Skip to main content

ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கு ஆனா இதிலெல்லாம் உடன்பாடு இல்லை.. -  த.வெ.க தலைவர் கறார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
There is faith in astrology but there is no agreement in all this.. - T.V.K

‘தமிழக வெற்றி கழகம்' எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் பெயரிலிருந்த இலக்கணப் பிழையை சரி செய்ததோடு கட்சியின் கட்டமைப்பை விரிவாக்குதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் என அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார். இதற்காக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொளியில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய்.

‘சட்டமன்றத் தேர்தல்தான் (2026) தனது இலக்கு' என சொல்லி நாடாளுமன்றத் தேர்தலின் போதே (2024) தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார் விஜய். கட்சியின் பெயரை முறைப்படி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறார். கட்சியின் பெயரில், வெற்றி கழகம் என்பதற்கிடையே ‘க்’ வரவேண்டும்; ‘க்’ இல்லாமல் இருப்பது மாபெரும் இலக்கணப் பிழை என வாதிட்டனர் தமிழறிஞர்கள்.

தமிழ் இலக்கணத்தில் வல்லின ஒற்று (மெய்யெழுத்து) மிகுதல், மிகாமல் இருத்தல் என இரண்டு விதிகள் உண்டு. அந்த வகையில், வெற்றி என்பது நிலைமொழி, கழகம் என்பது வருமொழி. வெற்றி எனும் சொல்லின் கடைசி எழுத்து இகர ஈற்றாக இருந்து, வரும் மொழியில் வல்லின எழுத்து இருந்தால் அந்த எழுத்தின் ஒற்று மிகும் என்பது புணர்ச்சி இலக்கணம்.

அதன்படி வெற்றி என்பதில் கடைசி எழுத்தான றி (ற்+இ)-யில் இ எனும் உயிர் எழுத்து கடைசியில் (ஈற்று) இருக்கும் நிலையில், வரும் மொழியான கழகத்தின் முதல் எழுத்து வல்-னமாக (க, ச, ட, த, ப, ற ) இருக்கிறது. இகர ஈற்றைத் தொடர்ந்து வல்லின எழுத்தான க வரும் மொழியாக வருவதால் அந்த வல்லின எழுத்தின் ஒற்றான (க=க்+அ) க் (மெய்யெழுத்து) தோன்றும் (மிகும்). அதனால், வெற்றிக் கழகம் என்பதே இலக்கணப் பிழையின்றி மிகச் சரியானது.

ஜோதிடம், ஜாதகம் என்பதில் நம்பிக்கை கொண்ட விஜய், இலக்கணப்பிழை இருப்பதையறிந்து மிகவும் கோபப்பட்டிருக்கிறார். ஜோதிடர்களிடம் அவர் விசாரணை நடத்திய போது, ”நியூமராலஜிப்படி "க்' வரக்கூடாது. அதனால் "க்' தேவையில்லை’என்று எதையெதையோ சொல்லி வாதிட்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

இதனை ஏற்க மறுத்ததுடன், "ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதுதான்; அதற்காக கண்மூடித்தனமாக நம்பி இலக்கணப் பிழையோடு கட்சிப் பெயர் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிழையைச் சரி செய்ய வேண்டும்'' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழறிஞர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மாற்றினால், அதுவே ஒரு விமர்சனமாக உங்களுக்கு எதிராகத் திரும்பும் என ஜோதிடர்கள் சொல்ல, “அது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. தவறு என தெரிந்தால் அதனை திருத்திக் கொள்வதுதான் சரி. அதற்காக எந்த விமர்சனம் வந்தாலும் எதிர் கொள்ளலாம்” என்றதோடு, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம், “கட்சியின் பெயரில் இனி எந்த அறிவிப்பு வெளிவந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் என இலக்கணப்பிழையின்றிதான் வரவேண்டும்” என்று உத்தரவிட்டார் விஜய்.

தற்போது கட்சியின் பெயரிலிருந்த இலக்கணப்பிழை சரி செய்யப்பட்டு, "தமிழக வெற்றிக் கழகம்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கண்டு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கும் முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை பனையூரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வீடியோ கான்ஃபரன்சில் விரிவான ஆலோசனை நடத்தினார் விஜய்.

இதுகுறித்து விசாரித்தபோது, “விஜய் மக்கள் இயக்கத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே 10 லட்சத்தைத் தாண்டும். தற்போது அரசியல் கட்சியை விஜய் தொடங்கியிருப்பதால், மக்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களை அப்படியே கட்சியின் உறுப்பினர்களாக மாற்றுவதற்காகத்தான் ஆலோசனைக் கூட்டம். மக்கள் இயக்கத்தினரை கட்சியின் உறுப்பினர்களாக மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் அரசியல் கட்சி உறுப்பினர்களாக இணைவதற்கு சம்மதமா எனக்கேட்டு அவர்களின் ஒப்புதலுடன் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் தீர்மானம் நிறைவேற்றிவிட்டால் போதுமானது. கட்சியில் அவர்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளலாம்.

இதுதவிர, ஏற்கெனவே மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்தவர்கள், அரசியல் கட்சி தொடங்கியதும் உறுப்பினர்களாக சேர விரும்புபவர்கள் என நிறைய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களை முறைப்படி கட்சி உறுப்பினர்களாக இணைக்கவும் ஆலோசனை நடந்தது. மேலும், கட்சியை வலிமைப்படுத்த அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கழகங்களை அமைத்தல், கட்சியின் துணை அமைப்புகளாக அணிகள் பிரித்தல், இவைகளுக்கான பதவிகளை உருவாக்குதல், அதில் தகுதியானவர்களை நியமித்தல் என விவாதிக்கப்பட்டது.

கட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், மாநில நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக நிர்வாகிகள் வரை பதவிகளில் யாரை அமர்த்துவது என்பதுதான் புதிய பிரச்சனை. அதாவது, மக்கள் இயக்கத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பொறுப்பாளர்கள் பதவிகளில் இருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேருக்கும் கட்சியில் பதவி கொடுத்துவிட முடியாது. ஏன்னா, அரசியல் கட்சியில் அத்தனை பதவிகளை உருவாக்க முடியாது. மக்கள் இயக்கத்தில் பதவிகளில் இருந்தவர்கள் எல்லோரும், அரசியல் கட்சியிலும் பதவியை எதிர்பார்ப்பது இயல்பானது. ஆனால், கொடுப்பதற்கு பதவிகள் இருக்காது. இதனை சரி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மக்களாட்சி, மதச் சார்பின்மை, சமூகநீதி, சமவாய்ப்பு, சம உரிமை உள்ளிட்ட சமத்துவ கொள்கை கொண்ட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன” என்கிறார்கள் மக்கள் இயக்கத்தினர்.

இப்படியாக சீரியஸ் மோடில் தமிழக வெற்றிக் கழத்தின் அரசியல் பணிகள் நடைபெற்று வர, வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரு மாநாடு நடத்தலாமா என்றும், அப்படி மாநாடு நடத்தினால் அதனை மதுரையில் நடத்தலாம் என்றும் விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

-சஞ்சய்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.