Skip to main content

மனுதர்மம் எழுதியபோது குஷ்பு கூட இருந்து எழுதினாரா..? - சீமான் தடாலடி!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

h

 

பெண்கள் தொடர்பாக மனுவில் கூறிய சில கருத்துகளைச் சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புக்கள், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைதொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு திருமாவளவனின் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து குஷ்பு தலைமையில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டார்.

 

இது தொடர்பான பிரச்சனைகள் சர்ச்சையான நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "திருமாவளவன் பேசியது தொடர்பாக இன்று பெரிய அளவில் சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. அவர் இல்லாத ஒன்றை எந்த இடத்திலும் கூறவில்லை. இருப்பதை அப்படியே ஊடகம் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அது தவறு என்றால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். மனுவை எழுதியது யார், எங்கள் அண்ணன் திருமாவளவனா? எழுதி இருப்பதைக் கூறியது தவறா? எங்கள் அம்மாவை, எம்குலப் பெண்களை இழிவுப்படுத்துகின்ற எதுவுமே வேதமாகவோ, புனிதமாகவோ இருக்க முடியாது என்பது எங்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்து. அதைத்தான் அவர் கூறுகிறார்.

 

இப்போது திடீர் என்று வேலை தூக்கிக்கொண்டு ஓடுகிறீர்கள். நான் வேல் வைத்திருந்த போது கிண்டல் அடித்த கூட்டம், தற்போது எனக்கு முன்பே வேலை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். நான் முருகன் முப்பாட்டன் என்று சொன்ன போது சிரித்தவர்கள், இன்று வேல் பூஜை செய்கிறார்கள். நான் ஆடு, மாடு வளர்த்தல், பசுமை, தற்சார்பு என்று கூறிய போது அதனைப் பற்றி சிந்திக்காமல் அதனைக் கிண்டல் அடித்தீர்கள். ஆனால், இன்றைக்கு கர்நாடகாவில் இருந்து ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு தற்சார்பு பொருளாதாரம் என்று பேசுகிறார் ஒருவர். நம்மை இல்லாமல் செய்ய முயற்சிப்பது அல்லது நம் திட்டங்களை காப்பி அடிப்பது என்ற வேலைகளை அவர்கள் மிகத் தீர்க்கமாகச் செய்து வருகிறார்கள். உங்களுக்கு என்று ஏதாவது கொள்கை இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை. நம்முடைய பிள்ளைகள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் பால் கொட்டப்படுகிறது, நெய் எரிக்கப்படுகிறது, மூத்திரம் குடிக்கப்படுகிறது என்கிறார்கள். இதுதான் இவர்களின் கோட்பாடாக இருக்கிறது. 

 

மாட்டுக்கறி சாப்பிடுகின்ற நான் இழிமகன், தீண்டத்தகாதவன், ஒதுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன். ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கின்ற நீ உயர்ந்தவனா? மூத்திரம் குடிக்கின்ற உன்னை விட மாட்டுக்கறி சாப்பிடுகின்ற நான் எவ்வளோ உயர்ந்தவன். எனவே அவர் இல்லாத ஒன்றைச் சொல்லவில்லை. நானே பலமுறை அப்படிச் சொல்லியிருக்கிறேன். என்ன ஆட்டம் போட்டாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் இப்படிச் செய்வதால் அவரும் பயந்து பின்வாங்கப் போவதில்லை. எங்க அண்ணனே விட்டாலும் நாங்கள் அதனை விடுவதாக இல்லை. குஷ்பு இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதைப் பற்றி கேட்கிறீர்கள், அவர்கள் மனுதர்மத்தை எழுதியபோது உடன் இருந்து எழுதியவரா? குஷ்புவையும் சேர்த்து அந்த நூல் இழிவாகச் சொல்கிறது என்பதுதான் அண்ணன் திருமாவளவனின் வருத்தம் எனவே முதலில் அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

 

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்