Skip to main content

டாஸ்மாக் டோக்கனின் ரகசிய பின்னணி!!! டாஸ்மாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியும் விதியை மதிக்காத தமிழக அரசு!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

admk



அதிரடி வேகம் காட்டி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, அது தொடர்பான விதிகளை எல்லாம் காற்றிலே பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.


இந்த கரோனா காலத்தில், டாஸ்மாக்கை திறப்பது தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று உயர்நீதிமன்றம் தடைவிதித்தும்கூட, டாஸ்மாக்கை திறந்தே தீருவோம் என்று சுப்ரீம் கோர்ட்டுக்குப் போன எடப்பாடி அரசு, “டாஸ்மாக்கை திறப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று வாதிட்டு, கடைகளை திறக்க 15-ந் தேதி அனுமதி வாங்கியது.

அதே வேகத்தில் மறுநாளே, சென்னை, திருவள்ளூர் நீங்கலாக தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டுதான் உட்கார்ந்தது எடப்பாடி அரசு. டாஸ்மாக்கில் இவ்வளவு அவசரம் காட்டியவர்கள், அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்றால், உதட்டை பிதுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நம்மிடம் பேசிய அந்த சமூக ஆர்வலர் “நீதித்துறையும் எடப்பாடி அரசும் தங்களுக்குள் ஒரு அண்டர் டீலிங்கை வைத்துகொண்டு, டாஸ்மாக் விஷயத்தில் சடுகுடு ஆடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், உச்சநீதிமன்றத்தில் 14-ந் தேதி இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டபோது, டோக்கன் முறையில், அதிலும் ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மதுபானம் விநியோகிக்கப்படும்ன்னு நீதிமன்றத்திடம் வாக்குறுதி கொடுத்தது தமிழக அரசு. அதையொட்டி, 15-ந் தேதி உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வந்த அன்று மதியமே, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் டோக்கனை சப்ளை செய்துவிட்டது அரசு. தங்களுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என்பது எடப்பாடி அரசுக்கு எப்படித் தெரியும்?’’என்கிறார் அழுத்தமாக.

 

 

tasmac



ஏற்கனவே நீதிமன்றம் வரையறுத்த படி, குடிகாரர்கள் 6 அடி சமூக இடைவெளியுடன் வந்துதான் மதுபானத்தை வாங்க வேண்டும். அவர்களுக்குத் தலா நான்கு குவார்ட்டர் அல்லது இரண்டு ஆஃப் அல்லது ஒரு ஃபுல் பாட்டில் மதுபானம் மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க, வாரத்தின் ஏழு நாளைக்கும், ஏழு நிறங்களில் தனித்தனி டோக்கன்கள் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டன. ஆனால் முதல்வர் எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்திலேயே இப்படியான விதிகள் பின்பற்றப்படவில்லை. அதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளும் நடந்தது.


இது குறித்தெல்லாம் டாஸ்மாக் பணியாளர்களிடம் நாம் கேட்டபோது...’’'ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 70 டோக்கன் அளவுக்கு மதுபானங்களை கொடுக்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு மணி நேரம் கடையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் எங்கள் மேலதிகாரிகளோ, மதுப்பிரியர்கள் எத்தனை பாட்டில் கேட்டாலும் கொடுக்கச் சொன்னார்கள். ஒரு ஃபுல் மது பாட்டில் 1000 ரூபாய் என்றாலும் கூட, 500 பேருக்கு ஒரு ஃபுல் வீதம் விற்றால் சராசரியாக ஒரு கடையில் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகும். ஆனால் பெரும்பாலான கடைகளில் 10 லட்ச ரூபாயையும் தாண்டி சேல்ஸ் ஆகியிருக்கு. அதோடு மேலதிகாரிகளை கவனிக்கவேண்டும் என்பதால் பாட்டிலுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை உபரி விலை வைத்துதான் நாங்கள் சரக்குகளை விற்றோம். இங்கே யாரும் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை. அரசு, பின்பற்றவும் விடவில்லை’’ என்கிறார்கள் ஆதங்கமாய்.

 

 

tasmac



இது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனை இரவு 10 மணியளவில் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "மாவட்ட அளவில் எவ்வளவு ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆனது என்ற விவரம் இன்னும் முழுமையாக எனக்கு வரவில்லை. தேவைப்படும் அளவுக்கு சரக்குகளை விற்பனை செய்யலாம். கட்டுப்பாடுகள் என்று ஏதுமில்லை'' என்று முடித்துக்கொண்டார். எடப்பாடி அரசின் டாஸ்மாக்கே, நிர்வாக விதிகளை மதிக்காமல் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.

 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.