Skip to main content

எம்.ஜி.ஆரின் முடிவும், ஜெயலலிதாவின் துவக்கமும்: 1984 அரசியல்..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #6

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

Tamil Nadu Election History part 6

 

2016ஆம் ஆண்டு நடந்த தமிழகத்தின் 15வது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வர் வேட்பாளருமான ஜெயலலிதா சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டு மே இறுதியில் பதவியேற்ற ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அது தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்குள் அதிமுக, ஒ.பி.எஸ். மற்றும் சசிகலா என இரண்டாக பிளவுபட்டிருந்தது. இருவரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரினர். ஆனால், இருவருக்குமே இரட்டை இலை கிடையாது என சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். அதன்பிறகு, அதிமுகவிற்கு மீண்டும் இந்த சின்னம் கொடுக்கப்பட்டாலும், இதே கதை அதிமுகவிற்கு 1989லும் நடந்திருக்கிறது என அப்போது பேச்சுகள் எழுந்தன.   

 

1984ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர்., 1987ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின் முதல்வராக ஜானகி சிறிதுகாலம் செயலாற்றினார். அதன்பின் 1989ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டாக உடைந்து ஜெ அணி, ஜா அணி என தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில்தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஏன் அதிமுக இரண்டாகப் பிரிந்தது..?

 

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டே திண்டுக்கல் மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர்., எப்போது தமிழகம் வருவார்? எப்போது பதவியேற்பார் எனும் கேள்விகள் தமிழகத்தின் அனைத்து பக்கங்களிலும் எதிரொலித்துகொண்டிருந்தன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளதா என அரசியலர்களும், சட்ட நிபுணர்களும் பெரும் விவாதத்தை மேற்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர் அமைச்சரவையின் மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன், அன்றைய தமிழக தலைமைச் செயலருடன் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார்.

 

எப்படியும் எம்.ஜி.ஆர். பதவியேற்பு பற்றிய நற்செய்தி வருமென அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், அதிமுகவிற்கு வாக்களித்த வாக்களர்களும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனாலும், கட்சியினுள் ஜெயலலிதாவின் வளர்ச்சியால் ஏற்பட்டிருந்த உட்கட்சி பூசல், தேர்தலுக்கு முன்பாக ஜெயலலிதா வகித்துவந்த கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிப்பு, ஆகியவை மக்கள் மத்தியில் ஆட்சியமைப்பு குறித்த லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமின்றி அப்போதைய ஆளுநர் குரானா, “தேர்தல் முடிவுகள் வந்ததும் தற்போதைக்கு தற்காலிகமாக ஒருவரை பதவியில் அமர வையுங்கள், எம்.ஜி.ஆர். வந்ததும் மற்றவையைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். இவையெல்லாம் மக்களை பெரிய சிந்தனைக்குள் ஆழ்த்தியது. கட்சித்தலைமை பற்றி சரியான தகவலின்றி அதிமுகவும், ஆட்சித் தலைமையின்றி தமிழக மக்களும் குழம்பிக்கொண்டிருந்தனர்.

 

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்து 1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றார். அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் வாழ்வாதார உரிமை போராட்டம் இலங்கையில் மீண்டும் வலுத்துக்கொண்டிருந்தது. அதனால், 1985ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கலைஞர், தி.க. பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி, காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த பழ.நெடுமாறன் ஆகியோர் கூடி, `டெசோ’ எனும் `தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை' உருவாக்கினர். இதன் தலைவராக திமுக தலைவர் கலைஞர் இருந்தார். இந்த அமைப்பின் குறிக்கோளாக தமிழீழம்தான் தீர்வு என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது, தமிழீழப் போராளிகளுக்கு உதவுவது, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்கச் செய்வது என வகுக்கப்பட்டது.

 

டெசோ அமைப்பை துவங்கி பல போராட்டங்களை அவ்வமைப்பு அறிவித்து, அதன்படி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டுக்கொண்டிருந்தனர். பத்திரிகைகளில் தொடர்ந்து டெசோ அமைப்பு பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதேநேரத்தில் பதவிகளிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர்களின் போராட்டத்திற்காக அதிமுக அரசு பல உதவிகளை செய்தது என மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அவர்களது ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் அமைப்பாகிய டெசோ  ஒன்றுகூடி போராடி மக்கள் மனதையும் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தது. இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இதனால், கொள்கை பரப்புச் செயலாளராக பதவியேற்ற ஜெயலலிதா எதிர்முனையில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்து, நடத்தினார். இப்படி அதிமுகவும் திமுகவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்திவந்தனர். ஆனால், சர்வதேச அரசியல் காரணங்களால் இன்றளவும் ஈழத்தமிழர் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது.

 

1970ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை 1986ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதிலும் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. ஆளும்கட்சி, மத்திய அரசுடனான கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் வீசிய அனுதாப அலையென அதிமுகவிற்கு சாதகமாக களம் இருக்குமென எதிர்பார்த்திருந்த நேரத்தில், தேர்தல் முடிவுகள் அதிமுகவை அசைத்துப் பார்த்தது. 1971 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவிற்கு பெரும் வெற்றியை இந்த உள்ளாட்சித் தேர்தல் கொடுத்தது. இந்த தோல்விக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதிமுகவின் உட்கட்சி பூசலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர். வராததுமே முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது. வெகுகாலத்திற்கு பிறகு திமுகவிற்கு கிடைத்த வெற்றியில் திமுகவினர் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

 

ஆளும் கட்சியினை வீழ்த்திய திமுகவினர், சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், திமுகவினரை கலங்கடிக்க செய்தது சட்டமேலவை கலைப்பு அறிவிப்பு. உள்ளாட்சி முடிவுகள் வெளியாகிய குறுகிய காலத்திலேயே மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் திமுக மேலவை தேர்தலில் இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. உள்ளாட்சி, மேலவை என மீண்டும் திமுகவிற்கு ஏறுமுகமாக இருந்தது. இந்தநிலையில்தான் மேலவை கலைப்பை அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

 

அதற்குள்ளாக 20% இடஒதுக்கீட்டை கேட்டு வன்னியர் சங்கத் தலைவர் ராமதாஸ் தலைமையில், வட மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திடீரென சாலையில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. நிலைமை கைமீறிப் போவதாக உணர்ந்த அதிமுக அரசு, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இப்படி பெரும் போராட்டக்களமாக மாறியிருந்த அதிமுக ஆட்சிக் காலம், அதன் அந்திம காலத்திற்கு வந்திருந்தது. அதிமுகவின் பெரும் பிம்பம் எம்.ஜி.ஆர், 24.12.1987 அன்று அதிகாலை மறைந்தார். தமிழகம் முழுக்க அழுகுரல் எதிரொலிக்க, சென்னையை நோக்கி மக்கள் வெள்ளம் படையெடுக்க, ராஜாஜி அரங்கில் துயில்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். மெரினா கடற்கரையில் அவரின் உடல் அடக்கம் செய்ய ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அதில் ஏற முயன்ற ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அதிமுகவினர் தன்னை கீழே தள்ளியதாக தெரிவித்தார்.

 

Tamil Nadu Election History part 6

 

எம்.ஜி.ஆர். உடல் நல்லடகத்திற்குப் பிறகு, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என எதிர்பார்ப்பு எழுந்தபோது, மூத்த அமைச்சர் நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் குரானா. ஜெயலலிதாவின் ஆதரவுடன் முதல்வர் பதவி போட்டிக்கு முன்வந்தார் நெடுஞ்செழியன். அதேபோல், ஆர்.எம்.வீரப்பன் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, முதல்வர் பதவி போட்டிக்கு முன்வந்தார். அதேநேரம், ஜானகி ஆதரவாளர்கள் ஆளுநரை சந்தித்து, ஜானகியை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டும் எனக்கூறி எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்தனர். அதன் மூலம் ஜானகி முதல்வரானார். இருந்தபோதிலும் பதவியேற்று மூன்று வாரத்திற்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அறிவித்தார் ஆளுநர். பிளவுபட்ட அதிமுகவில் ஜானகி பக்கம் 90 எம்.எல்.ஏ.க்கள் நின்றனர். அதனைக் கொண்டு ஜானகியும் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் ஜானகி எம்.ஜி.ஆரின் சிறுபான்மை அரசால், ஆட்சியை நடத்த முடியாது என ஆளுநர் டெல்லிக்குத் தகவல் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து அவரது ஆட்சி கலைக்கப்பட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஜெ அணி எனவும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தலைமையில் ஜா அணி எனவும் இரண்டாக பிளவுப்பட்டு 1989 தேர்தலை சந்தித்தது. 

 

எம்.ஜி.ஆர். ஆட்சியில் கமிஷன்கள்..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #5

 


 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.