Skip to main content

2016 தேர்தல் முடிவில் அதிமுக -134, திமுக -98... 2019ல்??? எம்.எல்.ஏக்கள் போன பாதை...

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தமிழ்நாட்டிலுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வரும் மே 19 அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. 2016 தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போதைய நிலை வரை முழு விவரங்கள்...
 

tamilnadu assembly
 

2016ம் ஆண்டு 232 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது. அந்தத்தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது. இதில் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். வேறெந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாகக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. சீனிவேல் பதவி ஏற்கும் முன்பே இறந்தார். அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134ல் இருந்து 133 ஆக குறைந்தது. மூன்று காலியிடங்கள் இருந்தன.

 
காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ஆறுமாத இடைவெளியில் இடைத்தேர்தல் வைக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இதனால் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.


அதன்பின் 2016 டிசம்பர் 5 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைந்தது. அதன்பின் 2017 டிசம்பரில் ஆர்.கே. நகர் தேர்தல் நடந்தது. இதில் அறுதிப்பெரும்பான்மையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனால் அதிமுக கூட்டணி 135, திமுக கூட்டணி 98, சுயேட்சை 1 என எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அமைந்தது. அதன்பின் ஓபிஎஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். தர்மயுத்தம், சசிகலா சிறை, தர்மயுத்தம் முடிந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்தது இவையெல்லாம் முடிந்தபின்பு, டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர், தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என புதுக்கட்சி தொடங்கியது என பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
 

kalaignar jayalalithaa
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர். இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு வந்து, விசாரணை நடைபெற்றுகொண்டிருந்தது, முதலில் விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அவ்வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. மூன்றாவது நீதிபதி ஆகஸ்ட் 31 வரை இரு தரப்பினரையும் விசாரித்துவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார். 
 

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ் காலமானார். அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியானது. அப்போதுவரை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134, திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1, காலியிடங்கள் 2 என ஆனது.



இந்நிலையில்தான், அக்டோபர் 25 அன்று, 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அதிமுக 116, திமுக 97, சுயேட்சை 1(தினகரன்), என்பது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையாகவும், காலியிடங்கள் 20 ஆகவும் ஆனது.


1998ல் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், 2019 ஜனவரி மாதம், 7ம் தேதி அன்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 115, திமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1 என்ற நிலையில், 21 இடங்கள் காலியாக இருந்தது. 


மார்ச் 20ம் தேதி கோயம்புத்தூரிலுள்ள சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அதிமுக 114, திமுக 97, சுயேட்சை 1 என்றானது. தற்போதுவரை 234 தொகுதிகளில், 212க்கு (114+97+1) எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த 22 தொகுதிகளில் 18க்கு தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

 

 

 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.