Skip to main content

சுபஸ்ரீ மரணம்; நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக ஆவணம்! 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Subhasree case; Nakeeran received a special document!

 

தொடர் முயற்சிக்குப் பிறகு சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘நக்கீரனுக்கு’ பிரத்யேகமாகக் கிடைத்திருக்கின்றது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு செல்லுமுன், ‘ஈஷாவின் சைலன்ஸ் ஹவர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 11-12-2022 அன்று சென்ற சுபஸ்ரீ, 18-12-2022 அன்று ஈஷாவை விட்டு வெளியேறி பின்னங்கால் பிடறித்தெறிக்க ஓடினார். இதனை சி.சி.டி.வி. காட்சிகளும் உறுதிப்படுத்தின. ஆனால், அன்று மாயமான சுபஸ்ரீ சரியாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான 01-01-2023 அன்று மாயமான அதே செம்மேட்டுப் பகுதி காந்தி காலனியில் மூன்று நபர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பின் கிணற்றில் குப்புறக் கிடந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

 

01-01-2023 ஆலாந்துறை காவல் நிலையத்தாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி சுபஸ்ரீயின் உடலை அன்றே பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தியது கோவை அரசு மருத்துவமனை. அவசர அவசரமாகப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? யாருக்காக இதனைச் செய்கிறீர்கள்? என மாதர் சங்கமும், உறவினர்களும் கேள்வியெழுப்பிய நிலையில் அதனை பொருட்படுத்தாது பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் வலுக்கட்டாயமாக ஒப்படைத்தது ஆலாந்துறை காவல்துறை. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சுபஸ்ரீயின் கணவருக்குக் கூட இறுதிவரை வழங்காத ஆலாந்துறை காவல்துறை, யாருக்காகவோ தன்னுடைய கட்டுப்பாட்டில் மறைத்து வைத்து அழகு பார்த்தது. இத்தகைய நிலையில், சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘நக்கீரனுக்கு’ பிரத்யேகமாக கிடைத்த நிலையில் அதனை அப்படியே பதிவு செய்கின்றோம்.

 

Subhasree case; Nakeeran received a special document!

 

தடயவியல் மருத்துவத்துறை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையால் வழங்கப்பட்ட பி.எம். எண் 12/2023, தேதி 01.01.2023 கொண்ட பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையோ, க்ரைம் எண் 191/2022-ன் படி ஆலாந்துறை காவல் நிலையத்தாரால் 01.01.2023 அன்று பிற்பகல் 03.55 மணிக்கு பெறப்பட்ட கடிதத்தின் மூலம் சிந்து என்கின்ற பெண் எஸ்.எஸ்.ஐ. உடனிருக்க, 34 வயதுடைய சுபஸ்ரீ என்ற பெண்ணின் உடல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஜெயசிங், பால வெங்கட பெருமாள் ஆகியோரால் 04.35 மணிக்கு தொடங்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் முதற்கட்டமாக பிரேதத்தின் அங்க அடையாளங்களாக, “சுமார் 34 வயதுடைய ஒரு பெண்ணின் உடல் அது! அதனுடைய விரல் மற்றும் கால் நகங்கள் புஷ் நிறத்தில் இருந்தன. உடம்பில் அணிந்திருந்த ஆடைகளில் சேறு படிந்திருந்த நிறத்தில் கால் சட்டை மற்றும் மேல்சட்டை, வெள்ளை மற்றும் வயலட் நிற உள்ளாடைகள் அணியப்பட்டிருந்தன. இடது மணிக்கட்டில் ஈஷாவின் அடையாளமான எண் 111-420-76 கொண்ட பேண்டும், இடது மோதிர விரலில் ஒரு மெட்டா மோதிரமும், வலது மோதிர விரலில் தங்க மோதிரமும் இருந்தது. இரண்டு காதுகளும் சிதைந்து துளைக்கப்பட்ட நிலையில் காதில் வளையங்கள் இல்லை. பற்களுக்கு இடையில் நாக்கின் நுனி கடிக்கப்பட்ட நிலையில் மேல் உதட்டின் மேல் மீன் கடித்த அடையாளமும் இருந்தது. இடது கீழ் முன் பகுதியில் புருவம் இல்லாமலும், வலது மற்றும் இடது ஆள்காட்டி விரலின் நுனிப் பகுதி சிதைந்த நிலையிலுள்ள எலும்பை வெளிப்படுத்துகிறது. எனினும் இறுதி அறிக்கைக்காக உள்ளுறுப்புகள் ஒதுக்கப்பட்டு ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டது’ என்கின்றது முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை.

 

Subhasree case; Nakeeran received a special document!

 

ரசாயன ஆய்வு அறிக்கை எண் CBE/Tox.h/07/2023 தேதி 18.01.2023 மற்றும் எண் RT.8002/2023,CBE/BIOL/02/2023ன் இறுதி அறிக்கையோ, “உள்ளுறுப்புகளில் எந்த விஷமும் இல்லை. மார்பெலும்பு மற்றும் நீர் மாதிரியில் டயட்டம் கண்டறியப்படவில்லை. யோனி ஸ்வாப் மற்றும் ஸ்மியர்களில் விந்தணுக்கள் கண்டறியப்படவில்லை. நீரில் மூழ்கியதாலேயே மரணம்” என்றது.

 

“கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபஸ்ரீயின் வழக்கினை விரைந்து முடிக்க ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உத்தரவு வந்தது. இதன் ஒருகட்டமாக இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை முன்வைத்து சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமாரை குற்றவாளியாக்க முனைந்துள்ளது காவல்துறை. குறிப்பாக, சுபஸ்ரீ இந்த சம்பவத்திற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனை சரிசெய்ய வேறு வழியில்லாமல் ஈஷாவில் விட்டுச் சென்றுள்ளதாகவும், மீண்டும் கணவரிடம் சென்றால் இம்சை என்ற அளவில் கணவருக்குத் தெரியாமல் ஓடி வந்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்திருக்கலாம். ஆகையால் குற்றவாளி சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமாரே என கதை புனைந்து வருகின்றது ஆலாந்துறை காவல்துறை. யாரையோ காப்பாற்ற பழனிக்குமார் குற்றவாளி ஆகிறார்” என்கிறார் அங்கு பணியாற்றும் நேர்மையான போலீஸார் ஒருவர்.

 

பழனிக்குமாரின் உறவினர் ஒருவரோ, “அது எப்படி..? பழனிக்குமார் குற்றவாளி ஆக முடியும்..? செம்மேடு சி.சி.டி.வி. காட்சிகள் தவிர ஈஷாவிலிருந்து வெளியேறிய எவ்வித சி.சி.டி.வி. காட்சிகளையும் ஈஷா வெளியிடவில்லை. அப்படி எனில் சந்தேகம் ஈஷா மீதுதான்! அதுபோக, பழனிக்குமாரின் புகார் படி, சுபஸ்ரீ கலந்துகொண்ட சைலன்ஸ் வகுப்பு காலை 11 மணிக்கு முடிவடையும் என்பதால் அவரை அழைத்துச் செல்ல காத்திருந்தேன். பிற்பகல் 3 மணி வரையும் அவர் வராததால் ஈஷா மையத்தினரிடம் விசாரிக்கையில் சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக காலை 9.30 மணிக்கு வெளியே சென்றதாகத் தெரியவந்தது. பின் 90******38 என்கின்ற எண்ணிலிருந்து வந்த மிஸ்டுகாலை கொண்டு விசாரிக்கையில் என்னுடைய கணவரிடம் பேச வேண்டுமென ஒரு பெண் மொபைலை வாங்கிப் பேசியதாகத் தெரியவந்தது. அதன்பின் தொடர்ச்சியாக விசாரிக்கையில், ‘சுபஸ்ரீ கால்டாக்சியில் ஏறி செம்மேடு முட்டத்துவயலில் இறங்கியதாகக் கூறப்படுகின்றது’ என்கின்றது. கணவரை விட்டு ஓட நினைப்பவர் எதற்காக கணவரிடம் பேச முயற்சிக்க வேண்டும்? இப்பொழுதும் கூறுகிறேன். விசாரிக்க வேண்டியது ஜக்கியைத்தான். தன்னையும், தன்னுடைய ஈஷாவையும் காப்பாற்ற ஜக்கி போடும் தகிடுதத்தம்தான் இது” என்கிறார் அவர்.

 

இது இப்படியிருக்க, பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “வலது மற்றும் இடது ஆள் காட்டி விரலின் நுனிப்பகுதி சிதைந்த நிலையில் உள்ள எலும்பை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரையோ சுட்டிக்காட்டி அழுத்தமாகப் பேசிய நிலையில் சுபஸ்ரீயின் விரல் சிதைக்கப்பட்டிருக்கலாம். இதை ஏன் விசாரிக்கவில்லை? சுபஸ்ரீ இறுதியாக பழனிக்குமாரிடம் பேச முயற்சித்த கால் டாக்சி ஓட்டுநரை தீர விசாரிக்காதது ஏன்? உள்ளூர் போலீஸை தவிர்த்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்தால் மட்டுமே சுபஸ்ரீயின் மர்ம மரணத்திற்கு விடை கிடைக்கும்” என்கின்ற ஆதங்கக் குரல்கள் காவல்துறை தலைமையை நோக்கி எழுகின்றன.

 

 

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.