Skip to main content

எந்த கட்சினாலும் தப்பு தப்புதான்!!!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

special

 

 

பொதுவாகவே புத்தாண்டிலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நேர்மறை சிந்தனையில் பலரும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் 2020 புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத கரோனா தொற்று உலகையே ஒரு புரட்டு புரட்டிப்போட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள் முழுமையாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஒரு சில வெளிநாட்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் 90 சதவீத வெற்றியை பெற்றிருக்கின்றன என்றதும் அதன் மூலம் பொருளாதாரம் எப்படி மாறும், எந்த வளர்ந்த வல்லரசு நாடுகளுக்கு தடுப்பு மருந்து முதலில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துவிட்டன. 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வெளியாகும் பட்டியலில் தற்போதுதான் எண்கள் குறைவதை பார்க்க முடிகிறது. அதனால் கரோனாவால் பாதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்க வேண்டாம். கரோனா டெஸ்ட் எடுப்பது முன்பைவிட குறைந்துவிட்டது. லாக்டவுன் முன்பைப் போல கண்டிப்பாக இல்லாமல் பொருளாதாரத்தையும் மக்களின் அன்றாடத் தேவைகளையும் கருதி அரசாங்கம் சில தேவையானவற்றுக்கும் தேவையற்றவைக்கும் அனுமதி வழங்கியுள்ளது. 

 

இந்த நிலையில், அடுத்த வருட தமிழக தேர்தலுக்காக தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் தற்போது தங்களின் அரசியலை தொடங்கிவிட்டன, கரோனாவை மறந்து. ஏற்கனவே பீகாரில் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்கள் எதிலும் கரோனா தொற்று விழிப்புணர்வுகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு அந்த அரசியல்வாதிகள் செயல்பட்டார்களா என்பதை பிரச்சாரக் கூட்டங்களை டிவிக்களில், செய்தித்தாள்களில் பார்க்கும்போது தெரிந்திருக்கும். என்னதான் இருந்தாலும் முன்பே கரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய சூழலில் ஒரு வாரம் காத்திருந்து, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகானை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துவிட்டுதான் இந்தியா முழுவதும் லாக்டவுன் விட்டார் மோடி என்ற விமர்சனம் இருக்கிறது. தற்போது தமிழகத்திற்கே வருவோம்...

 

மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் பாஜக, இதுவரை தாமரை மலர்ந்திடாத மாநிலங்களில் இப்போது எதையாவது செய்து மலர வைத்தால்(தான்) உண்டு என்று என்ன அரசியல் விளையாட்டுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மேற்கு வங்கத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு தேர்தலை கண்கொத்தி பாம்பாக டார்கெட் செய்து வைத்திருக்கிறது. கடந்த ஒன்று இரண்டு வரிகளில் கரோனாவை குறிப்பிடாமல் அரசியல், தேர்தலையே குறிப்பிடும்போது நமக்கே கரோனா போய்விட்டதோ என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. முழுக்க முழுக்க அரசியலிலேயே ஊறி இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது பெரிதா என்ன? 

 

தமிழகத்தில் அண்மையில் நடைபெறும் அரசியல் கூட்டங்களும், யாத்திரைகளும், பேரணிகளுமே அதற்கு சாட்சி. ஆளும் அதிமுக அரசு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கரோனா கால கட்டத்தில்தான் அதிகமாக மேடை போட்டு கூட்டம் நடத்துகிறது. குறிப்பாக முதல்வர் பல கூட்டங்களில் நேரடியாகக் கலந்துகொண்டு வருகிறார். அவருடன் இருக்கும் அதிகாரிகளுக்கு அரசாங்கமே கரோனா டெஸ்ட் எடுத்து பாதுகாப்பாக வைக்க முயல்கிறது. ஆனால், அதை பார்க்க கட்சி சார்பாக கூடும் தொண்டர்களின் நிலை? கூடிய தொண்டர்களென்றாலும் கூட்டப்பட்ட திடீர் தொண்டர்களென்றாலும் ஏதோ ஒரு தொண்டருக்கு எதிர்பாராத விதமாக கரோனா தொற்று ஒட்டிக்கொண்டால்? இப்படி ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் வேல் யாத்திரை என்று தமிழக பாஜக, கூட்டம் கூட்டிக்கொண்டிருக்கிறது.

 

இவ்விரு கட்சிகளின் செயல்பாடுகளையும் குறை கூறி வந்த எதிர்கட்சி திமுக நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கியுள்ளது. திமுக, தொடக்கத்தில் அவர்கள் இருவரையும் கூட்டம் கூடினால் கரோனா பரவும், மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அது அமையும் என்று சொல்லி வந்தநிலையில் தற்போது இவர்களும் கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் கைதும் செய்யப்பட்டுள்ளார். தற்போது, எங்களை மட்டும் கைது செய்துள்ளீர்கள், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று அவர்களை பார்த்து கேட்கிறார் உதயநிதி. ஆனால், மக்கள் கண்ணோட்டத்தில் இவர்கள் மூவர் செய்ததும் தவறே. இன்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பும்தான். இதை எப்போது இவர்கள் புரிந்துகொள்வார்களோ? திருந்துவார்களோ? ஐரோப்பா கண்டத்தில் இரண்டாம் அலையால் மீண்டும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் அடுத்து இரண்டாம் அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களில் தொடங்கி மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என்னும் கட்சிகள் வரை, இரண்டாம் அலைக்கு ஏதுவாக ஏதும் செய்யாமல் இருப்பதே நன்று!

 

 

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.