Skip to main content

" இடைத்தேர்தல் தோல்வி கொடுத்த பயமே வேளாண் சட்டம் வரை எதிரொலிக்கிறது.." - ராம சுப்ரமணியன் அதிரடி!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

xv

 

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில், திடீர் திருப்பமாக கடந்த வாரம் தொலைக்காட்சிகளில் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இருந்தாலும் வட மாநிலங்களில் போராடும் விவசாயிகள் மசோதாவை நாடாளுமன்றத்தில் வாபஸ் வாங்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்கள்.

 

இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்ற கேள்வியைப் பொருளாதார ஆய்வாளர் ராம சுப்ரமணியன் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு...

 

" ஒரு ஆண்டுக்கு மேலாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தீண்டாமை சுவர் போல வைத்து அவர்களை பார்க்க முடியாமல் செய்தார்கள். கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த சட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு செய்கிறார்கள். அதுவும் பிரதமர் மோடி அவர்கள், இது நல்ல சட்டம் தான், ஆனால் இதனை விவசாயிகளுக்குப் புரிய வைக்க முடியாததால் அதனை நாங்கள் விலக்கிக்கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். எத்தனையோ குழுக்களை அமைத்துப் பார்த்தார்கள், விவசாயிகள் எதிர்ப்பு குறையவில்லை என்ற காரணத்தால் தற்போது பல்டி அடித்துள்ளார்கள். 

 

குறிப்பாக வரப் போகின்ற தேர்தல் அவர்களின் மனதை மாற்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலைக் கவனிக்க வேண்டும். பல இடங்களில் ஆளும் கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த கட்சி மண்ணை கவ்வியது. வெற்றி பெறுவோம் என்று அசால்ட்டாக இருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த தோல்வி வரப் போகின்ற பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடக்கப்போகும் தேர்தல்களில் எதிரொலிக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கருதுகிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்று பார்க்க வேண்டும். அடுத்து உ.பியில் லக்கிம்பூர் விவகாரம். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவர்களை அவதூறாகப் பேசியது உள்ளிட்டவை அங்கே இன்னமும் அனலாகக் கொதித்து வருகிறது.

 

அதை எல்லாம் சரி செய்ய இந்த நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், காலீஸ்தான் தீவிரவாதிகள் என்று பேசியதை எல்லாம் விவசாயிகள் மறந்துவிட்டு வாக்களித்துவிடுவார்கள் என்று எந்த அடிப்படையில் இவர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் வாக்களிக்கும் போது அனைத்து விவசாயிகளுக்கும் இவர்கள் பேசியது நினைவில் வந்து போகாமல் இருக்காது. அது நிச்சயம் வாக்குகள் எண்ணப்படும் போது பிரதிபலிக்கும். 

 

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற  ஐந்து மாநில தேர்தலில் பாஜக கடந்த முறை வெற்றிபெற்ற மாதிரி மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலை என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். பணமதிப்பிழக்க நடவடிக்கையின் போது பிரதமர் சில உறுதிமொழிகளைத் தந்தார். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், அனைத்து சரியாகிவிடும் என்றார். ஆனால் 50 நாட்கள் அல்ல 5 வருடம் ஆகியும் எதுவும் சரியாகவில்லை. அதே போல் இந்த விவசாய மசோதா எவ்வித விவாதங்களும் இன்றி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை அதோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை.

 

இந்த பணமதிப்பிழப்பு எவ்வளவு முட்டாள்தனமானது என்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடமாகவே வைத்துள்ளார்கள். இந்தியப் பொருளாதாரமே அதன் பிறகுதான் வீழ்ச்சி அடைந்தது. எனவே இரண்டையும் நாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். விவசாய சட்டத்தைப் பொறுத்தவரையில் முதல் நாளில் இருந்தே அனைவரும் எதிர்த்துத்தான் வருகிறார்கள். தற்போதைய அரசின் முடிவு என்பது விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்" என்றார்.

 

 

Next Story

ஆளுநரின் துப்பறியும் கதை; அப்செட்டில் அமித்ஷா!

Next Story

பிரதமர் மோடியின் ‘5டி’ ; முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள் - ராம சுப்ரமணியன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ramasubramanian | Cmstalin | Cmstalin speech | Modi |

 

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பாட்காஸ்ட் மூலம் மக்களிடம் பல்வேறு அரசியல் சார்ந்த விசயங்களைப் பேசி வருகிறார். அதில், பாஜக ஆட்சி பற்றியும் பேசி தனது இரண்டாவது ஆடியோ பாட்காஸ்டை வெளியிட்டார். இது குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.

 

இந்தியா முழுவதும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து பேசுபொருளாகியுள்ளது என்பது உண்மை. மேலும், ஆடியோவில் சொல்லப்படும் விசயங்கள் இந்திய மக்களிடையே சேர்கிறது என்ற கவலை பாஜகவிடம் உருவாகியுள்ளது. இதனால், ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வை குறிவைக்க முயல்கின்றனர். ஸ்டாலின் பேசிய ஆடியோ ‘நீங்கள் சொன்ன மகளிர் உரிமைத் தொகை வந்துவிட்டது... ஆனால், மோடி அவர்கள் தெரிவித்த 15 லட்சம் வரவில்லை’ என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது. அடுத்து, குஜராத்தை வளமாக மாற்றுவேன் என்று கூறிய பொய் பிம்பங்களை பற்றியும் முதல்வர் பேசியுள்ளார். 

 

இதற்குப் பல ஆண்டுகள் முன்பு மோடி அறிவித்த, 5டி- வளர்ச்சியாக திறமை, பாரம்பரியம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்வர் சொல்கிறார், ‘5டி-க்கு பதில் 5சி, வகுப்புவாதம், ஊழல், கார்ப்பரேட் முதலாளித்துவம், ஏமாற்றுதல் மற்றும் குணநலன் படுகொலை தான் இருக்கிறது’ என விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா கூட்டணியைக் கண்டு சிலர் அஞ்சியுள்ளனர். தொடர்ந்து, சிஏஜி அறிக்கையின் 7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேசினால் பயம் வந்துவிடும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

இதன் தொடர்ச்சியாக, அயோத்தி திட்டத்தில் கோவில் கட்ட இடம் வாங்கியதில் குளறுபடி, நடுத்தர வர்க்கத்தினரை விமானத்தில் அழைத்து செல்லும் ‘உடான்’ திட்டத்தின்படி தமிழகத்தில் சேலத்தை தவிர பிற அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. சினிமாவில் வரும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போலத்தான் ரயில்வேயிலும் செலவுகள் கூடியுள்ளது. தொடர்ந்து, ஓய்வூதிய திட்ட நிதிகளை எடுத்து விளம்பரங்களுக்கு செலவிட்டது. சுங்கவரியை சிலரிடம் வசூலிக்காமல் விட்டது. அதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் கடிதம் அனுப்பியது முதல் பாரத்மாலா திட்டத்திலும் நிறைய சிக்கல் உள்ளது எனவும் முதல்வர் பேசியுள்ளார். பின்பு, துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் 1270% நிதி உயர்ந்தது என்றும் கூறியுள்ளார். 

 

ஏற்கனவே, தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலும், இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது, ஒரே தொலைப்பேசியை வைத்து பல சிகிச்சைகளை பெற்றது. ஒரே ஆதார் எண்ணில் பல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை தகவலையும் ஸ்டாலின் எடுத்து சொல்லி ‘இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இ.ந்.தி.யா. கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். மேலும், ஊழலின் உறைவிடமாக பாஜக இருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலும், பத்திரிகைளிலும் கூட பேசுவதில்லை என ஆதங்கத்துடன் முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, முதல்வரின் இந்த பேச்சு இந்திய மக்களை சென்றடையும் என்பதே எனது கருத்து.

 

இந்த சுங்கவரி உயர்வு குறித்து, நக்கீரன் களத்திற்குச் சென்று நிலவரத்தை தெரிந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்தது. இதேசமயம், சிஏஜி அறிக்கை குறித்து  பாஜக, ‘இந்த அறிக்கை எல்லா காலத்திலும் வரக்கூடியது தான். திட்டங்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. மேலும், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு தான் செயல்படுத்தும்’ எனக் கூறியிருந்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. போன்றவர்கள் ‘இந்த முறைகேடுகள் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடந்துள்ளது’ எனத் தக்க பதிலையும் அளித்தனர். எனவே, எந்த குற்றச்சாட்டையும் பாஜக மீது வைக்க முடியாது என்றதும் பின்னர் வந்த சிஏஜி அறிக்கையும், மு.க. ஸ்டாலின் கூறிய கருத்தும் பாஜகவினரை அச்சமடைய வைத்துள்ளது என்பது உண்மை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...