Skip to main content

எந்த கட்சினாலும் தப்பு தப்புதான்!!!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

special

 

 

பொதுவாகவே புத்தாண்டிலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நேர்மறை சிந்தனையில் பலரும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் 2020 புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத கரோனா தொற்று உலகையே ஒரு புரட்டு புரட்டிப்போட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள் முழுமையாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஒரு சில வெளிநாட்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் 90 சதவீத வெற்றியை பெற்றிருக்கின்றன என்றதும் அதன் மூலம் பொருளாதாரம் எப்படி மாறும், எந்த வளர்ந்த வல்லரசு நாடுகளுக்கு தடுப்பு மருந்து முதலில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துவிட்டன. 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வெளியாகும் பட்டியலில் தற்போதுதான் எண்கள் குறைவதை பார்க்க முடிகிறது. அதனால் கரோனாவால் பாதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்க வேண்டாம். கரோனா டெஸ்ட் எடுப்பது முன்பைவிட குறைந்துவிட்டது. லாக்டவுன் முன்பைப் போல கண்டிப்பாக இல்லாமல் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத் தேவைகளையும் கருதி அரசாங்கம் சில தேவையானவற்றுக்கும் தேவையற்றவைக்கும் அனுமதி வழங்கியுள்ளது. 

 

இந்த நிலையில், அடுத்த வருட தமிழக தேர்தலுக்காக தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் தற்போது தங்களின் அரசியலை தொடங்கிவிட்டன, கரோனாவை மறந்து. ஏற்கனவே பீகாரில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்கள் எதிலும் கரோனா தொற்று விழிப்புணர்வுகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அந்த அரசியல்வாதிகள் செயல்பட்டார்களா என்பதை பிரச்சாரக் கூட்டங்களை டிவிக்களில், செய்தித்தாள்களில் பார்க்கும்போது தெரிந்திருக்கும். என்னதான் இருந்தாலும் முன்பே கரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய சூழலில் ஒரு வாரம் காத்திருந்து, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகானை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துவிட்டுதான் இந்தியா முழுவதும் லாக்டவுன் விட்டார் மோடி என்ற விமர்சனம் இருக்கிறது. தற்போது தமிழகத்திற்கே வருவோம்...

 

மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் பாஜக, இதுவரை தாமரை மலர்ந்திடாத மாநிலங்களில் இப்போது எதையாவது செய்து மலர வைத்தால்(தான்) உண்டு என்று என்ன அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மேற்கு வங்கத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு தேர்தலை கண்கொத்தி பாம்பாக டார்கெட் செய்து வைத்திருக்கிறது. கடந்த ஒன்று இரண்டு வரிகளில் கரோனாவை குறிப்பிடாமல் அரசியல், தேர்தலையே குறிப்பிடும்போது நமக்கே கரோனா போய்விட்டதோ என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. முழுக்க முழுக்க அரசியலிலேயே ஊறி இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது பெரிதா என்ன? 

 

தமிழகத்தில் அண்மையில் நடைபெறும் அரசியல் கூட்டங்களும், யாத்திரைகளும், பேரணிகளுமே அதற்கு சாட்சி. ஆளும் அதிமுக அரசு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கரோனா கால கட்டத்தில்தான் அதிகமாக மேடை போட்டு கூட்டம் நடத்துகிறது. குறிப்பாக முதல்வர் பல கூட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டு வருகிறார். அவருடன் இருக்கும் அதிகாரிகளுக்கு அரசாங்கமே கரோனா டெஸ்ட் எடுத்து பாதுகாப்பாக வைக்க முயல்கிறது. ஆனால், அதை பார்க்க கட்சி சார்பாக கூடும் தொண்டர்களின் நிலை? கூடிய தொண்டர்களென்றாலும் கூட்டப்பட்ட திடீர் தொண்டர்களென்றாலும் ஏதோ ஒரு தொண்டருக்கு எதிர்பாராத விதமாக கரோனா தொற்று ஒட்டிக்கொண்டால்? இப்படி ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் வேல் யாத்திரை என்று தமிழக பாஜக, கூட்டம் கூட்டிக்கொண்டிருக்கிறது.

 

இவ்விரு கட்சிகளின் செயல்பாடுகளையும் குறை கூறி வந்த எதிர்கட்சி திமுக நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கியுள்ளது. திமுக, தொடக்கத்தில் அவர்கள் இருவரையும் கூட்டம் கூடினால் கரோனா பரவும், மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அது அமையும் என்று சொல்லி வந்தநிலையில் தற்போது இவர்களும் கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் கைதும் செய்யப்பட்டுள்ளார். தற்போது, எங்களை மட்டும் கைது செய்துள்ளீர்கள், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று அவர்களை பார்த்து கேட்கிறார் உதயநிதி. ஆனால், மக்கள் கண்ணோட்டத்தில் இவர்கள் மூவர் செய்ததும் தவறே. இன்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பும்தான். இதை எப்போது இவர்கள் புரிந்துகொள்வார்களோ? திருந்துவார்களோ? ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் அலையால் மீண்டும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் அடுத்து இரண்டாம் அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களில் தொடங்கி மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்னும் கட்சிகள் வரை, இரண்டாம் அலைக்கு ஏதுவாக ஏதும் செய்யாமல் இருப்பதே நன்று!

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.