Skip to main content

கனிமொழியின் வளர்ச்சியைத் தடுக்கக் களமிறக்கப்பட்டாரா உதயநிதி?

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

kanimozhi

 

சாத்தான் குளம் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கனிமொழியும், உதயநிதியும் அடுத்தடுத்து சென்று வந்த சம்பவம் தி.மு.க.-வில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் பரவி வருகிறது. 

 

சாத்தான்குளம் காவல்துறையின் கொடூர தாக்குதலில் நடந்துள்ள இரட்டைக் கொலை சம்பவம் மனசாட்சி உள்ள மனிதர்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காவல்துறையின் அராஜகத்தைக் கண்டித்தும், ஜெயராஜ் குடும்பத்துக்கு நீதி கேட்டும் உடனடியாகக் களத்தில் குதித்தது தி.மு.க.!                  

 

தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் சாத்தான் குளம் பிரச்சனைனையைக் கையிலெடுத்த கனிமொழி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கேட்டு, களத்தில் இறங்கினார். தமிழக காவல்துறை தலைவர் திரிபாதியைச் சந்தித்து முறையிட்டார். மத்திய உள்துறை அமைசகம் வரை பிரச்சனையை எடுத்துச் சென்றார் கனிமொழி. 

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியை தங்கள் கட்சி நிதியிலிருந்து ஒதுக்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த நிதியை ஜெயராஜ் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வருமாறு கனிமொழிக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின். அதன்படி ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து நிதி உதவியை வழங்கியதோடு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் கனிமொழி.    

 

kanimozhi

 

அவர் சென்று வந்த மறுநாள் திடீரென சாத்தான்குளம் புறப்பட்டு சென்ற தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. எப்போதும் இருக்கும் என உறுதி கொடுத்துவிட்டு திரும்பினார்.                    

 

கனிமொழி சென்று வந்த மறுநாள் உதயநிதியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தது, தி.மு.க.-வில் சலசலப்பைச் சத்தமில்லாமல் ஏற்படுத்தியிருகிறது. கனிமொழியின் வளர்ச்சிக்கு உதயநிதி மூலம் தடை போடப்படுகிறதா? என தி.மு.க.-வில் உள்ள மற்ற அணிகளின் நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்கிறது. மூத்த மா.செ.க்கள் பலரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் போது, இந்தச் சம்பவங்களைத்தான் அசை போடுகிறார்கள். 

 

udhayanidhi stalin


தி.மு.க.-வில் சத்தமில்லாமல் எழுந்துள்ள இந்தச் சலசலப்புகள் குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’தி.மு.க.-வில் ஸ்டாலினுக்கு பிறகு கனிமொழியின் செயல்பாடுகள்தான் தமிழக அரசியலில் பேசப்படுகிறது. அவரின் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. மக்கள் நலன் சார்ந்து அவர் வைக்கும் கோரிக்கைகளுக்கும் மரியாதை கிடைக்கிறது. தூத்துக்குடி எம்.பி. என்கிற முறையில் மாவட்டத்தின் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறார், முதல் ஆளாகக் களத்தில் நிற்கிறார். அதே ரீதியில்தான் சாத்தான்குளம் இரட்டைக் கொலை சம்பத்திலும் காவல்துறைக்கு எதிராகவும்; தமிழக அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறார். இது, தென் மாவட்டங்களில் தி.மு.க.-வுக்கு நற்பெயரை கொடுத்துள்ளது. கனிமொழியின் செயல்பாடுகள் பரபரப்பாகவும் ஊடகங்கள் மத்தியில் எதிரொலித்தன.

 

இவைகள் தி.மு.க.-வில் உள்ள சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே கனிமொழியின் வேகத்துக்குத் தடை விதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உதயநிதியை வைத்து அதனை நிறைவேற்ற அவரை களத்தில் இறக்கினர். அதன்படி அமைந்ததுதான் உதயநிதியின் சாத்தான்குளம் பயணம். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், தொகுதி எம்.பி.என்கிற வகையில், கனிமொழியை இயக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். அவரின் உத்தரவுப்படியே கனிமொழியும் நடந்து கொள்கிறார். அப்படியிருக்க, மறுநாளே உதயநிதி சாத்தான் குளம் போக வேண்டிய அவசியம் எதற்கு? அதனால்தான் கனிமொழியின் வளர்ச்சி இளைஞரணிக்கு பிடிக்கவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட அரசியல்கள் தி.மு.க.-வை பாதிக்கும்‘’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய மாநில நிர்வாகிகள்.                          

 

http://onelink.to/nknapp

 

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ’’சாத்தான்குளம் சம்பவம் எப்படிப் பார்த்தாலும் ஜீரணிக்க முடியாதவை. தி.மு.க. இளைஞரணி இது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது. காவல்துறையின் கொடூர தாக்குதலால் இரண்டு அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதை உதயநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார்.  தி.மு.க. இளைஞரணி சார்பில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது தமக்கு ஆறுதலாக இருக்கும் என நினைத்தார் உதயநிதி. அந்த நினைப்புதான் அவரை சாத்தான் குளத்துக்கு அனுப்பி வைத்தது. அப்படியிருக்கும் போது அவர் போய் வந்தததற்கு உள் நோக்கம் கற்பிப்பது தேவையற்ற அரசியல்! மேலும், கனிமொழி வேறு யாரோ கிடையாது. உதயநிதியின் அத்தை. அவரது வளர்ச்சி கட்சியின் வளர்ச்சியாகத் தான் பார்க்கப்படுகிறதே ஒழிய அவர் மீது உதயநிதி பொறாமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இளைஞரணியின் அரசியல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத்தான் உதயநிதி திட்டமிடுகிறார். குடும்பத்திற்கு கலகத்தை உருவாக்க இப்படிப்பட்ட செய்திகளை கட்சியின் சீனியர்களே பரப்புவதுதான் கவலையளிப்பதாக இருகிறது‘’ என்கிறார்கள் வருத்தமாக!

 

இதற்கிடையே ஜெயராஜ் குடும்பத்திற்கு நீதி கேட்டு முகக் கவச பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் கனிமொழி!

 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.