Skip to main content

எம்.ஜி.ஆர். ஆட்சியில் கமிஷன்கள்..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #5 

Published on 15/04/2021 | Edited on 19/04/2021

 

Tamil Nadu Election History part 5


‘கருப்பர் கூட்டம்’ எனும் யூ-ட்யூப் சேனல் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகரை அவமதித்ததாக கூறி தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் அது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த வேல் யாத்திரை 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதேவேளையில் திமுக சார்பில் அக்கட்சி தொண்டர்கள் சமூகவலைதளங்களில் ‘திமுக தலைவரும் காணாமல்போன திருச்செந்தூர் முருகர் கோவிலின் வேலுக்காக வேல் யாத்திரை நடத்தியவர்தான்’ என பிரச்சாரத்தை தொடங்கினர். உண்மையில் அவர் வேல் காணவில்லை என்றுதான் யாத்திரை நடத்தினாரா? எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடத்திய அந்த யாத்திரை எதற்கு?

 

இந்திராவுடன் இணைந்து 1977 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து, அரியணை ஏறியிருந்த எம்.ஜி.ஆரின் ஆட்சியை, 1980ஆம் ஆண்டு கலைத்தார் இந்திரா. அதனைத் தொடர்ந்து, தன் ஆட்சியைக் கலைத்த இந்திராவை ஓரம் கட்டிவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் மற்ற ஏனைய கட்சிகளையும் தனது அணியில் இணைத்து 1980 தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர். தேர்தலில் வென்ற எம்.ஜி.ஆர்.க்கு அந்த ஆட்சிக்காலம் பல இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது. வெற்றிபெற்ற சில காலத்திற்குள் எரிசாராய ஊழல் குறித்து ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு முறைகேடாக எரிசாராயம் கொண்டு செல்லப்பட்டது. இதில் தமிழக அரசு பெரும் முறைகேடுகளையும் ஊழலையும் செய்துள்ளது என எதிர்க்கட்சியான திமுக விமர்சனம் செய்ய துவங்கியது.

 

Tamil Nadu Election History part 5

 

செய்தித்தாள்களும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்துகொண்டிருந்த எரிசாராய ஊழலைக் கேள்விகளால் எரித்துக்கொண்டிருந்தன. பல தரப்புகளிலிருந்தும் ஊழல் தொடர்பான புகார் தீ பரவிக்கொண்டிருக்க அதனை அணைக்க எம்.ஜி.ஆர், ஓய்வுபெற்ற நீதிபதி கைலாசம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார். அதற்கான ஆணையையும் வெளியிட்டார் எம்.ஜி.ஆர். ஒரு பெரும் ஊழலை சிறிய ஆணையத்தின் மூலம் முடிக்கப் பார்க்கிறது அரசு என திமுகவினர் அந்த அரசாணையைக் கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதேவேளையில், இரண்டு மாநிலம் சம்மந்தப்பட்ட ஊழல் என்பதால் மத்திய அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக, தனது கூட்டணி கட்சியும் மத்திய ஆளும் கட்சியுமான காங்கிரஸுக்கு கடிதம் எழுதியது. அதனை ஏற்ற இந்திரா அரசு, ஒரிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.ரே தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது.

 

எரிசாரய ஊழல் புகார்கள் அடங்குவதற்குள் புதிய பிரச்சனை ஒன்று எழுந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை, நவம்பர் மாதம் 26ஆம் தேதி தனது அறையில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என எம்.ஜி.ஆரின் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது, நீதி விசாரணை தேவை என திமுக அழுத்தம் தந்தது. விளைவு, நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.. அந்த விசாரணை கமிஷனும் முறையாக விசாரித்து அதன் அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது. அதனை அரசு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் அழுத்தம் தந்தன. ஆனாலும், எம்.ஜி.ஆர். அதனை வெளியிடவில்லை. ஆனால், கலைஞர் அவ்வறிக்கையின் நகல்களை வெளியிட்டு, அது கொலைதான் என தெரிவித்தார். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் பொதுவெளியில் வெளியிட்டதும் அதிர்ச்சியில் உறைந்தார் எம்.ஜி.ஆர். அதனைத் தொடர்ந்து கலைஞருக்கு நெருக்கமான, அதேவேளையில் அறிக்கையை அவரிடத்தில் கொடுக்க உதவியவர்களை அரசு கைது செய்தது.

 

Tamil Nadu Election History part 5

 

"கொலையாளிகள் மீது 1982 பிப். 15க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பிப். 15 அன்றே மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்வேன்" என கலைஞர் அறிவித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்காததனால், பிப். 15ம் தேதி நீதி கேட்டு நெடும்பயணம் என மதுரையில் துவங்கி திருச்செந்தூர் வரையிலான 200 கி.மீ தூரத்திற்கு நடந்தார். அதே நேரம், திருச்செந்தூர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் கொடுத்த வேலும் காணவில்லை என்பதால், அதனைக் கேட்டும் நடந்தார் கலைஞர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

 

இப்படி எம்.ஜி.ஆர். மீது, அவரது ஆட்சி மீது, அரசு மீது விமர்சனங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து வெடித்துகொண்டுவந்த நேரம், அதிமுகவில் ஒருவரின் பேச்சைக் கேட்க கூட்டம் மானாவரியாக கூடிவந்தது; அதன் முன்பாக எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடத்திய சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழுவிலும் அவர் இடம்பிடித்திருந்தார்; அவரது வளர்ச்சியால் கட்சிக்குள்ளேயே சில சலசலப்புகள் எழுந்தபோதிலும் கொள்கை பரப்புச் செயலாளராக கட்சியின் முக்கிய முகமாக மாறியிருந்தார்; அவர்தான் ஜெயலலிதா.

 

Tamil Nadu Election History part 5

 

ஜெயலலிதா அதிமுகவை தனது பேச்சால் வலிமையடைய வைத்துக்கொண்டிருக்க, ஈழத்தமிழர்களுக்காக எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார் என பரவலாக பேச்சுகள் எழுந்தன. இதன்மூலம் மக்களின் அனுதாபங்களை அதிமுக ஒருபுறம் சுவீகரித்துக்கொண்டிருந்தது. ஆட்சிக் காலமும் முடிவடையும் தருவாயை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கத்தில் எம்.ஜி.ஆர்.க்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அதேவேளையில் இந்திரா காந்தி தனது காப்பாளர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பதற்றம் சூழ்கொண்டிருக்க, அவருக்கு அடுத்து இந்திரா காங்கிரஸின் பொதுச்செயலாளர் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து வெற்றிபெற்று பிரதமராக வேண்டும் என்று எண்ணினார். அதனால், 1984ஆம் ஆண்டு தனது அமைச்சரவையைக் கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.

 

கடந்த ஆட்சி காலத்தைவிட இந்த ஆட்சிக் காலத்தில் அதிக விமர்சனத்தையும் இரண்டு பெரும் கமிஷன் புகார்களையும் எதிர்கொண்ட அதிமுக, உட்கட்சி மோதல்களாலும் ஆட்டம் காண துவங்கியிருந்தது. அதனால் இதுதான் சமயம், நாமும் இங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தால், ஜெயலலிதா சேர்க்கும் கூட்டம், ஈழத்தமிழர் பிரச்சனையில் எம்.ஜி.ஆரின் உதவி, எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதி என அனுதாப ஓட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என எண்ணிய அதிமுக அதன் அமைச்சரவையைக் கலைத்தது. 1980 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இந்திரா காங்கிரஸை, 1984 தேர்தலில் தனக்கு இணக்கமாக இணைத்திருந்தது அதிமுக.

 

Tamil Nadu Election History part 5

 

பிரச்சார மேடைகளில் ஒருபுறம் ஜெயலலிதா கூட்டங்களைக் கவர, மறுபுறம் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்களும், இந்திரா மரணமடைந்த வீடியோவும் மக்களையும், மக்கள் கண்ணீரையும் வாக்குகளாக மாற்றிக்கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொண்டே தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டார். வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர் பல போராட்டங்களுக்குப் பிறகே அதிகாரப் பொறுப்பை ஏற்றார். இந்த ஆட்சிக்காலம் முழுவதும் உடல் உபாதைகளுடனேயே பணியாற்றி வந்த எம்.ஜி.ஆர், 1987 டிசம்பர் 24 அன்று உயிரிழந்தார். 

 

அதன்பின்தான் எம்.ஜி.ஆரின் அதிமுக உடைந்து ஜெ அணி, ஜா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜெ அணி, ஜா அணி என்ன செய்தது? எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது கிடைத்த அனுதாபம் ஏன் அவர் மறைந்து பிறகு அதிமுகவிற்கு கிடைக்கவில்லை?

 

தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4
 

 

எம்.ஜி.ஆரின் முடிவும், ஜெயலலிதாவின் துவக்கமும்: 1984 அரசியல்..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #6

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்