Skip to main content

“செவ்வாயில் கால் பதிப்பேன்!” – சாதனைத் தமிழச்சியின் வெற்றிப் பயணம்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

உலகம் முழுவதும் ஜொலிக்கின்ற சாதனையாளர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால்,  அதில் தமிழர்களுக்கோர் தனிஇடம் நிச்சயம் இருக்கும். அத்தகைய சாதனைத் தமிழர்கள் வரிசையில், செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தில் வேகத்தைக் கூட்டிவருகிறார் தென்றல் கமல் எனும் 17 வயது சிறுமி.

 

tamil girl in space travel mission

 

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் தென்றல் கமல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகவே சாதனைகளைப் புரிந்துவருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மிளிரும் இளம் நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார். சிறுவயதில் இருந்தே தென்றல் கமலுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக நாட்டம். பெற்றோரின் ஒத்துழைப்புடன், வானவியல் தொடர்பான பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

2018-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் இயங்கிவரும் ஜீரோ-ஜி எனும் நிறுவனம், நுண் ஈர்ப்புவிசை ஆராய்ச்சி தொடர்பான போட்டி ஒன்றை நடத்தியது. இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர் பேரபோலிக் ஃப்ளைட் எனப்படும் விமானத்தில் கூட்டிச் செல்லப்படுவார். விமானம் அதிக உயரத்துக்கு சென்றபின் அரைவட்ட வடிவில் வளைந்து திரும்பும். அந்தத் தருணத்தில் விமானத்தில் பயணிப்பவர்கள் விண்வெளியில் இருப்பதைப் போல ஈர்ப்பு விசையற்ற நிலையை உணர்வார்கள். ஜீரோ-ஜி நடத்திய இந்தப் போட்டி செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வது தொடர்பான ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இதில் முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்தின் சார்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 20 பேரில் தென்றல் கமல் முக்கியமானவர்.

வானவியல் தொடர்பான இவரது ஆர்வத்தைக் கண்டு ‘விண்வெளி ஆய்வுக்கான மகளிர் சமூகம்’ என்ற அமைப்பின் தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ‘மார்ஸ் ஜெனரேஷன் ஸ்டூடண்ட் ஸ்பேஸ்’ என்ற அமைப்பும் தென்றல் கமலை தூதுவராக அறிவித்து கவுரவப்படுத்தி உள்ளது.

இதுபோக, ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் தென்றல் கமல் சாதனைகள் படைத்து வருகிறார். இதனைப் பாராட்டி PADI (Professional Association of Diving Instructors) எனும் அமைப்பு தென்றல் கமலை கவுரவித்துள்ளது. “ஜீரோ-ஜி மற்றும் ஸ்கூபா டைவிங் ஆகிய இரண்டு மிகக்கடுமையான தளங்களிலும் மிகச்சிறந்து விளங்கும் தென்றல், கூடிய விரைவில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வார்” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரது பெற்றோர். 

 

tamil girl in space travel mission

 

“தற்சமயம், விண்வெளியில் இருக்கும் கிரகங்களின் புவியியல் அம்சங்கள் குறித்த ஆய்வு வேலையில் தீவிரமாக இயங்கிவருகிறேன். உலகப் புகழ்பெற்ற வானியற்பியல் வல்லுனர் டாக்டர்.நிதல் கஸ்ஸம் வழிகாட்டுதலில் இந்த ஆராய்ச்சி தொடர்கிறது. விண்வெளிப் பயணம் தொடர்பான எனது எண்ணங்கள் ஒருநாள் உண்மையாகும் என்று உறுதியாக நம்புகிறேன். செவ்வாய்க் கிரகத்தில் முதன்முதலில் கால்வைத்த இந்தியப் பெண் என்ற பெருமையை, நான் நம் நாட்டிற்குத் தேடித் தருவேன்” என்கிறார் உற்சாகம் பொங்கும் குரலில்.

‘வானமே எல்லை என்பதெல்லாம் பழைய கதை. நான் அதற்கு மேலும் செல்வேன், வெல்வேன்’ என்று உறுதிகாட்டும் தென்றல் கமலை உங்களோடு சேர்த்து நக்கீரனும் வாழ்த்துகிறது.

 

 

Next Story

உலகின் முதல் விண்வெளி ஹோட்டல்! என்னென்ன வசதிகள் இருக்கின்றன..?

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

world's first space hotel for tourists

 

அமெரிக்காவின் 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' நிறுவனம் தயாரிப்பில் உருவான, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் வரும் 2027ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

 

விண்வெளிக்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும், அங்கு கிடைக்கும் அனுபவத்தைப் பகிர வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்குக் கனவாக இருக்கும். இந்நிலையில், விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, ஒரு சில நிறுவனங்கள் விண்வெளிக்கு வருகிறவர்களை உபசரித்துத் தங்க வைப்பதற்கு ஹோட்டல்களை அமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மக்களின் விண்வெளி பயணம் என்பது இனி ஒரு கனவு அல்ல. ஏனெனில், 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' நிறுவனமானது, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் ஒன்றை, வரும் 2027ஆம் ஆண்டில் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் விண்வெளிக்கு மிக விரைவில் சுற்றுலா செல்ல முடியும், இனி வரும் நாட்களில் புத்தாண்டு விடுமுறை நாட்களை விண்வெளிக்குச் சென்று செலவிட முடியும் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

வாயேஜர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஹோட்டலில் 400 விருந்தினர்கள் வரை தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல்,  ஜிம், பார், நூலகம், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையம் ஆகியவையும் இந்த ஹோட்டலில் இடம்பெற உள்ளது. இருப்பினும், ஹோட்டல் கட்டுமான செலவினை இதுவரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

 

இந்த விலை உயர்ந்த ஹோட்டலின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை வட்டமிடும். இந்த விண்வெளி நிலையம் ஒரு பெரிய வட்ட வடிவமாகவும், செயற்கை ஈர்ப்பு சக்தியை உருவாக்கிச் சுழலும் வகையிலும் இருக்கும். இதில் உருவாக்கப்படும் ஈர்ப்பு விசை, சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு ஒத்ததாக அமைக்கப்படும். மேலும் 2025ஆம் ஆண்டில் பூமியின் சுற்றுப்பாதையில் இதற்கான பயண நிலையம் ஒன்றையும் உருவாக்க அந்தநிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் 2027ஆம் ஆண்டு முதல் இந்த விண்வெளி ரிசார்ட் செயல்படக்கூடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' என்கிற கட்டுமான நிறுவனமானது, வாயேஜர் ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளி ஹோட்டலை அமைக்க நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்தது. அதன்படி, அந்நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் விண்வெளி ஹோட்டல் கட்டுமான திட்டங்கள் முதன்முதலில் வெளியிட்டது. இந்நிலையில், அதன் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, வரும் 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் விண்வெளி ஹோட்டலை திறக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்த ஹோட்டல் 2025ஆம் ஆண்டு திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல், உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தாமதம் ஏற்பட்டதால், அதன் தொழில்நுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடை காரணமாகத் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இனி வரும் விடுமுறை நாட்களை விண்வெளியில் கழிக்க ஆர்வமாக இருப்பவர்கள், அங்கு சென்று மூன்று  நாள் தங்குவதற்குத் தேவையான 5 மில்லியன் டாலர்களைச் செலுத்தி, தங்கள் அறையை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்கிறது இந்நிறுவனம். 

 

 

Next Story

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த பெண் பூமி திரும்பினார்...

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் இன்று மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார்.

 

christina koch returned to earth from space after nearly spending a year there

 

 

அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் 6 வீரர்கள் தங்கியிருந்து தொடர்ந்து ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மூன்று பேர் பூமிக்கு திரும்புவர், பின்னர் அதற்கு பதிலாக புதிதாக மூவர் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் இன்று பூமி திரும்பியுள்ளார். கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் அவர் தரை இறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328  நாட்கள் தங்கியிருந்து, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.