Skip to main content

சசிகலாவின் விடுதலை? வேகமெடுக்கும் பினாமி சொத்துகள் வழக்கு! 

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

sasikala


சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட் 14-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்று பா.ஜ.க.-வுக்கு நெருக்கமான ஆசிர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் பதிவு செய்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து சசிகலாவின் விடுதலை குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் இப்போது வரை வெளியிடவில்லை. மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலையாகும் கைதிகளின் பட்டியலில் அவரது பெயர் இன்று வரை இடம் பெறவில்லை என்கிற தகவலும் பரவியுள்ளது.


         
இந்த நிலையில் சிறைத்துறை வழக்குகளை கையாளும் மூத்த வழக்கறிஞர்களிடம் பேசியபோது, "சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் பெங்களூர் சிறையில் உடனடியாக அடைக்கப்பட்டார். 21 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார். மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படிதான், 2017 பிப்ரவரி 14-ஆம் தேதி மாலையிலிருந்து பெங்களுர் சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. 


                
இந்த வழக்கில் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்த 21 நாட்களைத் தவிர, இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு சிறையிலும் அவர் இருந்ததில்லை. அந்த அடிப்படையில், அவருடைய தண்டனை காலத்திலிருந்து அந்த 21 நாட்கள் கழித்துக்கொள்ளப்படும். அதேசமயம், சிறைத்துறை விதிகளின் படி, சிறைத்துறை உயரதிகாரிகளுக்குள்ள அதிகாரத்தின்படி தண்டனை கைதிகளுக்கு சில சலுகைகள் வழங்க முடியும். அந்தச் சலுகைகள் கூட கைதியின் நன்னடத்தையைப் பொறுத்து அமையும். அந்த வகையில், நன்னடத்தையைப் பொறுத்து மாதத்திற்கு 6 நாட்களைச் சலுகை நாட்களாக ஒரு கைதியால் பெற முடியும். அப்படிப் பெறுவதன் மூலம், வருடத்திற்கு 72 நாட்கள் ஒரு கைதிக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  

 

அந்தச் சலுகை நாட்கள் கிடைக்கும்பட்சத்தில், அதனைத் தண்டனை காலத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும். இந்தச் சலுகை நாட்களை சசிகலாவுக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழங்கும் பட்சத்தில் அவரது முன் விடுதலைச் சாத்தியமாகும். ஆனால், சிறையில் சொகுசாக இருப்பதற்காக சிறைத்துறை டி.எஸ்.பி.க்கு  சசிகலா லஞ்சம் கொடுத்தார் எனக் குற்றம்சாட்டியிருந்தார் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.ஜி.யாக இருந்த ரூபா. மேலும், இதற்கான ஆதாரங்களுடன் கர்நாடக அரசுக்கு ரிப்போர்ட்டும் அனுப்பியிருந்தார். 


                    
இதன் உண்மைத் தன்மையை அறிய விசாரணை கமிசனை அமைத்தது கர்நாடக அரசு. அந்த கமிஷனின் ரிப்போர்ட்டும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கைதிகளின் நன்னடத்தைக்கான அதிகாரிகள் வழங்கும் சலுகை நாட்கள் சசிகலாவுக்கு கிடைக்குமா என்பது உறுதியாகவில்லை. இப்படிப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக கமிசனின் ரிப்போர்ட் இருக்கும் பட்சத்தில் சலுகை நாட்கள் சசிகலாவுக்கு கிடைக்கலாம். அதனால், கர்நாடக அரசின் தயவில்தான் இருக்கிறது சசிகலாவின் முன் விடுதலை!‘’ என்கிறார்.

 

இந்த நிலையில், சசிகலாவின் பினாமிகள் எனக் கூறி சிலரின் சொத்துகளை வருமானவரித்துறை முடக்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் பிறப்பித்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை சசிகலா தரப்பினர் வெள்ளையாக மாற்றினார்கள் என்கிற தகவல்களின் அடிப்படையில், சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கடந்த 2017 டிசம்பரில் ரெய்டு நடத்தினர் வருமான வரித்துறையினர். 


                    
அதில், பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் மாலின் உரிமையாளர்களில் ஒருவரும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வலது கரமாக இருந்தவருமான ஏ.ஜி.எஸ்.தினகரனின் அலுவலகத்திலும் ரெய்டு நடத்தி அவரது சொத்துகளை முடக்கினர். அவரிடம் வருமானவரித்துறை நடத்திய விசாரணையில், சசிகலாவின் பினாமி என அவர் சொன்னதாகவும், அதனடிப்படையில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தந்ததாகவும் வருமானவரித் துறை பதிவு செய்தது. இது தொடர்பாக வழக்கையும் தொடர்ந்தது வருமானவரித் துறை. 

 

இந்த நிலையில், ஏ.ஜி.எஸ்.தினகரன், ‘’என்னிடம் கைப்பற்றிய டாகுமெண்டுகளை வைத்து சசிகலாவின் பினாமி என வருமானவரித் துறை குற்றம்சாட்டுவது தவறு. அதனடிப்படையின் என் சொத்துகளை முடக்கி வைத்திருப்பதும் தவறு. சசிகலாவின் பண பரிவர்த்தனைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனால் என் சொத்துகளை முடக்கி வைத்திருக்கும் வருமானவரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.            

 

http://onelink.to/nknapp

 

இந்த மனுவின் மீது நேற்று (25.6.2020) விசாரணை நடத்திய நீதிபதி மகாதேவன், சம்மந்தப்பட்ட மனுவிற்கு அனைத்து ஆவணங்களுடன் 15 நாட்களில் பதில் அளிக்குமாறு வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

பினாமி சொத்துகள் தடைச் சட்டத்தின் படி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கின் விசாரணை, மீண்டும் லைம் லைட்டுக்கு வரவிருப்பதை, சசிகலாவின் விடுதலையோடு முடிச்சுப் போட்டு விவாதிக்கிறார்கள் அ.தி.மு.க.-வினர்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.