Skip to main content

திவால் நிலையை நோக்கி நகரும் இலங்கைக்கு இந்தியா செய்யவுள்ள பேருதவி!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

 

sri lanka economic crisis india government help to money

இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் அளவு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் நிலையை எட்டியுள்ளது. 

 

இலங்கை அரசின் அந்நிய கடன்களின் மொத்த அளவு 3,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அந்நிய செலவாணி கையிருப்பு 160 கோடி டாலர்களாகக் குறைந்துள்ளது. ஆனால் நடப்பாண்டில் மட்டும் 730 கோடி டாலர் அளவுக்கு அந்நிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டி மற்றும் அசல் தொகையைத் திருப்பி செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

 

உணவுப் பொருட்கள், உரங்கள், கச்சா எண்ணெய், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய தேவைப்படும் டாலர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு 12.1% ஆக அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளன. 

 

இம்மாத இறுதியில் 50 கோடி டாலர் மதிப்புடைய சர்வதேச கடன் பாத்திரங்கள் முதிர்ச்சி அடைவதால், அதனை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் இலங்கை அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

 

உடனடி தேவைகளைச் சமாளிக்க, 43.7 கோடி டாலர் அளவுக்கு இம்மாத இறுதியில் புதிதாக கடன் வாங்க வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கு பதிலாக, மாதம் 50 லட்சம் டாலர்கள் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

 

மூன்று நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடி, அதன் மூலம் டாலர் செலவுகளைக் குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. இந்த நிலையில் சீனா அளித்த 500 கோடி டாலர் கடன்களைத் திருப்பி செலுத்த, இலங்கை அரசு அவகாசம் கோரியுள்ளது. 

 

 

இதனிடையே, இந்தியாவிடமிருந்து இலங்கை அரசு சுமார் 7,391 கோடி ரூபாய் கோரிய நிலையில், பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்காக, இலங்கைக்கு இந்திய அரசு சுமார் 3,730 கோடி கடன் உதவியை வழங்கியுள்ளது. இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதித்துறை அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாத முற்பகுதியில் 900 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச்செலவாணி ஆதரவாக இந்தியாவால் வழங்கப்பட்டது

 

 

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.