Skip to main content

சேலம்: அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் வெற்றியை நழுவவிட்ட திமுக! காலை வாரிய உடன்பிறப்புகள்!!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை, தொடர்ந்து மூன்று முறை தக்க வைத்திருந்த திமுக, மயிரிழையில் நான்காம் முறையாக தலைவராகும் வாய்ப்பை இழந்திருக்கிறது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவைச் சேர்ந்த பார்வதி மணி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.


சேலம் மாவட்டத்தில், அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் திமுக 6, அதிமுக 6, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 

salem district ayodhyapattanam union election dmk party win


அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பதவி இந்தமுறை பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஒன்றியத்தின் முன்னாள் தலைவரான திமுகவின் விஜயகுமார், இம்முறை தனது மனைவி ஹேமலதாவை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தினார். விஜயகுமாரின் அண்ணன் செந்தில்குமாரின் மனைவி புவனேஸ்வரியும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டார். இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். 


இந்த ஒன்றியத்தில் விஜயகுமாரின் குடும்பத்திற்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. தனிப்பட்ட குணநலன்களும், பாரபட்சமின்றி உதவும் குணமும், கணிசமாக உள்ள வன்னியர் சமுதாய வாக்கு வங்கியும் விஜயகுமாருக்கு பக்கபலமாக உள்ளது. அதனால், தேர்தலுக்கு முன்பிருந்தே இந்தமுறை விஜயகுமாரின் மனைவிதான் ஒன்றியக்குழு தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லா மட்டத்திலும் நிலவியது.


அயோத்தியாப்பட்டணத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், திமுக, அதன் கூட்டணியான காங்கிரஸ் உறுப்பினரையும் சேர்த்தால் அக்கட்சிக்கு 7 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற செந்திலின் ஆதரவும் திமுகவுக்கு இருந்தது. மேற்கொண்டு, இரண்டு பேரின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், அதற்கான வேலைகளையும் விஜயகுமார் 'கச்சிதமாக' முடித்திருந்தார்.

salem district ayodhyapattanam union election dmk party win


அதன்படி, திமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த ஹேமலதா, புவனேஸ்வரி, பிரீத்தி மோகன், உஷா, ஆறுமுகம், பாலியாகவுண்டர், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற சாந்தி, சுயேச்சைகளாக வெற்றி பெற்ற பாரதி ஜெயக்குமார், சிந்தாமணி, செந்தில் ஆகியோரின் ஆதரவும் திமுக அணிக்கு இருந்தது.


ஆக, உறுதியாக நான்காம் முறையாகவும் விஜயகுமார் தரப்புதான் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், சனிக்கிழமை நடந்த தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை சந்தித்தனர். திமுக தரப்பில் ஹேமலதாவும், அதிமுக தரப்பில் அனுப்பூர் மணியின் மனைவி பார்வதியும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 


மறைமுகத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டு இருக்கும். சின்னமோ, வேட்பாளரின் புகைப்படமோ இருக்காது. வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக சீல் வைக்க வேண்டும். இதுதான் நடைமுறை. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், திமுகவுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 10 வாக்குகளைப் பெற்ற அதிமுகவின் பார்வதி மணி, முதன்முதலாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவியாக வெற்றி பெற்றார்.

salem district ayodhyapattanam union election dmk party win


இது ஒருபுறம் இருக்க, விஜயகுமாரின் குடும்பம் ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவினரே உள்ளடி வேலைகளில் இறங்கி வேலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி ராஜா, முன்னாள் ஒன்றிய நிர்வாகி கவுதமன் ஆகியோர் விஜயகுமாருக்கு எதிராக வேலை செய்தார்கள் என்கிறார்கள் அக்கட்சியின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். 


ஒருகாலத்தில் கவுதமனை கவிழ்த்துவிட்டுதான் ஒன்றிய பொறுப்புக்கு விஜயகுமார் வந்தார். அப்போது செய்த முன்வினைதான், இப்போது விஜயகுமாருக்கு எதிராக திரும்பி இருக்கிறது என்கிறார்கள். வீரபாண்டி ராஜாவிடம் இருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதும்கூட விஜயகுமாருக்கு எதிரான உள்குத்துகளுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். அதனால்தான், விஜயகுமாருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்களில் ஒருவரையே கருப்பு ஆடாக பயன்படுத்தி, அவரை வீழ்த்தியதாகவும் சொல்கிறார்கள். 


அதேநேரம், சொந்த கட்சியினரின் உள்ளடிகளால் அயோத்தியாப்பட்டணத்தை கோட்டையாக தக்க வைத்திருந்த திமுகவிடம் இருந்து இந்த முறை அதிமுக வெற்றியை தட்டிப் பறித்துவிட்டதே என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.

 

salem district ayodhyapattanam union election dmk party win


உள்குத்துகளால் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்ததால் விஜயகுமார் ரொம்பவே அப்செட் ஆனார். ஒருகட்டத்தில் மாலையில் நடைபெற இருக்கும் துணைத்தலைவர் தேர்தலையேகூட புறக்கணித்து விடலாம் என்றுகூட சிந்திக்கத் தொடங்கி இருந்தார். அவருடைய அண்ணன் செந்தில்குமார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விஜயகுமாருக்கு நம்பிக்கை அளித்தனர். 


இதையடுத்து, சனிக்கிழமை மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் திமுக தரப்பில் புவனேஸ்வரியும், அதிமுக தரப்பில் மோனிஷாவும் (சுயேச்சை) போட்டியிட்டனர். இந்த மறைமுகத் தேர்தலில் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இரு வேட்பாளர்களும் தலா 9 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். எங்கே இந்த வாய்ப்பும் கைநழுவிப் போய்விடுமோ என்று திமுகவினர் திக்...திக்... நிலையில் இருக்க, வெற்றியாளரைத் தேர்வு செய்ய குலுக்கல் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி துணைத்தலைவராக வெற்றி பெற்றார்.


காலையில் தலைவர் தேர்தலில் தோற்றாலும், மாலையில் துணைத்தலைவர் தேர்தலிலாவது வெற்றி கிடைத்ததே என்ற உற்சாகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். புவனேஸ்வரிக்கும், அவருடைய சகோதரியும், விஜயகுமாரின் மனைவியுமான ஹேமலதா ஆகிய இருவருக்கும் திமுகவினர் பூங்கொத்துகள் கொடுத்தும், மாலைகள், சால்வைகள் அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


ஏற்காடு ஒன்றியத்திலும் மொத்தமுள்ள 6 கவுன்சிலர் இடங்களில் திமுக, அதிமுகவும் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியினரிடம் விலை போனதால், அங்கேயும் அதிமுகவே தலைவர் பதவியைக் கைப்பற்றியது. ஆளுங்கட்சியை வெற்றி பெறச்செய்ய பெரும்தொகை கைமாறியதாக சொல்கின்றனர். சேலம் ஒன்றியத்திலும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சி கடைசி நேரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தாவியதாகவும் கூறுகின்றனர்.


உள்கட்சி பூசல்களாலும், உள்ளடி வேலைகளாலும், சேலம் மாவட்டத்தில் வெற்றி பெறவேண்டிய ஒன்றியங்களில்கூட இந்தமுறை திமுக கோட்டை விட்டிருக்கிறது.

 


 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.