Skip to main content

கட்டணம் வசூலிக்கவே ஆன்லைன் வகுப்புகள்... ராஜேஸ்வரி ப்ரியா கண்டனம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

 rajeshwari priya


குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேவையில்லை, கட்டணம் வசூலிக்கவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகிறது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ''ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கக் கூடாது என்று அறிவித்து சில மணி நேரத்தில் கற்பிக்கப்படலாம் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மாற்றி கூறியுள்ளார். தனியார் பள்ளி மாணவர்கள் அறிவில் மட்டும் கவனமா? அல்லது கட்டணம் வசூலிப்பதற்கு ஒத்துழைப்பா? அப்படியென்றால் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவர்கள் நிலை என்ன? கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்கள்.
 

இதனால் ஆன்லைன் வகுப்பைக் காரணம் காட்டி மாணவ மாணவிகள் அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதனால் தேவையற்ற வயதுக்கு மீறிய பல விஷயங்கள் விஷமாகப் பிஞ்சு மனதில் பதிய தொடங்கிவிட்டன. இதனால் ஏற்படபோகும் சீரழிவைத் தடுக்க வேண்டும்.
 

திருச்சி மணப்பாறை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசயத்தைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அதுபோன்ற விசயங்கள் இனி நடக்கக் கூடாது என்பதற்குத்தான் சொல்கிறேன். குழந்தைகள் படிப்பை மறந்துவிடுவார்கள் என்றால், ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு  தேர்வு நடத்தப்படவில்லை. அந்தப் பாடங்களை பள்ளி திறக்கும் வரை திரும்பப் படிக்குமாறு வலியுறுத்தலாம்.
 


பொதுத்தேர்வைச் சந்திக்கக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம். அதில் தவறில்லை. அதனை நான் முழுமையாக வரவேற்கிறேன். வசதி வாய்ப்பு குறைந்த குடும்பங்களில் உள்ள மாணவ மாணவிகள் ஸ்மார்ட் போன்களுக்கு என்ன செய்வார்கள்? என்பதையெல்லாம் அரசு யோசித்ததாகத் தெரியவில்லை. குறைந்தப்பட்சம் 8ஆம் வகுப்பு வரையாவது ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் என்பது எங்களது வேண்டுகோள். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளோம். அவரை நேரில் சந்தித்தும் எங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார். 




 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Principal of private school arrested in pocso

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செயல்பட்டு வந்த தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை பகுதியில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் அளித்திருந்தனர். அதேபோல் மற்றொரு மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல பள்ளி மாணவிகளுக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை இன்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தயாராகி உள்ளனர்.