Skip to main content

ரூ.998 கோடி மதிப்பிலான கலைப்பொருட்கள் திருட்டு! மற்றுமொரு புகாரில் சிக்கும் சுபாஷ் கபூர்!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

வரலாற்றின் தடத்தை, அதன் தொன்ம அடையாளங்களைத் திருடி வசமாகச் சிக்கிக்கொண்ட சிலைக்கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் மீது வாஷிங்டனில் மிக முக்கியமான புகார்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களைத் திருடியதாக சுபாஷ் கபூர் உள்ளிட்ட எட்டு பேர் மீது மேன்ஹேட்டன் வழக்கறிஞர்கள் மேத்யூ போக்தனோஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஹிர்ஸ்க் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் பொருட்களின் தற்போதைய மதிப்பு மட்டுமே, ரூ.998 கோடியாக இருக்கும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

statue


1986ம் ஆண்டு ‘கபூர்ஸ் கம்பெனி ஆஃப் ஆர்ட் ஃப்ரம் தி பாஸ்ட்’என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சுபாஷ் கபூர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 26, 2016-ல் அந்த நிறுவனம் மூடப்படும் வரையில் இந்தத் திருட்டு வேலைகள் நடந்திருக்கிறது. சுபாஷ் கபூர், சஞ்சீவ் அசோகன், தீன் தயாள், ரஞ்சீத் கன்வார், ஆதித்யா ப்ரகாஷ், வல்லப் ப்ரகாஷ், ரிச்சர்ட் சால்மோன் மற்றும் நீல் பெர்ரி ஸ்மித் ஆகியோரின் பெயர்கள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை, உரிமையாளர்கள் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாத வண்ணம், தெரிந்தே மறைத்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை போலியான ஆவணங்களைத் தயாரித்து, சட்டத்தை ஏமாற்றி மியூசியங்களுக்கும், நிறுவனங்களுக்கும் விற்பனை செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வழக்கில், 2011-ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூர், பின் இந்தியா கொண்டுவரப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போதே இதுதொடர்பான விரிவான செய்திகளை தொடராக வெளியிட்டது நக்கீரன்.

 

statue


“தற்போது சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் திருடப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டு சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு அச்சுறுத்தல் உண்டாகும்” என்கிறார் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்துக்கான தலைவர் சந்தீப் சக்கரவர்த்தி.


சிங்கப்பூரைச் சேர்ந்த கலை ஆர்வலர் விஜயகுமார், “அமெரிக்க சட்ட அமலாக்கப்பிரிவின் விசாரணையில் இருந்து நம் சட்ட அமலாக்கப்பிரிவு நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். நம் தொல்லியல் ஆய்வுத்துறை இதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டதோடு, குற்றவாளிகள் தப்பிக்க வழி அமைத்துக் கொடுத்துவிட்டது” என்று ஆதங்கப்படுகிறார்.     

statue


இதுபோன்ற சிலைக்கடத்தல் நெட்வொர்க் ஹாங்காங்கை மையமாகக் கொண்டே செயல்படுகிறது. மேலும், லண்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கைதேர்ந்த நெட்வொர்க்குகள் இதில் மிகத் தீவிரமாக ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.