Skip to main content

இளம்பெண் ஈவ்டீசிங்! -சிக்கும் டிக்டோக் வில்லன்கள்!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
TikTok


‘குட்டி சொர்ணாக்கா’ என்கிற பெயரில் டப்ஸ்மாஷ்… டிக் டோக் மூலம் இளம்பெண்ணை ஈவ்டீசிங் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் சினிமா ஆசையில் பெற்ற தாயே வீடியோக்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
 

சர்ச்சைக்குரிய வீடியோக்களை பார்த்த மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவரும் பேராசிரியருமான தீபக்நாதன் நம்மிடம், “ஒரு மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை சுற்றி இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு கல்யாணம் பண்ணிக்கிறீயா? என்றெல்லாம் கேலி செய்தும்… கழுத்தை நெறித்தும்… சீண்டியும் கோபத்தை வரவழைத்து அவள் கதறும் வீடியோக்களை எடுத்து டப்ஸ்மாஷ்… டிக்டோக் மூலம் பரப்புகிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரமான மனநிலைகொண்டவர்களாக இருப்பார்கள். 


 

TikTok

                                                                                 தீபக்நாதன்


இப்படி பரப்பிய இளைஞர்களைவிட, இந்த வீடியோவை  ரசிக்கிறவர்களுக்குத்தான் வக்கிரப்புத்தி அதிகமாகிவிட்டது என்று தோன்றுகிறது. குழந்தைமாதிரி இருக்கும் இந்த பெண் பேசும் வீடியோக்களைப் பார்க்கும் குழந்தைகளும் இதேபோல்தானே பேசும்? ஏற்கனவே, சினிமாக்களில் உயரம் குறைவானவர்களை இழிவுபடுத்திக்கொண்டிருக்கும் சூழலில் இப்படியொரு வீடியோ இன்னும் இழிவுபடுத்துகிறது. 
 

இதன்மூலம், உயரம் குறைவானர்களை இன்னும் சிறுமைபடுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். உடல் வளர்ச்சி இல்லாமல் இப்படியிருக்கும் அப்பெண்ணுக்கு சொர்ணாக்கா என்று பெயர் வைத்து வீடியோக்கள் வெளியிடுவதே அப்பெண்ணுக்கு எதிரான குற்றம்தான். இப்படி, மாற்றுத்திறனாளிகளை வைத்து எள்ளி நகையாடும் வீடியோக்களை வெளியிடுபவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதுவும், அந்த இளம்பெண்ணை துன்புறுத்தி வீடியோக்கள் எடுப்பது மிகவும் தவறு” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

TikTok



இதுகுறித்து, பிரபல உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னைசேரன் நம்மிடம், “ஒவ்வொருவரும் சமூகத்தில் ஏதோ ஒரு ஐடிண்டிட்டியை தேடுகிறார்கள். அதனால்தான், தங்களது திறமைகளை ஏதோ ஒருவழியில் வெளிப்படுத்துகிறார்கள். அதனால், டப்ஸ்மாஷ்… டிக் டோக் செயலிகள் மூலம் நடிப்பது… ஆடுவது… பாடுவது என தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. கேவலமாக விமர்சித்தாவது நம்மை பலரும் பார்க்கவேண்டும் என்று நினைத்து எல்லை மீறுவதுதான் ஆபத்து. 
 

ஏற்கனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகள் இரண்டுபேர்  ‘வடிவேலு’ காமெடிக்கு வாய் அசைப்பதுபோலவும் நடிப்பதுபோலவும் வரும் வீடியோக்கள் பலராலும் இரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் வீடியோக்களை பார்க்கும்போது ரசிக்கமுடியவில்லை. காரணம், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். அதுவும், 18 வயது பெண் என்கிறார்கள். அப்படிப்பட்ட, ஒரு பெண்ணைச் சுற்றி  இளைஞர்கள் நின்றுகொண்டு அவளிடம் அந்தரங்க கேள்விகளை கேட்பது… கேலி கிண்டல் செய்வதும் என்பது சட்டப்படி குற்றம். அதைவிட குற்றம்… அதை வீடியோ எடுத்து இணையதளங்களில் பரப்புவது. அந்த இளம்பெண்ணின் வீடியோக்களை பார்க்கும்போது அவர் ஏதோ ஒரு மன எழுச்சி நிலையில் இருப்பதுபோலவே தோன்றுகிறது. அவர், உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப்பார்த்து,  ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? உங்க அக்கா வீட்டுக்காரரு என்ன பண்ணினாரு? உன் மேல கை போட்டுக்கலாமா?’ என்று கேட்டு அவளது உள்ளக்கிளர்ச்சியை தூண்டி அவள் கோபப்படுவதையும் அழுவதையும் ரசிப்பது என்பது மிகப்பெரிய வன்மம்.
 


அந்த இளம்பெண்ணின் வயதுக்கு மீறிய பேச்சை… அதுவும் ஆபாசமான பேச்சுகளையும் அவளுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் கடுமையான தண்டிக்கப்படவேண்டியவர்கள். இப்படி, வீடியோ எடுப்பதை பெற்ற தாயும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவரது பொறுப்பற்றத் தன்மையை காட்டுகிறது. அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டுமோ இல்லையோ இப்படி வீடியோக்கள் வெளியிடுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அப்பெண்ணின் தாய்க்குத்தான்  கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டும். யார் யாரெல்லாம் அப்பெண்ணின் வீடியோக்களை எடுத்தார்கள் என்பதை விசாரித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான், இதுபோன்ற வீடியோக்களை பரப்பாமல் இருப்பார்கள்” என்கிறார் ஆலோசனையாக.
 

இந்த வீடியோவில் இருக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் யார்? என்று நாம் விசாரித்தபோதுதான் இராமநாதபுரம் மாவட்டம் சேதுநகரை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் என்பது தெரியவந்தது. ஊர் மக்களிடம் விசாரித்தபோது, “ஒரு வயசு புள்ளைய காலிப்பசங்க சுத்தி நின்னு வீடியோ எடுக்கிறானுங்க… அந்த வீடியோக்கள நெட்டுல உடுறானுங்கன்னு அந்த பொண்ணோட அம்மா மஞ்சுளாக்கிட்ட பல பேரு சொல்லிட்டோம். அந்த லேடி கண்டுக்கவே இல்ல. விலங்குகளை வெச்சு வித்த காட்டி பணம் சம்பாதிச்சாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா, மாற்றுத்திறனாளி புள்ளைய வெச்சு வித்த காட்டி சம்பாதிக்கணும்னு ஆசை வந்துடுச்சு மஞ்சுளாவுக்கு. அதனாலதான், யார் வீடியோ எடுத்தாலும் அதைப்பற்றி பெரிசா எடுத்துக்கிறதில்ல. இந்த, வீடியோக்கள் பரவி யூ- ட்யூப் சேனல்களில் வர ஆரம்பிச்சதும் இதை வெச்சு சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சுட்டாங்க மஞ்சுளா. படத்துல நடிக்கிறதோ தன்னோட திறமையை வெளிப்படுத்துறதோ பிரச்சனையில்ல. ஆனா, அதுக்காக பெத்த புள்ள அதுவும் பொம்பளப்புள்ளைய எவன் வீடியோ எடுத்தாலும் அதை பப்ளிசிட்டியா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க இந்த புள்ளையோட அம்மா மஞ்சுளா.  ‘ஏம்மா… இப்படி வீடியோ எடுத்து நெட்டுல விடுறானுங்களே… கண்டிக்கவேண்டிதான?ன்னு ஊர்க்காரங்க சொன்னா, ‘என் புள்ளைய பார்த்துக்க எனக்கு தெரியும். உங்க வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டு போறாங்க. இதுக்குமேல, நாம என்ன செய்யமுடியும்?” என்கிறார்கள் வெறுப்புடன்.

 

TikTok

                                                                                   மஞ்சுளா


இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் மஞ்சுளாவிடம் கேட்டபோது, “யாரு வந்து வீடியோ எடுத்து எதுல போடுறான்னு எனக்கு தெரியமாட்டேங்குது. நான், என்ன செய்றது? என் பொண்ணுக்கு இப்போதான் சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்கு எதுவும் பாதிப்பு வந்துடப்போகுது” என்கிறார்… அப்போதுகூட சினிமா வாய்ப்பு பறிபோய்விடுமோ என்றும் கொஞ்சம்கூட பெற்ற மகளின் மீது அக்கறையில்லாமல்.
 

இதுகுறித்து, ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் சுந்தரம்பாளிடம் பேசியபோது, “வீடியோவில் அப்பெண்ணிடம் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இப்பெண்ணிடம் மட்டுமல்ல. எந்த பெண்ணிடமும் இப்படி கேலி கிண்டல் செய்து வீடியோ எடுத்து வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் எச்சரிக்கையாக.
 

என்ன விளைவுகளை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை… எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அவமானப்பாட்டாலும் பரவாயில்லை. சீரியல், சினிமா வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்… பணம் சம்பாதிக்கவேண்டும்… பிரபலமாகவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும்வரை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதுபோன்ற செயல்களையும் ‘செயலி’களையும் தடுக்கவே முடியாது. 
 

 

 


 

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.