Skip to main content

ஒட்டப்பிடாரத்தில் ஜெயலலிதாவிற்கு சீட்..?

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

மே 19-ம் தேதி நடக்கும் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நேற்றே (22-04-2019 ) துவங்கிவிட்டது. எதிர்க்கட்சியான திமுகவும், தினகரனின் அமமுகவும் வேட்பாளர்களை களம் இறக்கிவிட்டது. ஆனால், ஆளுங்கட்சியில் இன்னமும் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட செயலாளர்களின் தலையீடு காரணமாக வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

Sheet for Jayalalithaa in Ottapidaram

   
"மதுரை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி உதயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ஆளுக்கு ஒரு ஆளை சிபாரிசு செய்கின்றனர். இதுதவிர ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான முத்துராமலிங்கம் ஆகியோரும் 'சீட்' கேட்டு ஒற்றைக் காலில் நிற்கிறார். இதனால், அங்கு முடிவு எடுக்க முடியவில்லை. சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமிக்கு தான் 'சீட்' என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் மறைந்த கனகராஜ் குடும்பத்திற்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருப்பதால், அங்கும் முடிவு எடுக்க முடியவில்லை.

 

   
அரவக்குறிச்சியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களம் காண்பதால், வலுவான ஆளை போட்டிக்கு நிறுத்த வேண்டும் என முடிவு செய்த கட்சித் தலைமை, முன்னாள் சென்னை மேயரும் கரூரை பூர்வீகமாக கொண்டவருமான சைதை துரைசாமியை நிற்க சொன்னது. ஆனால், செந்தில்பாலாஜியின் பிரச்சார வியூகத்திற்கு தம்மால் ஈடு கொடுக்கமுடியாது என்று அவரே விலகிக்கொண்டார். இதனால், கரூர் ஒன்றிய செயலாளரும் அமைச்சர் தங்கமணியின் உறவினருமான கமலக்கண்ணன், இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த செந்தில் நாதன், அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட மாஜி எம்.எல்.ஏ மோகன், ஆவின் சேர்மன் சின்னத்துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மனு செய்துள்ளனர். ஆனால், சீட் யாருக்கு என்பதை கட்சித் தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை.

 

   
ஒட்டப்பிடாரம் தொகுதியைப் பொறுத்தவரை சின்னத்துரையும், மோகனும் இப்போது மந்திரி கடம்பூர் ராஜூ பின்னாடியே சீட்டுக்காக சுற்றி வருகின்றனர். சின்னத்துரைக்கு 'சீட்' வாங்கி கொடுத்தால், நாளைக்கு நமக்கே எதிரியாக வந்து நிற்பார். அதேபோல், மோகனுக்கு 'சீட்' வாங்கி கொடுத்தால், ஜெயித்த பிறகு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பக்கம் போய்விடுவார் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பக்கம் சேர்ந்துகொண்டு நமக்கு குடைச்சல் கொடுப்பார். ஏனெனில் மோகனும், மார்க்கண்டேயனும் தொழில் முறை கூட்டாளிகள். இந்த விஷயம் எல்லாம் மந்திரி கடம்பூர் ராஜூ கண் முன்னே வந்து, அவருக்கு உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.

 

jayalalitha

   
அதனால் ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ஜெயலலிதாவுக்கு சீட் கொடுத்தால், பெண்ணுக்கு சீட் கொடுத்தது மாதிரியும் ஆச்சு. நம்முடைய அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது என கடம்பூரார் நினைக்கிறார். முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தங்கராஜின் மகள் தான் ஜெயலலிதா. பாரம்பரிய அதிமுக குடும்பம். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி தங்கராஜ். அதனால் தான் தனது மகனுக்கு அண்ணா, ராமச்சந்திரன் என்றும் மகளுக்கு ஜெயலலிதா என்றும் பெயர் வைத்தார். எனவே, ஜெயலலிதாவுக்கு சீட் கொடுக்கலாம் என சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் சகோதரர்கள் ஏற்கனவே சில மோசடிகளில் சிக்கி பெயரை கெடுத்திருக்கின்றனர் என்றும் காதைக் கடிக்கின்றனர்" அதிமுக மூத்த நிர்வாகிகள்.

 

Sheet for Jayalalithaa in Ottapidaram

    


ஏற்கனவே நடந்த 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்தும், எதிர்க்கட்சிகளுக்கு தான் ஓட்டு அதிகம் விழுந்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 10 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், நான்கு தொகுதிகளிலும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் வண்டியை திருப்புவதால், யாருக்கு 'சீட்' வழங்குவது என்பதில் ஓபிஎஸ்சும் - இபிஎஸ்சும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
 

 

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.