Skip to main content

படத்தைப் படமாகப் பாருங்கள்... பெயரில் அரசியலைக் கொண்டு வந்தால் இனி ஏ,பி,சி,டி என்றுதான் வைக்க முடியும் - சூர்யா சேவியர் தடாலடி!

Published on 19/11/2021 | Edited on 20/11/2021

 

jl


சூர்யா நடித்து பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை தினந்தோறும் ஏதாவது ஒரு குழுவினர் எழுப்பிவருகிறார்கள். குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில அமைப்புகள் இந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்பதுடன் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளன. இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாகவும், அதில் வரும் பெயர் அரசியல் தொடர்பாகவும் அரசியல் விமர்சகர் சூர்யா சேவியரிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

ஜெய்பீம் படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல முறையில் விமர்சனம் வந்துகொண்டிருக்கும் நிலையில், சிலர் அந்த படத்தில் தங்கள் சமூகத்தை அவமானப்படுத்தியுள்ளனர் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். படத்தில் மற்ற கேரக்டர்கள் உண்மை சம்பவத்தில் உள்ளது போல் இருக்கின்ற நிலையில் குருமூர்த்தி என்ற பெயர் மட்டும் எதற்காக வைக்க வேண்டும், அதில் உள்நோக்கம் இருக்கிறது என்று எதிர்தரப்பினர் கூறி வருகிறார்கள். மேலும் காலண்டர் விவகாரத்தில் வேண்டும் என்றே அவ்வாறு செய்ததாக வருத்தப்படுகிறார்கள், எங்கள் சமூக மக்களை கோபக்காரர்களாக காட்ட வேண்டும் என்று படம் எடுத்தவர்கள் முடிவு செய்து இப்படி காட்சிகளை அமைத்துள்ளனர் என்று கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

ஜெய்பீம் படம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்துவதற்காக, வேறொரு சமூகத்தை தாழ்த்துவதாக நான் பார்க்கவில்லை. இந்த படத்தில் ஆதிக்கத்திற்கும், அடக்கு முறைக்கும் எதிரான ஒரு கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள். பாமகவினர் அவர்களின் சமூகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தான் செய்த தவறுகளை மறைக்க பார்க்கிறார்கள். அதற்கான எல்லா முயற்சிகளையும் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்கள் கட்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று தானே பெயர் வைத்துள்ளார்கள், வன்னியர் கட்சி என்று பெயர் வைக்கவில்லையே? அவர்கள் தன்னை கார்ல் மார்க்ஸ் என்று பேசி வரும் சூழலில் இந்த மாதிரியான எதிர் கருத்துக்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன, அப்படி என்ன இதில் தவறாக சொல்லிவிட்டார்கள். அனைத்து கட்சிகளிலும் இவர்கள் குறிப்பிடும் சமூகத்தை சேர்ந்தவர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமே அந்த சமூகத்தின் அடையாளம் என்று கூறி அனைவரும் அதற்கு ஆதரவு தருவதை போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார்கள். 

 

பெயர் வைப்பதை பிரச்சனையாக்கி வருகிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். ஏன் குரூமூர்த்தி என்று பெயர் வைத்தீர்கள் என்றால், பிறகு என்ன பெயர் வைத்தால் இவர்கள் திருப்திப்படுவார்கள். கதாநாயகன், கதாநாயகிக்கு இனி ஏ,பி,சி,டி என்று தான் பெயர் வைக்க வேண்டும். பாட்ஷா படத்தில் வில்லன் பெயர் மார்க் ஆண்டனி என்று பெயர் வைத்திருப்பார்கள். அதற்காக ஏன் எங்கள் சமுதாய பெயரை வைத்தீர்கள் என்று கேட்க முடியுமா? என்ன பேசுகிறோம் என்று ஓரளவுக்காவது தெரிந்து பேச வேண்டும். ருத்ரதாண்டவம் படம் பாருங்கள், அதில்  அம்பேத்கார் படம் போட்ட சட்டை அணிந்த ஒரு நபர் கஞ்சா விற்பதை போன்று காட்சிகளை அமைத்துள்ளார்கள். திருமாவளவனை குறியீடாக வைத்துள்ளார்கள். இதை அந்த இயக்குநரே பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த மாதிரியான காட்சிகளை அவர்கள் படத்தில் காட்டிவிட்டு பெயர் வைப்பதை குற்றம் சொல்லி வருகிறார்கள். சேகுவேரா படத்தை போட்டு ஒருவர் போதை மருந்து கடத்துவதாக காட்டியுள்ளார். சேகுவேரா என்றைக்கு போதை மருந்து கடத்தினார் என்று தெரியவில்லை. இந்த காட்சிகளை படத்தில் அவர் வைக்கிறார். அதனை மக்கள் ஏற்றுக்கொள்கிறாரா அல்லது நிராகரிக்கின்றார்களா என்பதுதான் முக்கியம். இங்கே ஜெய்பீம் படத்தை வெகுமக்கள் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கிறார்கள், நாடு கடந்து அதனை பாராட்டி வருகிறார்கள். புதிய புதிய சாதனைகளை அந்த திரைப்படம் படைத்து வருகிறது. அதனை பொறுக்க முடியாமல் சிலர் அதன் மீது புழுதி அள்ளி வீசப்பார்க்கிறார்கள்.  

 

எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள், எனவே சிலரை தனியாக அடையாளப்படுத்தி பேசுவது என்பது மிகவும் தவறான ஒரு செயலாகும். சாதியை அவமானப்படுத்திவிட்டீர்கள், மதத்தை அவமானப்படுத்திவிட்டீர்கள்  என்று இதை போன்று தொடர்ந்து கூறி வந்தால் இனி வரும் காலத்தில் சினிமாவே எடுக்க முடியாமல் போய்விடும். பார்வதிக்கு அப்போது உதவி செய்து இந்த வழக்கை அடுத்தகட்டம் எடுத்து செல்ல உதவியதே கோவிந்தன் என்ற அதே சமூகத்தை சேர்ந்தவர் தான். அவரை மிரட்டுகிறார்கள், எப்போது மிரட்டுகிறார்கள், நேற்று முன்தினம் வழக்கறிஞர்கள் அவர் வீட்டுக்கு சென்று நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இதை செய்தார்கள், நாம் இந்த வழக்கில் பார்வதிக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறோம்,எனவே நம் சமூகத்தை குறைத்து காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதனை அவர் நிராகரித்துள்ளார். இவ்வாறு படத்தை படமாக பார்க்காமல் அதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தோம் என்றால் எந்த கலை படைப்பும் வெளியே வர முடியாது. எனவே இந்த படம் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம். சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் நிறைய படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இத்தோடு இதனை கடந்துவிட வேண்டும். 

 

 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.