Skip to main content

"இன்று மணிப்பூரில் நடப்பது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்" - முனைவர் ராமசுப்ரமணியம் விளக்கம்!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Ramasubramaniam Interview

 

மணிப்பூர் விவகாரம் குறித்த தன்னுடைய கருத்துக்களை விரிவாக மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார் 

 

மணிப்பூர் விவகாரம் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. முதலில் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். இது குறித்த விவாதம் நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். பிரதமர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஐரோப்பிய யூனியனில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இது குறித்துப் பேசியுள்ளார். உலகமே இப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதித்து வருகிறது. அதனுடைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

காங்கிரஸ் ஆட்சியில் நிர்பயா விவகாரம் நடந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தொலைக்காட்சியில் வந்து மக்களுக்கு வாக்குறுதியையும் நம்பிக்கையையும் அளித்தார். ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் இத்தனை நாட்கள் கழித்துப் பிரதமர் மோடி வெறும் 30 நொடிகள் பேசுகிறார். பெண்களை நிர்வாணமாகத் தெருவில் இழுத்து வரும் காட்சிகள் மனதைப் பதைபதைக்க வைத்தன. மணிப்பூரில் மெஜாரிட்டியாக இருக்கும் மெய்தேய் இன மக்களுக்கு ஆதரவாக அங்குள்ள முதலமைச்சர் இருக்கிறார். இவ்வளவு நடந்தும் அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இப்போது குக்கி பழங்குடியின மக்கள் மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்று பாஜகவினர் கதை கட்டி வருகின்றனர். 

 

அரசுக்குச் சம்பந்தமே இல்லாத நிர்பயா விஷயத்தில் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். மணிப்பூர் விஷயத்தில் இந்த வீடியோ மட்டும் வெளிவராவிட்டால் ஒட்டுமொத்த வன்முறையையும் மூடி மறைத்திருப்பார்கள். இது போன்ற நூற்றுக்கணக்கான விஷயங்கள் நடந்திருக்கின்றன என்று அந்த மாநில முதலமைச்சரே சொல்கிறார். உள்துறை அமைச்சருக்கு இது எதுவுமே தெரியாதா? இன்று மணிப்பூரில் நடப்பது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

 

அனைத்து மதங்களும் தழைத்தோங்கும் நாடு இந்தியா. இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதால் அமெரிக்காவுக்கு மோடி சென்றபோது அவருடைய பேச்சைச் சிலர் புறக்கணித்தனர். ஒபாமாவும் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து விமர்சித்தார். மற்ற மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் ஒரு இனத்தையே அழித்துவிட வேண்டும் என்கிற வகையில் வன்முறைகள் நடப்பதில்லை. மணிப்பூரில் இப்போது குக்கி இன மக்கள் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வருகின்றனர். வானதி சீனிவாசன் எப்போதும் கட்சி சார்ந்து தான் பேசுவார். 

 

குஷ்பூ ஒரு சிறந்த நடிகை. தன்னை திமுகவைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் விமர்சித்து விட்டார் என்று அவ்வளவு கோபப்பட்டார். ஆனால் பெண்களுக்கு ஒரு பிரச்சனை நடந்தால் குரல் கொடுக்க அவர் வருவதில்லை. நடிப்பையே தன்னுடைய வாழ்க்கையாக அவர் மாற்றிக்கொண்டுள்ளார். ஸ்மிருதி இராணியும் அப்படித்தான். உச்சநீதிமன்றம் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசிய பிறகுதான் பிரதமர் பேசுகிறார். மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர். இதற்கான எதிர்வினை நிச்சயம் இருக்கும்.
 

மணிப்பூர் பிரச்சனை தொடர்பான முனைவர் ராமசுப்ரமணியம் முழு கருத்தினை காண வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்...

 

 

Next Story

வாக்குப்பதிவு முடிந்ததும் தொடங்கிய வன்முறை; மணிப்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Incident at CRPF soldiers in Manipur

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் 2வது கட்டத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குக்கி இனக்குழு நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 2 பாதுகாப்பு படை வீரர்களை, அங்கிருந்த மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.