Skip to main content

"வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருந்தால் 130 கோடி பேர் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.." - திருமுருகன் காந்தி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

gf



இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் உணவுப்பொருள்கள் வழங்கப்படும் என்றும், மாநில அரசுகள் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

கரோனா தொற்று காரணமாக பிரதமர் 21 நாள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். மத்திய மாநில அரசுகள் இந்த இடைப்பட்ட நாட்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அறிவித்துள்ளது. இவை போதுமானதாக கருதுகிறீர்களா?

ரொம்ப தீவிரமாக இந்த நோயின் தாக்கம் இருக்கின்றது. இதற்காக நாம் வீடுகளில் தனிமைபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வதையோ, உறவினர்களை சந்திப்பது என்பதோ சாத்தியமில்லை. அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை விட முதியவர்களை தீவிரமாக இது பாதிக்கின்றது.  அதற்காக சில கடினமான முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதற்காக இந்த 21 நாள் லாக் டவுனை கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் இதில் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்கு, அன்றாடம் காட்சிகளுக்கும் அரசாங்கம் என்ன செய்ய இருக்கின்றது என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த இடைப்பட்ட நாட்களுக்கு 5 கிலோ அரிசியும், 1 கிலோ பருப்பும் தருவதாக சொல்கிறார்கள். அவர்கள் தரும் உணவுப்பொருட்கள் இந்த 21 நாட்களுக்கு போதுமா? பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருக்கும் இந்த நாட்டில் இது எப்படி போதுமானதாக இருக்கும். 

இந்த யூ டியூப் பார்ப்பவர்கள், பேஸ்புக் பார்ப்பவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களிடம் இரண்டு மாதத்துக்கு வடிக்க அரிசியாவது இருக்கும். ஆனால் இந்த நிலைமை நாடுமுழுவதும் இருக்கிறதா என்றால் இல்லை. இன்றைக்கும் கூலி வேலைக்கு போயிட்டு 500 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலைமை என்ன?  அவர்கள் எங்கே போய் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கரோனா பற்றி கவலை வருமா? என் குடும்பம் சாகக்கூடாது என்ற கவலை தான் அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு அதிகம் இருக்கின்றது. இதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுங்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30 கிலோ அரசி கொடுங்கள். இல்லை என்றால் இறக்குமதி செய்தாவது கொடுங்கள். இது தற்போது இருக்கின்ற முதல் பிரச்சனை. 

அடுத்து இந்த நோய் வெளிநாட்டில் இருந்துதான் வந்தது என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன செய்திருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமை படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் வெளிநாட்டில் இந்த நோய் தீவிரமாக பரவியதை நாம் அனைவரும் முன்னரே பார்த்து வருகிறோம். அப்படி இருக்கையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எத்தனை லட்சம் பேர் இருக்க போகிறார்கள். 10 லட்சம் பேர் இருப்பார்களா? அவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்கள் வைத்திருந்தால் 130 கோடி மக்கள் வீட்டுச்சிறையில் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது அல்லவா? இதை ஏன் அரசாங்கம் செய்யவில்லை. இதை செய்திருந்தால் இவ்வளவு சிரமங்களை மக்கள் அனுபவிக்க தேவையில்லை. 

 

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...