Skip to main content

ஊனம் என்பது தன்னம்பிக்கையாளர்களுக்கு இல்லை! -சாதிக்கும் கவிஞர் சுந்தரமூர்த்தி!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

 

p


நேற்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை உலகமே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. சென்னையிலும் மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கைப் பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் என பரவலாக நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்த நிலையில், ’மாற்றுத் திறனாளி’ என்ற சொல்லைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இலக்கியத்தில் தன் சிந்தனைத் திறத்தாலும் உழைப்பாலும் சாதித்து வருகிறார் சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இளைஞரான கவிஞர் பொ.சுந்தரமூர்த்தி. 


உற்சாகம் மிகுந்த இளைஞரான இவர், ’நண்பர்கள் பதிப்பகம்’ என்ற பதிப்பு நிறுவனத்தை,  தன்னைப் போன்ற சக நண்பர்களோடு  சேர்ந்து நடத்திவருகிறார். இதன் மூலம் தமிழ்ப் படைப்பாளர்கள் பலரின் இலக்கியப் படைப்புகளை நூலாக்கி, அவர்களுக்கும் வெளிச்சம் தரும் முயற்சியில், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். 

 

p


இயற்கை தன்னை மாற்றுத் திறனாளியாக்கி வஞ்சித்த போதும், இயற்கையையும் இலக்கியத்தையும் வாழ்க்கையையும் வஞ்சிக்காது, அவற்றைப் போற்றி வாழ்கிற தன்னம்பிக்கையாளர் இவர். போலி இலக்கியம் பெருகிவரும் இன்றைய சூழலில், இவர் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது.  முகநூல் வெளியில் தொடர்ந்து தன் விழிபுணர்வுக் கவிதைகளை படைத்துவரும், சுந்தரமூர்த்தி நிறைய நிறைய விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். இவருக்கென்று தனி வாசகர் வட்டமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


”என் குறை தெரியாமல் என்னை உயிரில் வைத்துக் காத்துவரும் பெற்றோர்களே என் தெய்வம். ஊனம் என்பது என்னைப் போன்ற தன்னம்பிக்கையாளர்களை எதுவும் செய்யாது. 


கவிஞர் கனகா பாலனைப் போன்ற இலக்கிய உறவுகள் என்னை உற்சாகமாக இயங்க வைக்கிறார்கள். இயங்கிக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார் சுந்தரமூர்த்தி.


இவரது அண்மைக்காலக் கவிதைத் தொகுப்பான ’இதோ எழுதுகிறேன்’ என்ற நூல்,  இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த நூலில் மின்னும் ஒரு சில ஹைகூ கவிதைகள் இங்கே...

*
கருக்கொண்டதெல்லாம்
கவிதையென்றால்
அம்மாதான் என் முதல் கவிதை.
*
மூன்றாகப் பிரிந்தும்
ஒற்றுமையாகப் பறக்கிறது
தேசியக் கொடி!
*
நுரைதள்ளியும்
சாகவே இல்லை
அலைகளின் முயற்சி!
*
புலி வேசம்
போட்டவனின் முகத்தில்
வறுமைக் கோடு
*
பள்ளிக்குச் செல்லும் அவசரத்திலும்
தலைசீவிப் பொட்டுவைக்கிறாள்
பொம்மைக்கு சிறுமி
*
மாலை நேர மழை
குடையிருந்தும் நனைகிறது
பூக்காரியின் கண்கள்.
*
ஜாதி மல்லி
தள்ளி நிற்கிறது
பட்டாம்பூச்சி
*
ஆடம்பரத் திருமணம்
நிரம்பி வழிகிறது
குப்பையில் உணவு
*
ஆசையாய்த் திருடிய
அழகுப் பெட்டியில்
புத்தர் சிலை.
*
உழைத்துக் களைத்துப் போனாரோ?
வண்ண ரூபாய்க் காகிதத்தில்
கருப்பாய் காந்தி
*
என் தாய்ப் பாசம் கூட
தோற்றுத்தான் போகிறது அம்மா
உன் பிள்ளைப் பாசத்திடம்
*
-சுந்தரமூர்த்தி, மேலும் மேலும் சாதனை படைப்பார் என்ற நம்பிக்கையை அவரது சிந்தனைகளே உணர்த்துகின்றன. இவரைப் போன்ற நம்பிக்கையாளர்களால்தான் இந்த பூமி, தன் அச்சில் அச்சுப் பிசகாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. 

தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி எண் - 9962514140

 

 

Next Story

“கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Poet statue for Tamiloil says CM M.K.Stalin

 

கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும்,பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

 

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

 

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதனையடுத்து கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

Next Story

நான்காயிரம் வண்ண விளக்குகள்... ஒளிர்ந்த பாரதியார்!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

 Bharatiyar lit by lights!

 

மீசைக் கவிஞன் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் நான்காயிரம் வண்ண விளக்குகள் கொண்டு அமைக்கப்பட்ட பாரதியாரின் முழு உருவம் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி மைதானத்தில் 150 அடி உயரம், 50 அடி அகலம் என மொத்தம் 7,500 சதுர அடியில் கையில் தடியுடன் பாரதியார் நிற்பது போன்ற கம்பீரமான உருவம் அமைக்கப்பட்டது.

 

இதற்கு நான்காயிரம் எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 50 மாணவர்கள் பாரதி வேடமணிந்து அவரின் பொன்னான கவிதை வரிகளை எடுத்துரைத்தனர். இதுதவிர 25 மாணவிகள் பாரதியாரின் உருவப்படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து கொண்டு பாரதியின் பாடல்களைப் பாடினர். இந்த நிகழ்ச்சியில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வாழ்க்கை குறிப்புகள் தொடர்பான புகைப்படங்கள், பெண் விடுதலை-சமத்துவம் பற்றிய அவரின் புரட்சிகர கவிதைகள் அடங்கிய பதாகைகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்  எவர்வின்  பள்ளியின்  சி.இ.ஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

பாரதியார் நினைவு நாள் இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.