Skip to main content

ஆதித் தமிழ்க் கலைக்கு ஆவி கொடுக்கும் பேராசிரியர்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020

 

professor - thoothukudi -  tamil arts

 

20 பேர் கொண்ட சிலா வரிசை இரு கூறாக எதிரும் புதிரும் நின்றுகொண்டு சீரான உடையோடு காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு உடல் நளினங்களோடு தாளம் தப்பாமல் பறையடித்து வளைந்து நெளிந்து ஆடுவதும், 30 பேர்களைக் கொண்ட கலர் ஆடைகளோடு காலில் சலங்கை மணி தெறிக்க, இரண்டு கைகளிலுள்ள பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கொண்ட துணிகளை வீசிக் கொண்டு தாளத்திற்கேற்ப ஒய்யாரமாகச் சுற்றியாடும் லாவகங்களைக் (ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டங்கள் போன்றவைகளை) கண்ணுறும் போதும் மனம் ஆறுதலடைவததோடு ஒரு வகை இதமான ஆனந்தமும் உடலில் ஊடுருவும்.

 

ஆதித்தமிழனின் பண்பாட்டுக் கலைகளான இவைகள் மேடையேறும் போது அந்த மேடையே ஜொலிக்கும். மேடையின் மதிப்பும் கௌரவமும் பன்மடங்கு உயரும். அதுதான் யதார்த்தம். இவைகளை மேடை ஏற்றும் போதுதான் நம் பண்டைத் தமிழரின் இந்தக் கலாச்சாரக் கலைகள் உயிர்தெழும், மரணிக்காமல் ஜீவிக்கும் .இந்தக் கலைகளைப் பலருக்குப் பயிற்றுவிக்கிறார் தூத்துக்குடியில் உள்ள பேராசிரியர் சங்கர்.

 

அண்மைக்காலமாக இந்த ஆயகலைகளும் அதனையே சுவாசமாகக் கொண்டவர்களின் வாழ்க்கையும் மங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிற பேராசிரியர் சங்கர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றுப் பிரிவு பேராசிரியர். கூடவே ஒயிலாட்டம், பறையாட்டம் கட்டைக்காலாட்டம் போன்ற நம் முன்னோர்களின் கலைகளை முடிந்த வரை வளர்க்கிறார், வேர் பரப்பச் செய்கிறார்.

 

Professor

 

ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி வளர்வதைப் போன்றுதான், இந்தக் கலையின் கருவே நம் முன்னோர்களின் உயிர் நாடியான விவசாயத்திலிருந்து பிறக்கிறது. விவசாயத்தின் ஒவ்வொரு பணியிலும் ஒரு இசை மறைந்துள்ளது. ஏர் பிடிக்கும் போது, விதை விதைக்கும் போது, நாற்று நட்டி தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்தல், அறுவடை போன்ற ஒவ்வொரு விவசாயப் பணிகளிலும், வேலையின் சுமை தெரியாமலிருப்பதற்காக நளினமாக உடலசைத்து வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பாட்டாக்கிப் பாடுவார்கள். அதுதான் இயல்பு, வாடிக்கை. அதுவே நாளாவட்டத்தில் பண்படுத்தப்பட்டு மெருகேறி களத்து மேட்டில் கும்மியாட்டமாகி பின் சலங்கை பறையாட்டமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. எனவே விவசாயம்தான் இந்தக் கலைகளைப் பெற்றெடுத்த தாய் என்கிறார் பேராசிரியர்.

 

அதே  போன்று இதன் அங்கமான தெருக்கூத்து, தெரு நாடகம் போன்றவைகளில் பிரச்சாரமும் நடந்ததையடுத்து பறையாட்டம், ஒயிலாட்டங்கள் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அது போன்று இந்தக் கலைகளின் மூலமாக மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கான புரட்சிகளும் அந்தக் கால சர்வாதிகார சமஸ்தானத்தைக் கூட அறுத்தெறிந்திருக்கின்றன. வலுவான பிரச்சாரப் பீரங்கியும் கூட. அது போன்ற தெருக்கூத்துக்களால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் சங்கர், தனது பறையாட்டம் ஒயிலாட்டக் கற்பித்தல் மூலம் பத்தாயிரம் கலைஞர்களை தென் மாவட்டத்தில் உருவாக்கியிருக்கிறார்.

 

ஆடைக்குறைப்போடு வரும் வெளிநாட்டினர் கூட 12 முழச் சுங்கிடிச் சேலையைக் கட்டிக் கொண்டு மாராப்புப் போட்டும், 4 முழவேட்டிச் சட்டையுடன் கூட்டமாகத் தமிழரின் அடையாளமான தை பொங்கலிட்டுக் கொண்டாடி, பறையடித்து மகிழுமளவுக்கு நம் முன்னோர்களின் கலைகள் மதிப்பு வாய்ந்திருக்கிறது. ஆனால் உள்ளூர் விழாக்கள், பொதுக்கூட்டம் திரட்டும் அரசியல்வாதிகள் கூட இதன் மகிமையை அறியாமல் கேரளாவிலிருந்து பெரும் பொருட்செலவில் கெண்டை மேளத்தை வரவழைக்கிறார்கள். இறக்குமதிதான் கௌரவம் என்று நினைக்கிறார்கள்.

 

அதற்குச் சற்றும் சளைத்ததல்ல தமிழனின் கலைகள் என்று வெளிநாட்டினரே சர்டிபிகேட் தரும்போது, இங்கே மட்டும் ஏன் அந்தப் புறக்கணிப்பு. ஒன்றைப் பார்க்கப் பார்க்கத்தான் ஈர்ப்பு கூடும், ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாகும் என்பது அடிப்பைடைத் தத்துவம். ஒவ்வொரு விழாக்களிலும், அரசியல் கூட்டங்களிலும் நம் பாரம்பரிய விவசாயம் ஈன்றெடுத்த இந்தக் கலைகளை மேடையேற்றிப் பாருங்கள், அதன் மதிப்பும் கௌரவமும் தெரியும். மட்டுமல்ல அதனையே நம்பியிருக்கும் கலைஞர்களின் வயிறும் பசியாறும்.

 

Ad

 

இன்னமும் இந்த ஆட்டக் கலைகள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளைத் தூண்டினால் மட்டுமே ஃபீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழும். அதை விடுத்து, நம் முன்னோர்களின் வாழ்விடம் தேடி, பெரும் பொருட்செலவில் அகழாய்வு நடத்துகிற அளவுக்கு நம் ஆதித் தமிழர்களின் இந்த ஆட்டக்கலைகள் மண்ணோடு புதைந்து விடக்கூடாது, என்ற குமுறலும் இதனை நம்பிய கலைஞர்களிடமிருந்து கிளம்புகிறது.

 

 

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.