Skip to main content

ஒருமுறை மட்டுமல்ல... மூன்று முறை முதலமைச்சராவார் ரஜினி... ரசிகரின் பரபரப்பு பேட்டி...

Published on 04/12/2020 | Edited on 04/12/2020
ddd

 

 

ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அவரது தீவிர, உண்மையான ரசிகர்கள் மனநிலை எப்படி உள்ளது? அவர்களது எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து அறிய சிலரை சந்தித்தோம்.
 

அதில் ஒருவர் பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திகேயன். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தூய்மையான ஆட்சி நடத்த வேண்டும், அவர் நிச்சயம் வருவார் என்று அவரோடு இணைந்து பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் ஆன்மிகத்திலும் பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர், பெரம்பலூர் நகரில் வசிக்கும் தீவிர ரசிகரான கார்த்திகேயன். 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

 

ரஜினி மீதும் அவரது நடிப்பின் மீதும் அதிதீவிர ரசிகர் அபிமானியான இவர், ரஜினியைப் போலவே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். ரஜினியைப் போலவே அடிக்கடி இமயமலை, ரிஷிகேஷ், கேதார்நாத் உட்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்பவர். அங்கு செல்லும்போது ரஜினியை இவர்  பல முறை சந்தித்துள்ளார். ஆனால் அவரிடம் சென்று பேசியதில்லை. தூரத்தில் இருந்து அவரை ரசிப்பதோடு சரி. 

 

ரஜினி ரசிகராக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தில் விவசாய அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார் கார்த்திகேயன்.

 

ddd

 

ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ளது குறித்து அவரிடம் கேட்டோம். அதோடு ஜெயலலிதா, எம்ஜிஆர், கலைஞர் மூவருக்கும் தமிழகத்தில் மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது, அந்த முகத்திற்காக வாக்குகள் விழுந்தது. அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராக அமர்ந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் நானே முதல்வர் என்று மூவருமே வெளிப்படையாக மக்களிடம் கூறி வெற்றி பெற்று முதல்வர் ஆனார்கள். ஆனால் ரஜினி ஆட்சியை பிடித்தால் வேறு ஒருவரை முதல்வராக உட்கார வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் கேட்டோம்.

 

இதற்கு பதில் அளித்த கார்த்திகேயன், ''நான் தீவிர ரஜினி ரசிகனாக இருந்த காலத்திலிருந்தே அவர் அரசியலுக்கு வருவார், கட்சி ஆரம்பிப்பார். தமிழக முதல்-அமைச்சர் ஆவார் என்று கூறியிருந்தேன். அப்போதெல்லாம் பல அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என்னை கேலியும் கிண்டலும் செய்தனர். 

 

ஆனால் என் உள்மனசாட்சி அவர் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்று கூறிக்கொண்டே இருந்தது. அதன்படி தற்போது வெளிப்படையாக அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். நிச்சயமாக அவர் ஒருமுறை மட்டுமல்ல, மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதலமைச்சராகி நல்லாட்சி நடத்துவார். அவர் மற்றவர்களை முதல்வராக்க வேண்டும் என்று கூறுவது தனக்கு ஆசையில்லை என்று வெளிப்படுத்துவதற்காக தான். ஆனால் சூழ்நிலை கருதி அவரே முதல்வராக ஆட்சியில் அமர்வார். ஆன்மீக அரசியல் என்று அவர் கூறுவதற்கு காரணம் பொதுவாக ஆன்மீகம் இறைபக்தி உள்ளவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருப்பார்கள். இருக்க வேண்டும். அதன்படி இருப்பவர். நடந்து கொள்பவர்.

 

ரஜினி நேர்மையின் இலக்கணம். உழைப்பிற்கு எடுத்துக்காட்டு. இன்றைக்கு அரசியல் பெரும்பாலான தலைவர்களின் குடும்பத்தினர் பிள்ளைகள் இறைவனை தேடி கோயில் கோயிலாக ஓடுகிறார்கள். வெளிப்படையாகவே கோயிலை நாடிச் செல்கிறார்கள். 

 

ddd

 

திரையில் நடிப்பது என்பது வேறு. ஆனால் மக்களிடம் நடிக்கக்கூடாது என்கிறார் ரஜினி. அப்படிப்பட்டவரை தமிழக மக்கள்  தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். அதன் மூலம் தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான வெளிப்படை தன்மையான ஆட்சியாக நடத்துவார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார். அதில் அவர்களிடம் ஆலோசனை கேட்டார். அவரது கருத்தையும் அப்போது வெளிப்படுத்தினார்.

 

உடனே  பலர் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கமாட்டார் என்று பேச ஆரம்பித்தனர். இதைவிட கொடுமை ரசிகர் மன்ற பொறுப்பில் உள்ளவர்கள் கூட ரஜினி அரசியல் கட்சி துவக்க மாட்டார் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். அதற்கு உதாரணமாக வரும் 12. 12. 2020 அன்று ரஜினி அவர்களே பிறந்தநாள் வருகிறது அதற்காக பெரம்பலூரில் ஒரு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சிலரே வந்தனர். ஆனால் அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்ததும் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஒன்று கூடி வெடி வெடித்துக் கொண்டாடினார்கள். 

 

தவறான பல நபர்கள் மன்ற பொறுப்பில் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் மற்ற கட்சிகளில் உள்ளவர்களை போல அரசியலுக்கு செல்வது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஊறிப் போய் உள்ளனர். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற நோக்கத்தில் உள்ளனர். இது பெரும்பாலான மாவட்டத்தில் உள்ளது. இதை எல்லாம் களையெடுத்து உண்மையான நேர்மையான மன்ற பொறுப்பாளர்கள் அறிவிக்க போவதாகவும் மன்ற பொறுப்புகளில் பெரியளவில் மாற்றம் செய்யப்போவதாக அவரே கூறியுள்ளார். அது நிச்சயம் நடக்கும். போலிகளை அவர் நிச்சயம் களை எடுப்பார்.

 

ரஜினிக்கு வயதாகிவிட்டது, ரஜினி ரசிகர்களுக்கு வயது கடந்துவிட்டது, அரசியலில் வெற்றி பெற முடியாது என்று பலர் பலவிதமாக பேசுகிறார்கள். அவை அனைத்தையும்  ரஜினி மாற்றிக் காட்டப் போகிறார். தன் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை மட்டும் நம்பி அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரது தீவிர ரசிகர்கள் அவர்களது ஒவ்வொருவர் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட ரசிகர்கள் ரசிகைகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல லட்சக்கணக்கான பேர் உள்ளனர். அவர்கள் வெளிப்படையாக ரஜினி மீது உள்ள அபிமானத்தை காட்டிக் கொள்ளவில்லை. அப்படிப்பட்டவர்கள் ரஜினியை நிச்சயம் அரசியலில் ஆதரிப்பார்கள். ஆதரிக்கப் போகிறார்கள்.

 

ரஜினி கூறியது போன்று அதிசயம் நடக்கும். இப்போது இதை செய்யவில்லை என்றால் எப்போது தான் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டை ரஜினி எடுத்துள்ளார். பலர் பல விதமாக பேசலாம் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை விமர்சனம் செய்யலாம். அவற்றையெல்லாம்  முறியடித்து அவர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து முதல்வராக அமர்வது உறுதி. அவருக்கு மக்களும் இறைவனும் துணையாக உள்ளனர் என்று அதிரடியாக பேசி அசர வைத்துள்ளார் கார்த்திகேயன்.

 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!