது, சம்மந்தமாக பணகுடி போலீசாரும் வழக்கு பதிவு செய்தார்களே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கல. எனவேதான், டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு உயிர் தப்பிவிடுன்னு என்னோடு வேலை பார்த்தவர்கள் சொன்னதால், கவுன்சிலிங் மூலம் டிரான்ஸ்பர் பெற்று 2017-ல் சொந்த மாவட்டத்தில் முட்டத்துக்கு வந்தேன்.

 

dddd

 

இந்த நிலையில்தான், மீண்டும் அதைவிட அதிகமான பாலியல் டார்ச்சர்கள் தொடர ஆரம்பித்தன. 2019 டிசம்பரில் குமரி மாவட்டத்துக்கு டிடியாக (துணை இயக்குனர்) வந்தார் போஸ்கோ ராஜ். இவரும் கோலப்பனின் நண்பர் என்பதால் அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை. டி.டி.யே என்னுடைய லைனுக்கு வந்து, "என்னை நீ எப்போ தனியா வந்து சந்திக்கிறியோ, அப்போதான் உனக்கு நான் உதவி செய்வேன்'' என்றார். 17 பி சார்ஜ் மெமோவை என் வீட்டு கதவில் ஒட்டவைத்தார். நிறைய டார்ச்சர். முதலமைச்சருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதுக்குமேல, என் உயிரைவிடுறதைவிட வேற வழி தெரியல'' என்கிறார் கண்ணீருடன்.

 

டாக்டர் ஃபெமிலாவின் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்று நாம் விசாரித்தபோது, "டிடி போஸ்கோ ராஜால் பாதிக்கப்படும் பெண் மருத்துவர்கள் வெளியே சொல்லக்கூடிய தைரியம் இல்லாதவர்கள். ஃபெமிலா மட்டும் துணிந்து சொல்லியும் மருத்துவதுறை இன்னும் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இத்துறைக்கே அசிங்கமாக உள்ளது'' என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள்.

 

ddd

 

அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர், "பெண் பி.எ.ஓ., விவாகரத்து ஆன இன்னொரு பெண் மருத்துவர் ஆகியோர் இதேபோன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டனர். நாகர்கோயிலில் ஒரு மருத்துவருக்கு சொந்தமான லாட்ஜைத் தான் சுகாரத்துறை துணை இயக்குனர் தனது அலுவலமாக பயன்படுத்திவருகிறார். அவரது வசூல் சென்னையில் உள்ள உயரதிகாரிகள் வரை செல்கிறது'' என்றனர்.

 

குற்றச்சாட்டுகள் குறித்து துணை இயக்குனர் போஸ்கோ ராஜிடம் நாம் கேட்டபோது, "என்னைப்பற்றி கூறுவது எல்லாமே பொய். இது சம்மந்தமாக இயக்குனரிடம் புகார் கொடுத்துள்ளேன். அந்த பெண் மருத்துவர் ஒழுங்கா வேலைக்கு வர்றதில்ல. கையெழுத்து போட வர்றதில்ல. அவர் வேலை பார்த்த எல்லா இடங்களிலுமே இப்படித் தான் உயரதிகாரிகள்மீது புகார் கொடுத்துள்ளார்'' என்றார்.

 

வடக்கன் குளம் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பனிடம் பேசியபோது, "பணியில் அலட்சியமாக நடந்துகொண்டதால் டி.டி அவரை டிரான்ஸ்பர் செய்ததால் இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகளை வீசுகிறார். இவங்க, டார்ச்சரால பொன் சங்கர்னு ஒரு டாக்டர் டிரான்ஸ் ஃபர் வாங்கிட்டு போயிட்டார். எனக்கும் நாகர்கோயில் டிடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழக்கமும் இல்லை'' என்றார்.

 

இது, வெறும் நிர்வாக ரீதியான பிரச்சனை அல்ல. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் உயரதிகாரிகளின் பாலியல் ரீதியான டார்ச்சர்களுக்கு ஆளானால் அது அவர்களின் பணியை பாதிக்கும். அதனால், பாதிக்கப்படுவது காசு செலவழித்து வைத்தியம் பார்க்க முடியாத ஏழை நோயாளிகளே.

 

 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.