Skip to main content

பிரதமருக்கு போன ரிப்போர்ட்! -டென்ஷனில் சீனியர் அமைச்சர்கள்! ரகசிய முயற்சிகளில் எடப்பாடி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
ddd


தமிழக அரசியல்வாதிகளின் பொம்மை விளையாட்டாக பல ஆண்டுகளாக உருட்டி விளையாடப் படுகிறது 7 தமிழர் விடுதலை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டமன்றத்திலும் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதன் மீது ஒப்புதல் தராமல் கிடப்பிலேயே வைத்திருந்தார் பன்வாரிலால்.

பொதுவாக, அரசு அனுப்பும் கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பினால் அந்த கோப்புகளில் உள்ள பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தி இரண்டாவது முறையாக அதே கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைக்கும் சட்ட அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்படி அனுப்பப்படும் போது அதற்கு கவர்னர் ஒப்புதலளிக்க வேண்டும். இதற்கு காலவரம்பு ஏதுமில்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு, அமைச்சரவை தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டார் கவர்னர்.

இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த ஒரு வழக்கில், கவர்னரின் செயல் குறித்த ஆதங்கத்தை வெளியிட்டனர் நீதிபதிகள். இதனையடுத்து, கடந்த புதன்கிழமை டெல்லிக்கு அவசரமாக அழைக்கப் பட்டார் கவர்னர் பன்வாரிலால். அவரது பயண விவரங்களை அறிந்து டென்ஷனில் இருக்கிறார் எடப்பாடி.

இது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, ""டெல்லியில் பிரதமர் மோடியை முதலில் சந்தித்தார் கவர்னர். பிரதமரின் செயலாளர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் உடன் இருந்தனர். பிரதமரிடம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து இரு வாரங்களுக்கு ஒரு முறை டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட் தொடர் பான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளேன் என சொல்லி, அவற்றை ஒப்படைத்திருக்கிறார்.

தமிழக அரசின் சீக்ரெட்ஸ் என எழுதப் பட்ட அந்த கோப்புகளில், முதல்வர் எடப்பாடி தொடங்கி அனைத்து அமைச்சர்களின் ஊழல் ரெக்கார்டுகள் இருப்பதை பிரதமரிடம் விவரித்த கவர்னர், எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் பினாமிகள் குறித்த விபரங்களையும் தெரிவித்திருக்கிறார். அப்போது, ""பழனிச்சாமி அரசின் 4 ஆண்டுகால நிர்வாகத்தை உன்னிப்பாகத்தான் கவனித்து வருகிறேன். விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றிருக்கிறார் பிரதமர். ""தேர்தலில் தனித்து இயங்குவதற்காக பணத்தை பதுக்குகின்றனர். அதன் வழிகளை அடைக்க வேண்டும் என கடந்த மாதம் நீங்கள் அனுப்பிய ரிப்போர்ட்படிதான் தமிழகத்தில் வருமானவரித்துறை ஆக்ஷனில் இறங்கியுள்ளது'' என்றும் கவர்னரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரதமர்.

இதனையடுத்து, 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் கோர்ட் சொல்லியிருப்பதை வருத்தப்பட்டு பேசிய கவர்னர், மத்திய உள்துறையின் அறிவுறுத்தலின்படிதான் அதன்மீது முடிவெடுக்காமல் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்தார். நீதிமன்றங்கள் என்னை நோக்கி விமர்சனங்கள் செய்வதை தமிழக முதல்வரும் அமைச்சர்களும் ரசிக்கின்றனர் எனவும் சொல்லியிருக்கிறார். மென்மையாக சிரித்த பிரதமர் மோடி, பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகம்தான் நம் இலக்கு என சொல்லி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்திக்க கவர்னரை அனுப்பி வைத்தார்.

மோடியிடம் கூறியதையே அமித்ஷாவிடமும் ஒப்புவித்துள்ளார் கவர்னர். அப்போது, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை முற்றுபெறாமல் இருப்பதால் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) கருத்தைக் கேட்போம். அதன் பதிலைப் பொறுத்து முடிவெடுத்து, கோர்ட்டில் தெரிவிப்போம் என கவர்னருக்கு தெம்பூட்டியிருக்கிறார் அமித்ஷா.

மேலும், தமிழக அரசின் டெண்டர் ஊழல்கள் முதல் கொரோனா ஊழல்கள் வரை அனைத்தும் ஆராயப்படுவதையும், உங்களின் ரிப்போர்ட்டுகளுக்கும், ஐ.பி. (மத்திய உளவுத்துறை) அனுப்பும் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் கவர்னரிடம் அமித்ஷா பகிர்ந்துகொள்ள, ராஜ்பவனை எடப்பாடி மதிப்பதில்லை என்கிற தனது கோபத்தை அமீத்ஷாவிடம் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

மோடி மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, எடப்பாடிக்கு பயத்தை டெல்லி விரைவில் காட்டும் என்கிற நம்பிக்கையில் கவர்னரின் கோபம் தணிந்திருக்கிறது. இந்த நிலையில், கவர்னர் கொடுத்துள்ள எடப்பாடி அரசின் ஊழல் ரெக்கார்டுகளை ஆராயுமாறு மோடியின் செயலாளர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் ஒப்படைத்திருக்கிறது பிர தமர் அலுவலகம்‘என்று கவர்னரின் டெல்லி பயணத் தில் நடந்தவைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, டெல்லிக்கு கவர்னர் அழைக்கப்பட்டதிலிருந்தே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முன்னாள் கேரளா கவர்னரும் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியுமான சதாசிவத்தின் உதவியை நாடியிருந்தார் எடப்பாடி. அதேபோல, பிரதமர் அலுவலகத்தில் தொடர்புவைத்துள்ள தனது சமூக தொழிலதிபர்கள் மூலமாகவும் முயற்சித்தார்.

அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் டெல்லியில் துவங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் எடப்பாடியையும் மூத்த அமைச்சர்களையும் டென்சனாக்கியிருக்கிறது. இதனால் சில முக்கிய டெண்டர் விவகாரத்தில் கூட எடப்பாடியால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த விவகாரத்தை கிடப்பில் வைத்துவிட்டு டெல்லியை சமாதானப் படுத்தும் ரகசிய முயற்சிகளில் குதித்துள்ளார் என்கிறார்கள் மத்திய உளவுத்துறையினர்.

-இரா.இளையசெல்வன்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.