Skip to main content

சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.

 

நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனத் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி சுற்றித் திரிந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இந்நிலையில் எடப்பாடிக்கு சமமாக பன்னீரின் கையையும் சேர்த்து பிரதமர் மோடி உயர்த்தியதால் உற்சாகமான பன்னீர், பிரதமர் கையை உயர்த்திய போது இரட்டை இலை யைக் காண்பித்தவாறு நின்றார். எடப்பாடி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. பிரதமரின் இந்தச் செயலுக்கு ஒரு பின்னணி காரணம் இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

 

காலை 11.00 மணிக்கு சென்னை வந்த பிரதமரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தார்கள். அவர்கள், குருமூர்த்தி, தமிழக அரசியல் விவகாரங்களில் தலையிடுகிறார். அவர் ரஜினி விசயத்தில் தப்பான விவரங்களைக் கொடுத்து ஒட்டுமொத்த பா.ஜ.க.வினரிடையே நகைப்புக்குள்ளாகிவிட்டார் எனச் சொல்லப்பட்டது. அதனால் கேரளாவிற்குச் செல்லும் வழியில் குருமூர்த்தியை விமான நிலையத்தில் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை பிரதமர் ரத்து செய்தார். அத்துடன், பிரதமர் வரும் நாளன்று தமிழகத்தின் ஒரு முக்கியமான தினசரி பத்திரிகையில் ஓ.பி.எஸ். விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார். எடப்பாடிக்கு போட்டியாகக் கொடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் ஓ.பி.எஸ். சூசகமாகச் சொல்ல வருவது என்னவென்றால், சசிகலாவையும் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான். இதைப் பற்றி தன்னிடம் பேசியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மோடி சசிகலாவிற்கும், எடப்பாடிக்கும் நடைபெறும் மோதல் நிகழ்வுகளைப் பற்றி அவர்களிடம் விசாரித்தார். அதனால்தான் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்க வேண்டும் என எடப்பாடி- ஓ.பி.எஸ். என இருவரின் கரத்தையும் பிடித்துத் தூக்கினார் என்கிறார்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். மேடையில் இருவரின் ஒற்றுமைக்கான செய்தியைச் சொன்ன மோடியை சந்திக்க நேரு ஸ்டேடியத்தில் அவர், ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறைக்கு எடப்பாடியும்- ஓ.பி.எஸ்.ஸும் ஒன்றாகவே சென்றார்கள்.

 

ஓ.பி.எஸ். வரவேற்பறையில் உட்கார, முதல்வர் என்ற அடிப்படையில் மோடியின் அறைக்குளேயே எடப்பாடி செல்ல முயன்றார். அவரை அனுமதியுங்கள் என மோடி சிக்னல் கொடுக்க, எடப்பாடி உள்ளே சென்றார். உள்ளே மோடியும், எடப்பாடியும் இருந்த 10 நிமிடத்தில் மோடி தனது ஒப்பனையை சரி செய்து கொண்டார். ரெஸ்ட் ரூம் சென்று ரெஃப்ரஷ் செய்து கொண்டு, ஒரு சில மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, எடப்பாடியிடம் மோடி தமிழக நிலவரங்களைப் பற்றி கேட்டார். அவரிடம் எடப்பாடி விளக்குவதற்குள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என ஒற்றை வரியில் கூறிவிட்டு, கேரளாவிற்குப் புறப்பட்ட மோடி, வரவேற்பறையில் இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் கை கொடுக்கவும் மறக்கவில்லை என்கிறார்கள் மோடி- எடப்பாடி சந்திப்பை நேரில் பார்த்த போலீஸ் அதிகாரிகள்.

 

மோடி சந்திப்பிற்குப் பிறகு பன்னீர் உற்சாகமாகக் கிளம்பினார். மோடியை வழியனுப்ப வந்த எடப்பாடி உற்சாகமாக இல்லை. ஆனால், சமீபத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் என கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்த எடப்பாடி ரொம்பவே உற்சாகமாக இருந்தார். அவர் பேசிய ஒவ்வொரு இடத்திலும் பத்தாயிரம் பேர், 25 ஆயிரம் பேர் எனக் கூட்டம் அலைமோதியது. சசிகலாவுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மிஞ்சும் வகையில் தாரை தப்பட்டைகளுடன் நடன நிகழ்ச்சிகள், பூக்களைக் கொட்டுதல் என பிரம்மாண்டமாகவே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் உற்சாகமான எடப்பாடி, இந்த ஏற்பாடுகளை செய்த எஸ்.பி.வேலுமணியிடம் மட்டும் கடுப்பாகவே நடந்து கொண்டார்.

 

எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க.வின் முன்னாள் தொழிற்சங்க தலைவரான சின்னசாமியை அழைத்துக் கொண்டு எடப்பாடியை, அவர் தங்கியிருந்த உடுமலைப்பேட்டைக்கே அழைத்து வந்திருந்தார். சின்னசாமி எடப்பாடிக்கு எதிராக வழக்குப் போட்டவர். அவர், தொழிற்சங்க பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்தவர் என்கிற புகாருக்கு ஆளானவர். அவருடன் வேலுமணியைப் பார்த்த எடப்பாடி டென்ஷன் ஆனார்.


 
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க., என்னை எதிர்த்து வழக்கு போட்டவனக் கூட்டிக்கிட்டு என்ன வந்து பார்ப்பீங்களா? நீங்க செய்யறதெல்லாம் தெரியாதா? ஓ.பி.எஸ் மாதிரியே எனக்கு போட்டியா விளம்பரம் கொடுக்கறீங்க. 50 ஆண்டு காலம் உள்ளாட்சியில் செய்ய முடியாத சாதனைகளை செஞ்சிட்டதா விளம்பரம் தர்ரீங்க. அம்மா ஆட்சியைவிட, எம்.ஜி.ஆர். ஆட்சியை விட சிறந்த முறையில் செஞ்சிட்டீங்களா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? வாய்ப்பு கிடைச்சா முதலமைச்சர் ஆகலாம்னு, சசிகலாவுக்கு தூது விடுறீங்களா?, நீங்களும் விஜயபாஸ்கரும் இதே வேலையாதான் திரியறீங்க, தஞ்சை மாவட்டத்துல அங்கே இருக்கற வைத்தியலிங்கம் சொன்ன வேலை நடக்க மாட்டேங்குது, நீங்க சொன்னா வேலை நடக்குது. இப்படி தமிழ்நாடு முழுக்க கட்சிய கான்ட்ராக்ட் காரங்கள் மூலம் கன்ட்ரோல்ல கொண்டு வந்துருக்கிங்களா?'' என ஏகத்துக்கும் எகிறினார் எடப்பாடி. அப்போது அவரிடமிருந்து ஒருமையிலும் வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன.

 

அதற்கு பதில் சொன்ன வேலுமணி, "அண்ணே, எல்லாம் விளம்பரத்திலும் உங்கள் தலைமையிலான ஆட்சியின் சாதனை என்றுதான் போட்டிருக்கிறேன்'' என்றார். "அது நான் இங்கு வர்றதுனால இன்னைக்கு போட்ட விளம்பரம், மத்த நாள்ல நீங்க என்ன விளம்பரம் போடுறீங்கனு எனக்கு தெரியாதா'' என வேலுமணியை நள்ளிரவு வரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் எடப்பாடி என்கிறார்கள் உடுமலை நகர அ.தி.மு.க.வினர்.

 

ddd

 

இப்படி எடப்பாடிக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட குடைச்சல்கள். ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சசிகலாவுடன் கைகோர்த்து எப்படியாவது முதல்வர் வேட்பாளர் ஆகிவிட வேண்டும். முதல்வரான பிறகு எடப்பாடியின் பாணியிலேயே சசிகலாவை கழற்றி விட்டு விடலாம் என திட்டமிடுகிறார்கள். அதில் விஜயபாஸ்கரும், வேலுமணியும் குறைந்தபட்சம் துணை முதல்வர் ஆகிவிடலாம் என கணக்கு போடுகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸும், மதுசூதனனும் சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இதையெல்லாம் மீறி எடப்பாடி, சசிகலாவை சேர்க்கக் கூடாது என கட்சிக்காரர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளார் எனச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

 

cnc


இந்நிலையில் சசிகலா தன்னை சந்திக்க வந்த கருணாஸ், தனியரசு, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆகியோரை, "இப்பொழுது எந்தச் சந்திப்பும் வேண்டாம். வரும் 16- ஆம் தேதி வரை எனது ஜாதகப்படி, நல்ல நேரம் இல்லை. 16- ஆம் தேதிக்கு மேல் பார்த்துக்கொள்ளலாம்'' என சொல்லியிருக்கிறார். 16- ஆம் தேதிக்கு மேல் சசிகலா அதிரடி சந்திப்புகளை நடத்த உள்ளார். இப்பொழுது ஒரு அ.தி.மு.க. தொண்டர்கூட இல்லாமல் சைலண்டாக இருக்கும் சசிகலாவின் தி.நகர் வீடு 16-ஆம் தேதிக்கு மேல் பிசியாகி விடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

 

இதற்கிடையே, மோடியின் வியூகப்படி பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான, கர்நாடகாவைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ் ஒரு ஃபார்முலாவை அனுப்பியிருக்கிறார். அதாவது, உனக்கு 60% எனக்கு 40% என்பதுபோல அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே சீட் டீல் போட நினைக்கிறார் மோடி,. கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொளகிறோம் என்கிறது பா.ஜ.க தரப்பு.

 

அதன்படி, அ.தி.மு.க. 100 சட்டமன்றத் தொகுதிகளை பா.ஜ.க.விடம் தர வேண்டும். அதை பா.ஜ.க., சசிகலா, தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றுக்கு பிரித்துக் கொடுக்கும். அத்துடன் நடைபெறவுள்ள மேற்குவங்கம், அசாம், ஆகிய மாநிலத் தேர்தலுக்கு பீகார் தேர்தலுக்கு கொடுத்தது போல ஒரு பெரிய நிதி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த எடப்பாடி சசிகலா இல்லாமலேயே அ.தி.மு.க. 130 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். பி.எல். சந்தோஷின் ஃபார்முலா ஜெயிக்குமா? எடப்பாடியின் வியூகம் ஜெயிக்குமா? என அமித்ஷா, பிரதமர் மோடி, பி.எல்.சந்தோஷ் ஆகிய மூவரும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.ஸுடன் வருகின்ற 22-ஆம் தேதி டெல்லியில் அமர்ந்து பேசுகிற பஞ்சாயத்தில் முடிவு வரும் என்கிறார்கள் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள்.

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.