Skip to main content

"பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்ததனால் அவதி; திமுககாரர்கள் அமைதியாக இருந்தாலே சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கும்..." - டிடிவி தினகரன்

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

வலஸ

 

தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் தினமும் ஏதாவது பரபரப்பான செய்திகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி தினகரனின் பதில் வருமாறு, "தமிழகத்தில் சிலர் சட்டம் ஒழுங்கை கெடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அவர் எதற்காக இந்த மாதிரியெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் யார் சட்டம் ஒழுங்கை கெடுக்கிறார்கள் என்பதை இவர் முதலில் சொல்ல வேண்டும். 

 

இவர்தான் காலையில் எழுந்தால் தமிழகத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்சனை செய்வார்கள் என்று தெரியவில்லை என்று கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆகவே இவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை முதலில் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் அமைதியாக இருந்தாலே தமிழகத்தில் எவ்வித சேதமும் குற்றமும் நடக்காது. இதனால் திமுக மாறினாலே தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. அதையும் தாண்டி பல பொய்யான வாக்குறுதிகளைத் தமிழக மக்களுக்கு திமுக அரசு தொடர்ந்து வழங்கியது. இதன் காரணமாகத் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்தது. எடப்பாடி ஆட்சியின்போது நிதிநிலை என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்தும் திமுக தேவையில்லாத பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியது. 

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்றும் கூறி இன்றைக்கு ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். இதுவரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று புரியாமல் தற்போது முழித்துக்கொண்டு உள்ளார்கள். எனவே செய்த தவறுக்கு தற்போது அனுபவித்து வருகிறார்கள். முதல்வர் எதை சதி என்று சொல்கிறார் என்று தெரிவிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று கூறும் அவர் எல்லா சதிகளையும் முறியடிக்க வேண்டியதுதானே, ஏன் இவ்வளவு தயங்கித் தயங்கிப் பேச வேண்டும். திருவிழாவில் தொலைந்த நபர்களைப் போல் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டு இருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதையும் தாண்டி தமிழகத்தில் போதைப்பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள்,இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை முளையிலேயே தடுக்க வேண்டும்.

 

போதைப்பொருட்கள் யார் எங்கு வேண்டுமானாலும் எளிதில் பெறலாம் என்ற நிலை தமிழகத்தில் முன் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தற்போது போதைப்பொருட்களை யார் வேண்டுமானாலும் எளிதில் பெறலாம் என்ற நிலை நிலவி வருகிறது. இது யாருக்கும் நல்லது கிடையாது. தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இது இருக்கிறது. இதை எப்படித் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் தேவையில்லாத குற்றச்சாட்டுக்களைத் தமிழக அரசு முன்வைத்து வருகிறது. இது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனம் செலுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.