Skip to main content

தமாகாவுக்கு நெருக்கடி தந்த எடப்பாடி! - நடந்தது என்ன?

Published on 11/03/2021 | Edited on 12/03/2021

 

ஜி கே வாசன்

 

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் எண்ணிக்கையை முடிவு செய்வதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் கறாராக இருந்த எடப்பாடி, த.மா.கா.வுக்கு எண்ணிக்கையையே சொல்லாமல் இழுத்தடித்தபடியே இருந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி, 'தமாகாவுக்கு 3 சீட் ஒதுக்குகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள்' என வாசனிடம் அதிமுக தலைமை சொன்னது. ஜெயலலிதா பாணியை வாசனிடம் கடைப்பிடித்தார் எடப்பாடி. 


அதாவது, கடந்த 2016 தேர்தலில் வாசனுக்கு 5 சீட்டு கொடுக்க சம்மதித்த ஜெயலலிதா, இரட்டை இலையில் போட்டியிட வலியுறுத்தினார். தனிச் சின்னத்தில்தான் போட்டியிட விரும்புகிறோம் என வாசன் வலியுறுத்தியபோதும், ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் மக்கள் நலக் கூட்டணிக்குத் தாவினார் ஜி.கே.வாசன். 


அதேபோல, இந்த தேர்தலில் ஜெயலலிதா வலியுறுத்தியது போலவே எடப்பாடி தகவல் சொல்லியனுப்பியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் வாசன். அவரை பொறுத்தவரை, 12 சீட்டுகளில் போட்டியிட விரும்பி, த.மா.கா.வின் விருப்பப் பட்டியலையும் ஏற்கனவே எடப்பாடியிடம் ஒப்படைத்திருந்தார். 


இதனை, அமைச்சர்களுடன் அலசி ஆராய்ந்த எடப்பாடி, "ஏற்கனவே வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சு. ராஜ்யசபா சீட்டுக்காக அவருக்கு போடப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு 34. அதாவது, 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இது சமம். அப்படியிருக்கும் போது 12 சீட்டுகள் கேட்டு இப்போது அடம் பிடித்தால் எப்படி? அதனால், 3 சீட்; இரட்டை இலையில் போட்டியிட வேண்டும். இதுதவிர வேறு வழியில்லை" என்று விவாதித்து அதனை ஜி.கே.வாசனுக்கு அமைச்சர்கள் மூலம் பாஸ் செய்துள்ளார் எடப்பாடி. 


ராஜ்யசபா சீட் கொடுத்துட்டோம்; அதனால், இந்த முறை இவ்வளவுதான் என்றால் எப்படி? பாமகவுக்கும் தான் ராஜ்யசபா சீட் கொடுத்தாங்க. அவங்களுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கலையா? என்று ஜி.கே.வாசனிடம் தமாகா சீனியர் நிர்வாகிகள் ஆதங்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா சீட் கொடுத்ததைச் சொல்லிக் காட்டிய விதம் வாசனை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. 


எடப்பாடி சொல்வதை ஏற்பதா? இல்லை தேமுதிக போல விலகிவிடுவதா? என்கிற குழப்பத்தில் இருந்துவந்த வாசன், மீண்டும் எண்ணிக்கையை உயர்த்துங்கள்; எங்கள் சின்னத்தில் போட்டியிடுகிறோம் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு மறுத்த எடப்பாடி, "அதிமுகவின் முடிவு இதுதான். அதில், மாற்றமில்லை எனத் தெரிவித்து இருக்கிறார். இதனிடையே, வாசனுக்காக டெல்லியும் தலையிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இவ்வளவு கடுமை காட்டவேண்டாமே என்று டெல்லியிலிருந்து சொல்லப்பட்டிருப்பதால், எடப்பாடியின் மனம் மாறும் என தமாகாவினர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், 6 தொகுதிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளதாகவும் இரட்டை இலையில் போட்டியிட ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்ததாகவும் தமாகா மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

இந்தநிலையில், நேற்று இரவு  அதிமுக கூட்டணியில் த.மா.கவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

 

 

 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.