Skip to main content

"திமுகவுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி... ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நிற்பேன்" - சீமான் தடாலடி!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

jkl

 

ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்த நிலையிலும் அவர் தொடர்பான விவாதம் தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவை வருமாறு, "அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் மனதார வரவேற்கிறேன். ஒரு திரைக்கலைஞனாக அவரை நானும் ரசிக்கிறேன். சினிமாவில் அவரை கொண்டாடித் தீர்த்துள்ளோம். அரசியல் ரீதியாக அவர் முடிவெடுக்க தயாரான போது அதனை கடுமையாக எதிர்த்துள்ளேன். கடைசி வரை அந்த முடிவில் நாங்கள் எந்தவித சமரசமும் செய்யவில்லை. அவரும் அவருடைய குடும்பத்தாரும் கருதுவது போல அவரின் உடல்நலமும், மன நலமும் ரொம்ப முக்கியம். அதனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது இந்த பேரிடர் காலத்தில் மிக முக்கியம். அதன் காரணமாகவே அரசியலுக்கு நீங்கள் வேண்டாம் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சிகளில் நான் பதிவு செய்திருந்தேன். 

 

கடந்த காலங்களில் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவன் நான். அரசியல் ரீதியாக அவரை கடுமையாக எதிர்த்திருக்கலாம். அது அவருடைய ரசிகர்களையோ, குடும்பத்தாரையோ, அவரையோ காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எங்களால் அவர் புகழ்ச்சிக்கு உரியவராக கொண்டாடப்படுவார் என்பதில் ஐயமில்லை. அவர் ஆகப்பெரும் திரை ஆளுமை. அதற்கு தமிழகத்தில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது. ஆசியா முழுவதும் அவர் புகழ் பரவிக்கிடக்கிறது. தமிழ் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரை கொண்டாடுவார்கள். அரசியல் அவருக்கு அவசியமில்லாத ஒன்று. எனவே அவரின் தற்போதைய முடிவு என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் எதிர்த்ததால் அந்த முடிவை அவர் எடுத்ததாக நான் பார்க்கவில்லை. எப்படி பார்த்தாலும் அந்த முடிவு என்பது வரவேற்கக் கூடியதாகவே இருக்கிறது. அந்த வகையில் அவருக்கும், எங்களுக்கும் இந்த முடிவு மகிழச்சியைத் தருவதாகவே இருக்கிறது. 

 

தலைவன் என்பவன் தன்னையே எரித்துக்கொண்டு வெளிச்சத்தை பரப்பக்கூடியவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள். எனவே திரை வெளிச்சம் மட்டும் அரசியலுக்கு போதும் என்பதை மட்டும்தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். வந்த உடனே ஆட்சியைப் படிப்பேன் என்பது, சேவை செய்யாமல் பதவி வேண்டும் என்பதைத் தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அதனை இன அவமானமாக கருதுகிறோம். எனவேதான் இத்தனை ஆண்டுகாலமாக அதனை எதிர்த்து வருகிறோம். அரசியலில் உட்கட்சி பிரச்சனைகளையே அவரால் தாங்க முடியாது. நான் அதை செய்தேன், இதை செய்தேன் எனக்கு பதவி தரவில்லையா என்று கேள்வி எழுப்புவார்கள். அரசியலை என்னைப் போன்ற காட்டானாலேயே தாங்க முடியவில்லை. கச்சைய கட்டி இறக்கி விட்டுவிட்டு எல்லோரும் உங்களை திட்டுவார்கள். அதனால்தான் தயவு செய்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுகொண்டிருந்தோம். தற்போது அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார். மேலும் திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல, நாம் தமிழர்தான் கட்சி தான். நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை ஸ்டாலின் தான் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் அவர் போட்டியிடும் தொகுதியில்தான் நான் போட்டியிடுவேன்" என்றார். 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்