Skip to main content

ஸ்மார்ட் சிட்டியை ஆளும் கொள்ளையர்கள்...

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

smart bike

 

வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகள் தன் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் என்றால் மக்களின் அன்றாட வாழ்வில் தேவைப்படும் அனைத்தும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்க செய்வதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழிற்துறை, பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை, நல்வாழ்வு, குடியிருப்புகள், மின்சாரம், போக்குவரத்து இவை அனைத்தும் எளிய முறையில் மக்களுக்கு சென்றடைவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும். அதில் சீனா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பெரும்பாலான நாடுகள் வெற்றியும் அடைந்தன. இதை பின்பற்றியே மத்திய அரசாங்கம் இந்தியாவிலும் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் முதற்கட்டமாக 100 நகரங்களைத் தேர்தெடுத்தது. 

 

ஏன் 100 மாவட்டங்களை மட்டும் தேர்வு செய்துள்ளது? நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மாவட்டங்களில் இது கால் சதவிகிதம் கூட இடம்பெறாது. அதிலும் தமிழகத்தில் வெறும் 11 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 27 மாவட்டங்கள் என்ன பாவம் செய்தன என்று தெரியவில்லை. பல எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கேள்விகள் எழுப்பியிருந்தன. 

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அரசு கஜானாவில் பணம் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். அதே சமயத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் ஸ்மார்ட் பைக் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. முழு ஊரடங்கு நீக்கப்பட்டால் பொது போக்குவரத்துகளில் குறைந்த சதவீதத்தில் மட்டுமே மக்கள் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வர போவதாகவும் அறிவித்திருந்தது.

 

ஐதராபாத்தில் இயங்கி வரும் PBS என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் பைக் எனும் EcoBike, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டில்லி, ஐதராபாத், அமராவதி போன்ற நகரங்களைத் தொடர்ந்து சென்னையிலும் தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் 78 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அண்ணா நகர், மெரினா போன்ற இடங்களில் சுமார் 500 ஸ்மார்ட் பைக்குகள் நடைமுறையில் உள்ளன.

 

ஆனால் சென்னையில் 500 ஸ்மார்ட் பைக்குகள் ஓடுகிறது என்பதையே நம்ப முடியவில்லை. காரணம், மேலே சொல்லக்கூடிய 78 ஸ்மார்ட் பைக் நிறுத்தங்களில் நாம் நேரில் சென்று பார்த்தோமேயானால், பைக்குகள் குறைவாகவே காணப்படும். அவற்றை மக்கள் தங்களின் பயன்பாட்டிற்கு எடுத்து சென்றிருக்கிறார்களா அல்லது பழுது பார்க்க நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதே தெரியவில்லை. 

 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 1000க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் எலெக்ட்ரிக் பைக் என்று சொல்லக்கூடிய 500 எலெக்ட்ரிக் சைக்கிள்களும், Next Generation Bike என்று சொல்லக் கூடிய செயின் இல்லாமல் ஓடும் 500 சைக்கிள்களும் கொண்டுவர போவதாக அறிவிப்பு வெளியாகியது. அதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஷெனாய் நகர் அம்மா அரங்க வளாகத்தில் புதிய இ-பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட் பைக்கை மக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. அதற்கு சாட்சியாக ஸ்மார்ட் பைக் நிறுத்த நடைமேடையில் எப்போதுமே இந்த வாகனங்கள் நின்றுகொண்டேதான் இருக்கும்.

 

அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட் பைக்கை நடுத்தர குடும்பத்தினர் மட்டுமே பெரிதளவு பயன்படுத்தி வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் யாரும் இதை பயன்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இதைப்பற்றிய தெளிவான பார்வை கூட சாதாரண மக்களுக்குக் கிடையாது. நடுத்தர வர்கத்தினர் கூட உடற்பயிற்சிக்காக மட்டுமே இந்த ஸ்மார்ட் பைக்கைப் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, மற்ற பணி சார்ந்த வேலைகளுக்கும் பயன்படுத்துவதில்லை என்று ஸ்மார்ட் பைக் பாராமரிப்பாளர்கள்கூறுகின்றனர் .

 

ஸ்மார்ட் பைக்கின் பழைய கட்டண கொள்ளையும் புதிய கட்டண வேட்டையும்: 

 

முதல் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாயும், அதன் பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒன்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். சந்தா முறை கட்டணத்தின் கீழ் ஒரு நாளுக்கு நாற்பத்தி ஒன்பது (49) ரூபாய், ஒரு மாத பயன்பாட்டிற்கு இருநூற்று நாற்பத்தி ஒன்பது (249) ரூபாய் மற்றும் மூன்று மாதத்திற்கு அறநூற்று  தொன்னூற்றி ஒன்பது (699)ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். பயன்பாட்டிற்கு பிறகு மிதிவண்டியை உரிய நேரத்தில் அதன் நிறுத்ததிற்கு கொண்டு வந்து சேர்க்கத் தவறினால் அபராத தொகையாக இருநூறு(200) ரூபாய் வசூலிக்கப்படும். 

 

தற்போது கொண்டுவர இருக்கும் ஸ்மார்ட் பைக்கிற்கு கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என மக்களின் உழைப்பை வேட்டையாட காத்திருக்கிறது இந்த அரசு. அதே நேரத்தில் சாதாரண ஏழை மக்கள் பேருந்துகளில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்வது போல் எளிதானது அல்ல இந்த ஸ்மார்ட் பைக் பயணம்.  இதற்கு பல விதிமுறைகள் உள்ளன அதை பின்பற்றினால் மட்டுமே இதில் பயணம் செய்யமுடியும். அரசு ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் கிலோமீட்டர் என்ற கணக்கில் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையை துவங்குவார்கள். ஆனால் இந்த ஸ்மார்ட் பைக் திட்டம் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என மக்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் பைக் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் என்று சொல்லப்படுகிறது.

 

சரி ஒரு சிறிய கணக்கை வகுத்து பார்ப்போம். சென்னை வாகன நெரிசலை கணக்கில் வைத்து இந்த வாகனத்தில் 30 கி.மீ. வேகத்தில் 10 கி.மீ. தூரம் பயணம் செய்தால் சரியாக ஒருமணி நேரம் கடக்கும். அதாவது நாம் 60 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொது பேருந்து கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சேகுவேரா

 

 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.