Skip to main content

தமிழகத்தில் வெற்றிபெற பீகாரில் இருந்து ஆட்களை கூட்டி வருகிறார்கள் - சீமான் தாக்கு!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

gh



தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின்போது சீமான் பேசியதாவது, "நீங்கள் திமுக, அதிமுகவை தோற்கடித்து விடுவியா என்று தொடர்ந்து என்னிடம் சிலர் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் சொன்ன ஒரு கருத்தை தற்போது சொல்கிறேன். ஸ்டாலின் என்றால் நம்மூர் ஸ்டாலின் இல்லை, ஜோசஃப் ஸ்டாலின். உலகில் வெல்ல முடியாத படை என்று ஒன்று இல்லவே இல்லை என்று அவர் கூறுகிறார். அதைப் போல இவர்கள் ஒன்றும் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அதிமுக, திமுக என்பது வெல்ல முடியாது படையாக நான் கருதவில்லை, இவர்கள் இருவரும் வெறும் சொறிசிறங்கு படை. இவர்களை நாம் வெல்ல முடியாதா என்ன! நாம் இவர்களுடன் போரிட்டு எல்லாம் இவர்களை வீழ்த்த வேண்டாம். அவர்களாகவே தங்களை அழித்துக்கொள்வார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  

 

தேர்தலில் வெற்றிபெற பீகாரில் இருந்து ஆட்களைக் கூட்டி வருகிறார்கள். அவர்களுக்கு 100 கோடி சம்பளம். திமுக ஒரு அரசியல் கட்சி இல்லை, அது ஒரு குடும்பக் கட்சி. கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் அதற்கு திமுக மிகச் சிறந்த உதாரணம். கட்சியைக் கம்பெனியாக்கி நீண்ட காலம் ஆகிறது. ஆனால் நீங்கள் இன்னும் அவர்களுக்கு வாக்களித்து இந்த நாட்டைச் சீரழித்து வருகிறீர்கள். இவர்கள் இவ்வளவு சேவை செய்து, போராடி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல. தங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காத்தான்.

 

தற்போது ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சியில் 10 ஆண்டுகளாக இல்லாதவர்களும் மீண்டும் கொள்ளையடிக்க இந்தத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஒரு முதலீட்டாளன் பணத்தைப் போடுவது அதைப் பல மடங்கு அதிகரிக்கவா அல்லது மக்கள் சேவைக்காகவா? மக்களாகிய நீங்கள் தெளிவாக சிந்தனை செய்து பார்க்க வேண்டும். ஒரு வேட்பாளர் வாக்கிற்கு 500 கொடுக்கிறார் அல்லது 1000 ரூபாய் கொடுக்கிறார் என்றால், அவர் வெற்றிபெற்ற பிறகு 500 கோடியை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான். லாபம் இல்லை என்றால் அவர்கள் ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் என்ன மக்கள் சேவை செய்யவா வந்திருக்கிறார்கள். நாங்கள் புதிய தேசம் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பிள்ளைகள் இந்த தேர்தலில் களமாட இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அடக்குமுறை, பாலியல் வன்கொடுமை, சாதிய பாகுபாடு இல்லாத தேசத்தை நாங்கள் நிச்சயம் அமைப்போம். எங்களுக்கு ஒரு வாய்ப்பை மட்டும்தான் உங்களிடம் கேட்கிறோம். நிச்சயம் நாங்கள் நல்லது செய்வோம். கெடுப்பவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை நல்லது செய்ய நினைக்கும் எங்களுக்கு ஒருமுறை கொடுங்கள் என்று நாங்கள் வேண்டிக் கேட்கிறோம்" என்றார். 

 

 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.