Skip to main content

டாஸ்மாக் விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வின் மறைமுக அரசியல்... உண்மை நிலவரம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

admk


உச்சநீதிமன்றம் வரை போராடி மதுக்கடைகளைத் திறந்து விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மதுப்பிரியர்களை மனம் மகிழ வைப்பதில் "போர்க்கால' நடவடிக்கையை எடுத்திருக்கும் எடப்பாடிக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. இதனை எதிர்கொள்ளும் முகமாக தி.மு.க.வுக்கு பதிலடி தந்து வருகிறது அ.தி.மு.க.. கழகங்களின் மது அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது.
 


இதுகுறித்து அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவோ, அறிக்கை வெளியிடவோ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வித தார்மீக தகுதியும் உரிமையும் கிடையாது. தமிழகத்தில் பாக்கெட் சாராயம் என்றும், மலிவு விலை மது என்றும் மதுக் கடைகளைத் திறந்தவிட்ட சூத்திரதாரி கலைஞர்தான். அது மட்டுமல்லாமல் மதுக்கடைகளை நடத்த தனியாருக்கு அனுமதி தந்து அரசியல் ரவுடிகளை தொழிலதிபர்களாகவும், தி.மு.க.வுக்கு பணம் காய்க்கும் மரமாகவும் வளர்த்து விட்டவர் கலைஞர்.

மேலும், தி.மு.க.வினருக்கும் தி.மு.க. ஆதரவாளர்களுக்கும் மது ஆலை லைசன்ஸ் அதிகளவில் தரப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான். தற்போதைய நிலவரப்படி, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை 11 நிறுவனங்கள் சப்ளை செய்வதாகச் சொல்லப்படுகிறது. இதில், தி.மு.க.வினரிடமும் தி.மு.க.வின் ஆதரவாளர்களிடமும்தான் பல நிறுவனங்கள் இருக்கின்றன.

உண்மை இப்படி இருக்க, மதுக் கடைகளுக்கு எதிராக ஸ்டாலின் போராடுவது என்பதெல்லாம் அரசியல் லாபங்களுக்காகவும் மக்களை ஏமாற்றவும்தான். மக்கள் முட்டாள்கள் கிடையாது. மதுவிலக்கில் தி.மு.க.வின் யோக்கியதைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். பூரண மதுவிலக்கிலும், மக்களின் ஆரோக்கியத்திலும் உண்மையான அக்கறை இருக்குமானால், தி.மு.க.வினரும் அக்கட்சி அனுதாபிகளும் நடத்தும் மது ஆலைகளை இழுத்து மூட ஸ்டாலின் உத்தரவிடலாமே! செய்வாரா? செய்ய மாட்டார். ஏனெனில், அந்த மது ஆலைகள்தான் தி.மு.க.வின் பொன் முட்டையிடும் கோழிகள். அதனால், மதுக்கடைகளுக்கு எதிராகக் கருத்து சொல்வதற்குக்கூட தி.மு.க.வினருக்கு உரிமை கிடையாது. பூரண மதுவிலக்குதான் அ.தி.மு.க.வின் கொள்கை. காலமும் நேரமும் ஒத்துழைக்கும்போது இதனை அ.தி.மு.க. சாத்தியமாக்கும். மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்போம் என்ற எங்கள் புரட்சித்தலைவியின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர், அதற்கான முயற்சியில் இருக்கிறார்'' என்கிறார் மிக அழுத்தமாக.

 

dmk


தி.மு.க.வின் தென்சென்னை மா.செ.வும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.விடம் பேசியபோது, "பூரண மதுவிலக்கு தான் தி.மு.க.வின் உயிர்நாடி! அதனை 2016 தேர்தல் அறிக்கையில் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறோம். மதுக்கடைகளுக்கு எதிராக, தி.மு.க. மட்டுமே உறுதியாகப் போராடி வருகிறது.

மதுஆலைகளில் தி.மு.க.மீது குற்றம்சாட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு யோக்கியதை கிடையாது. 'மிடாஸ்' மது நிறுவனத்தை சசிகலா மூலம் நடத்தியவர் ஜெயலலிதா. சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து வெளியேற்றியபோது, அந்நிறுவனத்தின் நிர்வாகப் பதவியில் ‘சோ-வை நியமித்தவரும் ஜெயலலிதாதானே! அந்த நிறுவனத்திடமிருந்து தான் அதிகப்படியான மதுபானங்களைக் கொள்முதல் செய்கிறது எடப்பாடி அரசு. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என்றார்களே, குறைத்தார்களா? குறைப்பதாக பாவ்லா காட்டி விட்டு கடைகளை அதிகரித்தே வருகின்றனர். அ.தி.மு.க. அரசின் இந்த லட்சணத்தைச் சட்ட மன்றத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறேன்.
 


தி.மு.க.வில் இரண்டு பேர் மட்டுமே மது ஆலை வைத்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் சப்ளை செய்யவே அவை இயங்குகின்றன. மேலும், எங்களிடம்தான் வாங்க வேண்டும் என தி.மு.க.வினர் தமிழக அரசைக் கட்டாயப்படுத்தவில்லை. மதுக்கடைகளுக்கு எதிராகத் தமிழகமே போராடும்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் எடப்பாடி அரசு தாக்கல் செய்த மனுவைப் பார்த்த தலைமை நீதிபதி, "உங்களுக்கு மக்களின் உயிர் மீது அக்கறையில்லையா?' எனக் கேட்டதற்குப் பிறகும், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து மதுக்கடைகளைத் திறந்திருக்கும் எடப்பாடி அரசை என்னவென்று சொல்வது?
 

 

senthil


மக்கள் மீது அக்கறை இல்லாத மனிதநேய மற்ற கொடுங்கோல் அரசுதானே இது ? அதனால் தி.மு.க.வை குற்றம்சொல்ல அ.தி.மு.க. தலைவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இதையெல்லாம் மறைக்கத்தான் தி.மு.க.வினர் மதுஆலை நடத்துவதாகக் கூக்குரலிடுகிறார்கள். இந்த நெருக்கடி காலத்தில் மது குடிக்காமல் திருந்த நினைத்தவர்களைக் கூட, நீங்கள் எப்படித் திருந்தலாம் என அவர்களை மீண்டும் குடிக்க வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. மக்களிடமிருந்து இவர்கள் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் ஆவேசமாக.

மதுக்கடைகளுக்கு எதிராகவும், முழுமையான மது விலக்கை வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக போராடி வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, ’’மது ஆலைகள், மதுக்கடைகள் (டாஸ்மாக்), மதுக்கூடங்கள்(பார்கள்) ஆகிய மூன்றும் ஒரு முக்கோணம். இதன் ஒரு முனையைக்கூட மழுங்கடித்துவிடமுடியாது. அந்தளவுக்கு அரசியல் பின்னிப் பிணைந்திருக்கிறது. மதுஆலைகள் உயர்மட்ட அரசியல் வாதிகளுக்கு, மதுக்கடைகள் அரசாங்கத்துக்கு, பார்கள் கீழ்மட்ட அரசியல்வாதிகளுக்கு எனப் பணம் தரும் அட்சயப்பாத்திரம்.

அதனால் இதை எதற்காக உடைக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளின் விருப்பம். ஆனால், இதனைத் தங்களுக்குச் சாதகமாக மறைத்துக்கொண்டுவிட்டு, அரசியல் செய்வதில் இரு கட்சிகளுக்கும் ஏக திறமை உண்டு. மதுவிலக்கை 2016-க்கு முன்பும் பின்பும் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். 2016-க்கு முன்பு வரை தேர்தல் அரசியலில் விவாதிக்கிற அளவுக்கு இருந்ததில்லை. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் மற்றும் எங்களைப் போன்ற சமூக அமைப்புகளின் வலிமையான போராட்டங்கள்தான் மது விலக்கு மக்கள் பிரச்சனையாக மாறியது.

அரசியல் கட்சிகளும் இதன்மீது கவனம் செலுத்தின. பூரண மதுவிலக்கை தி.மு.க.வும் பா.ம.க.வும் வலியுறுத்தின; அ.தி.மு.க.வோ படிப்படியாக என சொன்னது. ஆக, 2016-க்குப் பிறகுதான் மது விலக்கு கொள்கை அரசியல் வடிவமாக மாறுகிறது. ஆனால், தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே மக்கள்மீது உண்மையான அக்கறை இல்லை என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

மதுக்கடைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது வாதாடிய அரசு வழக்கறிஞர், "அரசுக்கு வருவாய் இழப்பு இருக்கிறது; உடனடியாக நிறுத்த முடியாது; நாலைந்து வருசம் இருந்தால்தான் முழுமையாக நிறுத்த நாங்கள் திட்டமிட முடியும்' எனச் சொன்னார். படிப்படியாக நிறுத்துவோம்னு 2016-லேயே அறிவித்த இவர்கள், கடந்த 4 வருசத்தில் திட்டமிட்டிருக்கலாமே? வருவாய் பெருக்கத்துக்கு மாற்று வழிகளை ஆராய்ந்திருக்கலாமே! கரோனா விவகாரத்திற்கு ஏகப்பட்ட கமிட்டிகளை போட்டவர்கள், அதுபோல மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைக்க அனைத்துத் தரப்பு வல்லுநர்களையும் அடங்கிய ஒரு கமிட்டியை அமைத்து திட்டமிட்டிருந்தால் இந்நேரம் மதுவிலக்கு மற்றும் மாற்று வாருவாய்க்கான இலக்கில் 90 சதவீதம் எட்டியிருக்க முடியும். ஆனா, எதுவும் நடக்கவில்லை. படிப்படியாக என்றவர்கள், மது விலக்கை அமல்படுத்த எத்தனை படிகள் இருக்கிறது? எந்தப் படியில் அரசு நிற்கிறது? எனத் தெரியவில்லை. ஆக, மதுவிலக்கிலும் மக்கள் ஆரோக்கியத்திலும் உண்மையான அக்கறை எடப்பாடி அரசுக்கு இல்லை.
 

http://onelink.to/nknapp


தி.மு.க.வோ பூரண மதுவிலக்கு என அறிவித்திருந்தது. மதுவிலக்கில் தி.மு.க.வுக்கு அக்கறையிருக்குமானால், மதுக்கடைகள் மூடப்படும் வரையில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு தமிழகம் முழுவதும் தினமும் தி.மு.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியிருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்சனை தேசிய அளவில் எதிரொலித்து ஒரு முடிவு கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட போராட்டத்தை தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரோ, இந்நாள் தலைவர் ஸ்டாலினோ வடிவமைக்க வில்லை. வெறும் அறிக்கைவிடுவதையும், 2 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துவதையும் கடைப்பிடித்தார்களே தவிர, இவர்களுக்கும் உண்மையான அக்கறை கிடையாது. இருந்திருந்தால் தி.மு.க.வினரின் ஆலைகளை மூடி எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தியிருப்பார் ஸ்டாலின். தற்போதைய நெருக்கடியான நேரத்திலாவது குறைந்தபட்சம் 6 மாசம் ஆலைகளை மூட வைக்கிறேன் என்கிற நடவடிக்கையாவது அவர் எடுத்திருக்க வேண்டும். செய்யவில்லை. கண்துடைப்பு போராட்டங்களால் பயனில்லை.

தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வினரின் மது ஆலைகளுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. மது ஆலைக்கும் பிஸினஸ் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டது. இதுதவிர எதிர்க்கட்சியினரின் ஆலைகளில் கொள்முதல் செய்வதை அ.தி.மு.க.- தி.மு.க. நிறுத்தவில்லை. இன்று வரையிலும் அப்படித்தான். கழகங்களின் மது அரசியலை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களை எளிதாக நினைத்தால் கழக தலைவர்களின் கணக்குகள் தவறாகும்'' என்கிறார் மிக இயல்பாக.



 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.