Skip to main content

"விட்டுடாதீங்கப்பா என்று அந்த குழந்தைகள் கதறுவது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.." - கண்கலங்கிய முதல்வர்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

asd

 

தமிழ்நாட்டில் சில வாரங்களாக பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "கடந்த சில நாட்களாக நாம் வருத்தமான செய்திகளைத் தொடர்ந்து கேட்டுவருகிறோம். பெண்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலியல் ரீதியான தொல்லைகளும், அதனால் அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வது என தொடர்ந்து இந்த மாதிரியான செய்திகள் வெளியாகிவருகின்றன. இது உண்மையாகவே கேவலமான ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாடு போன்ற நாகரிகமும், கல்வியும் வளர்ந்த நிலையில் உள்ள மாநிலத்தில் இத்தகைய கொடூரமான சம்பவங்களும் நடக்கிறதே என்று நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. அதற்காக இதைப்பற்றி பேசாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ‘விட்டுடாதீங்கப்பா’ என்று அந்தக் குழந்தைகள் கதறுவது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதை யாரும் விடப் போறதில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் வசனம் எழுதியிருப்பார். "மனசாட்சி உறங்கும்போது மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது" என எழுதியிருப்பார். 

 

அப்படி மனசாட்சி இல்லாத மனிதர்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை நாம் நாகரிகத்தையும், பண்பாட்டையும் பற்றிப் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. பெண்களுக்கு உடல்ரீதியாக பாலியல் சீண்டல்கள் அளிக்கும் நபர்களைத் தண்டிக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கு. அவ்வாறு செய்யும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நிச்சயம் கடுமையான தண்டனையை நாம் பெற்றுத் தருவோம் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப் பற்றி வெளிப்படையாக புகார் கொடுக்க வேண்டும். பள்ளிகளில், வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அங்கிருக்கும் உரிய பொறுப்பாளர்களிடம் சொல்லத் தயங்கக் கூடாது. அதேபோல் அவர்கள் கூறும் புகார்களை அலட்சியம் செய்யும் எண்ணம் அவர்களுக்கு அறவே இருக்கக் கூடாது. அதன் உண்மைத் தன்மை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும். புகார் வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பள்ளி நிர்வாகமோ, அல்லது தனது மகளுக்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் குடும்பப் பெயர் கெட்டுவிடும் என்று பெற்றோரோ கண்டிப்பாக நினைக்கக் கூடாது. என்ன தவறு நடந்தாலும் அதனை உரிய முறையில் புகார் அளித்தால்தான் அதுதொடர்பாக தீவிர விசாரணை செய்ய முடியும். அவ்வாறு செய்யாமல் அதை மறைத்தால் உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அது மிகப்பெரிய துரோகமாக மாறிவிடும். 

 

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் உளவியல் ரீதியாக தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உடல் வலியோடு சேர்ந்து உள்ளத்திலும் ஆறாத வலி ஏற்படுகிறது. இந்தச் சூழலில் நம்பிக்கை தளர்ந்து போகிறது. சக மனிதர்கள் மீது வெறுப்பு வளர்கிறது. கல்வியிலோ, வேலையிலோ கவனம் செலுத்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் எல்லா செயல்பாடுகளுமே இதனால் தடைபடுகிறது. அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. இப்படியான சூழ்நிலைகளில் நாம் அவர்கள் பக்கம் முழுவதுமாக நிற்க வேண்டும். அதனால்தான் மாநில அரசு இதை மிக முக்கிய பிரச்சனையாக தொடர்ந்து பார்த்துவருகிறது. இவ்வாறு புகார்களில் சிக்குபவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதை நீங்கள் சில நாட்களாக தொலைக்காட்சிகளில் பார்த்துவருகிறீர்கள். உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர இந்த அரசு தயங்காது. குழந்தைகளுக்கு உதவி எண் 1098. யாருக்கு பாதிப்பு என்றாலும் குழந்தைகள் இந்த எண்ணுக்கு அழைத்துக் கூறுங்கள். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்படுபவர்களின் ரகசியம் காக்கப்பட்டு, அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். எனவே யாரும் எதற்கும் பயப்படாமல் உங்களுக்கு யார் பாதிப்பு ஏற்படுத்தினாலும் தயங்காமல் கூறுங்கள், இந்த அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்"  என்று கூறியுள்ளார்.

 

 

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.